பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Apr 20, 2012

வெள்ளை சாக்சும்... வெளிநாட்டுப் பேனாவும்...


காலப் பெருவெள்ளம் பிரவாகமெடுத்து
நினைவுக்கடலை நிரப்ப நானோ
திரும்புகையில் வழியெங்கும் நிரப்புகிறேன்
நமக்கான கனவுகளின் சுவடுகளை...

எனக்கான கனவுகளை உனக்கான
கவிதைகளென மாற்றியிருக்கிறது நேசம்
அவையோ தீராக் காதலின்
நினைவுகளை பாடியபடி தொடர்கிறது உன்னை...

மெல்ல மெல்ல கடல் சேரும் நதியென
உன்னை நோக்கி வருகிறது என் கவிதைகள்
பேசாப் பிரிவுகளில் சோர்ந்து கிடக்கிறது
கனவுகளின் மாறா ஏக்கங்கள்...

தோல்வியென தலைகுனிகையில் ஆறுதலாய்
எங்கிருந்தோ கைகோர்த்து அரவணைக்கிறது
நிழலாய் மாறும் உன் நினைவுகளின் கரங்கள்
சில கண்ணீர் துளிகளுடன்...

நானும் நீயும் என்றுமே நிஜமில்லை
என சொல்லிச் சிரிக்கும் காலத்தை
கேலி செய்கிறது நாம் இருவருமாய்
கனவு பகிர்ந்த ஒற்றை நாளின் சில மணித் துளிகள்...

 செம்மண் புழுதி பறக்கும் சாலையிலோ
நகரப் பேருந்தின் சன்னலோர இருக்கையிலோ
அணைந்து கிடந்த தெருவிளக்கின் இருளிலோ
இன்னும் இருக்கத் தான் செய்யும்
நாமிருந்த அந்த நினைவுகள்...

 உயிர் கொண்டு மலர்ந்து கிடக்கிறது சில பூக்கள்
தோள் சேரும் மாலையாக முடியாதெனினும்
எதாவது ஒரு காலை வேளையில்
சூடிக் கொள்வாயென காத்திருக்கிறது காதல்...

வீட்டு அலமாரியில் காட்சிப் பொருளென
அலங்கரித்தபடியே இருக்கிறது காதலின் நினைவென
ஒரு ஜோடி வெள்ளை சாக்சும்
ஒரு வெளிநாட்டுப் பேனாவும்...

 நமக்கான ரகசியங்களை யாருமறியாமல்
என் வீடெங்கும் எழுதியபடி தானிருக்கிறது
பல்வேறு வண்ணங்களையும்
கனவுகளையும் நிரப்பியபடி...

அடிக்கடி இப்படித் தான் நிகழ்ந்து விடுகிறது
உன்னை நோக்கிய சில கனவுப் பயணங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கும்
உன் நினைவுகளோடு...

No comments: