பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 10, 2011

நத்தைக் கனவு


ஒரு நீண்ட படிக்கட்டின்
ஒரு முனையில் நானும்
மறு முனையில் என் நினைவுகளுமாய்
கண் முன் விரியும் வெளியை வெறித்தபடி...
நேற்றைய பூங்காவின் மகிழ்வு
இன்று காணமல் போயிருந்தது
இடைவெளியை நிரப்பும்
கவிதைகளை சமைத்துக் கொண்டு நானும்
அதற்கான சொற்களில் உன் ஞாபகங்களும்...
கடந்து போகும் நகர்ப் பேருந்தின்
கரும் புகையை சுவாசிக்க
திணறும் மூச்சுக் குழலென
திகைத்து கடக்கிறது காலம்...
நிஜங்களை ஏற்க மறுத்து
நிழல்களோடு சண்டை பிடிக்கிறது
வாழ்க்கையை திருடும் கனவுகள்...
அனைத்தும் வேகமாய் மாறிவிட்ட உலகில்
இன்னும் நத்தைக் கனவுகளோடு
காத்திருக்கிறது உனக்கான
இரவுகளில் உதிராத சில விண்மீன்கள்...
பறவைகளின் மொழியை
இன்னொரு பறவை மட்டுமே அறியும்
சிறு நெல் மணிக்கென
காகிதங்களைப் கவ்வும் கிளிகள்
ஒரு வேளை நேசிக்கப் படலாம்
விரும்பும் சீட்டினை எடுத்தால்...
தந்திகள் அறுபட்ட வீணையென
ஒதுக்குப் புறமாய் அலங்காரப் பொருளாய்
உன் வீட்டில் நீ வைத்திருக்கலாம்
நம் நேசத்தையும் சட்டமிடப்பட்ட
புகைப் படங்களிலும்
யாரும் எடுத்து விடாத
புத்தகத்தின் இடுக்குகளிலும்...

No comments: