பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 9, 2012

இன்னொரு உலகம்

நீண்டுயர்ந்த சுவர் முன் நிற்கிறேன்
அது பிரம்மாண்டம்
அது புதிர்
அது வியப்பை எனக்குள் விதைக்கிறது..

சிலர் ஏணியை வைத்து மேலேற முயற்சிக்க
முடியாத சிலரோ சுவரின் காது பதித்து
சப்தமொன்றை ஆராய்கிறார்கள்...

காகிதத்தை எடுத்துக் கொண்டு
தனிமையில் அமர்கிறேன்...
எப்படி இருக்கும் சுவர் மறைத்த மறுபுறம்?

புல்வெளியாக, பாலையாக
கடலாக, பெரு நீர்விழ்ச்சியாக

ஒரு வேளை பகலும் இரவும் இருக்குமா
பகல் மட்டுமே இருக்குமோ
இல்லை இரவு நீளுமோ

போய் பார்த்து விட ஆசை தான்
எனக்கு முன் யார் போயிருக்கிறார்கள்
போய்த் திரும்பியவர்கள் இருகிறார்களா?

அறிந்தவற்றை மட்டுமே சிந்திக்க
அறியா வெளி நிரப்பி அமையுமோ

சூரியனும்
நிலவே இல்லாததுமான
ஒரு சிவப்பு ஆகாயம் விரியலாம்
மொழி இல்லா சைகைகளும்...
அல்லது
உயிர் வாடையற்ற ஒரு
புதை குழி என்னை இழுத்து மூடலாம்...

இக் காகிதத்தை பத்திரப்படுத்திக் கொள்கிறேன்
மறுபுறம் செல்லும் முயற்சியில் வென்றால்
அனைவருக்கும் வாசித்துக் காட்டலாம்
அல்லது
என்னையே நான் யாரென்றும் கேட்கும்
மனப் பிறழ்வை அடையலாம்
கொஞ்சம் காத்திரு
திரும்பி நான் வந்தாலும் வரலாம்

எல்லோருக்கும்
இன்னொரு உலகம்
இருக்கிறது.
எல்லோருக்குள்ளும்
இன்னொரு உலகம்
இருக்கிறது...



May 8, 2012

தேவதையின் வாசம்

தேவதையின் வாசம் அறையெங்கும்
சற்று முன்பு தான் வந்திருக்கலாம்
நான் இல்லாத நேரம்
சற்றே தயங்கி இருக்கலாம்
வெள்ளைக் கொக்கின் சிறகில்
ஒரு மெத்தை செய்து வைத்திருந்தேன்
அதை ரசித்திருக்கலாம்
அறையெங்கும் இரைந்து கிடக்கும்
புத்தகங்களையும்
ஒதுக்கி வைக்கப் பட்ட காலி மதுப் புட்டிகளையும்
கருகி தீந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளும்
தேவதையை சரிவர வரவேற்றிருக்காது தான்
நடுவில் தொங்கும் துணி கயிற்றில்
சாயம் போன உள்ளாடைகள்
மடிக்கப் படாத போர்வை
சுருட்டப் படாத கோரைப் பாய்
தேவதைக்கு இது புதியதாய் இருந்திருக்கலாம்
நாசி துவாரங்களில் துர்நாற்றம்
கால்களில் பிசுபிசுப்பென
ஓரமாய் வீசப் பட்ட லுங்கிகளை
வெறுத்துப் பார்த்திருக்கலாம்
வேறு வழிகள் இல்லை
கேட்டு விடலாம் யார் வேண்டுமென?
தயங்கியபடி சொன்னது
என் பெயரை
என் முகவரியை
நானில்லை அது என்று சொல்லி
கீழிறங்கும் தேவதையை
வேடிக்கை பார்க்கிறேன்
எனைச் சுற்றிலும் மணம் கமழ
பூக்களில் சிலவற்றை உதிர்த்துச் சென்றிருக்கிறது
நிறைகிறேன் நான்...

.....
...
..
நேயர் விருப்பப் பாடலொன்று
வானொலியில் ஒலிக்கிறது
"என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளை எங்கிருந்தாய்"....

காதல் களத்தில்

ஒரு விளையாட்டின் இறுதிக் கட்டப் பரபரப்பில் இருக்கிறாய்
களம் முழுதும் சுழன்றடித்து
சூழ்நிலையை உனதாக்கிக் கொள்கிறாய்
உன் மீதான குற்றச்சாட்டுகளில்
என் ஆர்வமின்மை உன்னை அச்சம் கொள்ள செய்கிறது
எனக்கு எப்படியேனும் விளக்கிவிட வேண்டுமாய்த் தவிக்கிறாய்
ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறாய்
அல்லது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள எத்தனிக்கிறாய்
நேற்று வரை சுய விலக்கம் கொண்டிருந்த நீ - இன்று என் தோள் சாய்ந்து விடத் துடிக்கிறாய்
என் தோள்களோ சுமந்த பாரத்தில்
காய்ப்புக் காய்த்துக் கிடக்கின்றன
எனினும்
எனை ஏற்றுக் கொள்ளேன் என்ற
உன் அழுத்திய விளி கேட்டு
என் கர்ப்ப பாத்திரம் திறந்து
உன்னை இட்டு மூடிக் கொள்கிறேன்.

அதிஜீவனம்

சிறியதென்றாலும்
அதுவும் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறது
ஆனால் சுற்றிலும் அடைத்துக்கொணடபடி
பூக்களையிட்டுக் காட்டியபடி
பிரார்த்தித்த படி

என்றாலும்
இக் குன்றுப் புல்லிற்கு
வேனலினூடே
அதிகம் ஜீவிக்க இயலுமோ?

கொன்றை மரமே கொன்றை மரமே
வெயிலை உருக்கி
ஸ்வர்ணமாக்கி
காதில் அணியும் கலையை
அதற்குச் சொல்லிக் கொடுக்கிறாயா?

ஊஞ்சல் மரமே ஊஞ்சல் மரமே
வேனலை எடுத்து
குளிர்த் தொப்பியாக்கி
தலையில் வைத்துக் கொண்டு விளையாடி
அதை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறாயா?

இல்லையெனில்
சிறிதன்றோ என்றெண்ணி
வேனலதை
பசுமைக்குத் திறந்து வீசிவிடும்..
‎(மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த கவிதை)
வேனில் காலத்தைப் பற்றியது..