பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 6, 2012

தேவதைகள் வருகிறார்கள்...



என் வழியெங்கும் தேவதைகள் வருகிறார்கள்
அவர்கள் தாங்கள் தேவதைகள் என்பதை மறந்து
என்னை சபித்தபடி கடந்து செல்கிறார்கள்
சபிப்பது தேவதைகளின் இயல்பில்லை தான்
இருந்தும் சாபங்கள் நிதர்சனமானவை
தேவதைகளை தேவதைகளாகவே
நம்பிக் கொண்டிருந்தேன் நான்
வரம் மட்டுமே தருவார்களென்றும்
இப்படி ஒரு தேவதையிடம் தான்
முன்பொரு நாளில் மயங்கினேன்
தினமும் வரங்களை பரிசளித்தது தேவதை
மாறாப் புன்னகையுடன் என் துணையுமாய்
நான் அத்தேவதையை நேசித்தேன்
தேவதையை கவிதையாக்கினேன்
தேவதையை கோபப் பட்டேன்
தேவதையைக் கொண்டாடினேன்
எனக்கான பூக்களை தினமும்
தந்து கொண்டே இருந்தது தேவதை
தேவதைகள் என்றுமே பெண்ணாகிவிடுவதில்லை
எனைப் பிரிய முடியா தேவதை
முதலில் தன் வரங்களை நிறுத்திக் கொண்டது
சில நாட்களில் பரிசளித்த வரங்களை
திரும்ப எடுத்தும் கொண்டது
இடைவெளியை விரும்பியது
மறை முகமாய் ஒரு பிரிவின் நாடகம் அரங்கேற
வேறு வழிகளின்றி தேவதையின்
கால்களில் கதறிக் கொண்டிருந்தேன்
கண்ணீரைக் குடித்து விலகி சென்றது
எனக்கான தேவதை
என் வழியெங்கும் தேவதைகளாக
வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
என் மீது சாபத்தை அள்ளித் தெளித்த படி...

No comments: