பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 30, 2012

மீட்பு...

மிகுந்த கவலையோடுதான்

நீ பேசிக்கொண்டிருந்தாய்..

அவிழ்க்க முடியாத முடிச்சுகள் நிரம்பிய

சிக்கலின் மையத்தில் நின்றாய்..

.

எங்கோ தொலைந்துபோயிருந்த தீர்வின் முனையை

என்னால் கண்டுபிடிக்க முடியுமென்று தோன்றவில்லை

என்னால் தீர்க்கமுடியுமென்ற நம்பிக்கையில்

நீ வந்திருப்பாய் என்றும் தோன்றவில்லை..

யாரிடமாவது சொன்னால்

ஆறுதலாயிருக்குமென்று வந்திருக்கலாம்..

.

தோளின் முனையில் நழுவத்துடிக்கும்

முந்தானை பற்றியோ

அது விலகியிருப்பதால் தெரியும்

அங்கங்கள் பற்றியோ

உனக்கு எந்தக் கவணமும் இல்லை

உன் வேதனையின் தீவிரம் அப்படி.

.

ஆனால்..

என் கவணம் முழுவதும் அதில்தான்.

அந்த அறைக்குள்

இரவின் கணமும் மார்கழியின் குளிரும்

நொடிக்கு நொடி கூடிக்கொண்டேயிருந்தன..

.

திடீரென்று நீ விசும்பி அழத்தொடங்கினாய்

என் ஆண்மனம் நடுங்கியது

அவமானமும் சங்கடமும் நிலைகுலைத்தது

வழக்கமான ஆறுதல் வார்த்தைகளை

அனிச்சையாகச் சொன்னேன்

விசும்பல் கூடி என் தோளில் சாய்ந்து

மேலும் தேம்பினாய்..

.

சட்டையைப் பிடித்திருந்த கை

இறுக்கி இழுத்தபடியே இருந்தது

தோளில் ஊறிய ஈரம் சூடாக இருந்தது

உன் மூச்சுக் காற்றுக்கு பயந்து

முகத்தைத் திருப்பிக்கொண்டேன்..

என்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையின் அழுத்தத்தால்

கூனிக்குறுகினேன்..

.

ஒருவாரத்துக்குப் பின்..

என் முயற்சி ஏதுமின்றியே

பிரச்சனைகள் தீர்ந்தபோதும்

தேடிவந்து நன்றி சொல்கிறாய்..

அன்று உன் தோள்கள் இல்லையென்றால்

செத்துப்போயிருப்பேன் என்கிறாய்..

ஒரு தோழனையும் சகோதரனையும்விட

உயர்ந்த இடத்தில் அமர்த்துகிறாய்..

.

என் மொத்த உடம்பும் கூசுகிறது

வேதனை கொப்பளமிடுகிறது

குற்ற உணர்வால் எட்டி உதைக்கப்பட்டு

ஒரு அடிமைபோல் வதங்கிக்கிடக்கிறேன்

என்றாவது ஓர்நாள்

நான் சொல்லி அழுவதற்கு

உன் தோள்களைக் கொடுத்தால்

எனக்கும் கிடைக்கலாம் மீட்பு..

- Director Charles...

No comments: