பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 11, 2011

பரிதவிக்கும் கவிதை...


தோட்டத்தில் பதியமிட்ட மல்லிகைக் கொடியின்
முதல் மொட்டு மலர்ந்த நொடி
பாரம் தாளாமல் வளையும் இலையிலிருந்து
சொட்டும்
ஒரு துளி மழை நீர்
அதிகாலை புற்றிலிருந்து ஈசல்கள்
வெளிவரும் அற்புத கணம்
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையின்
மெல்லிய உதட்டுச் சுழிப்பு
கதிரவனின் வெயிலில் கரையத்
துடிக்கும் பனித் துளி உருளைகள்
யாரும் கண்டுவிடாத நேரத்தில்
குட்டிக்கு பால்க் கொடுக்கும் தாய் ஆடு
நாய்க் குட்டியின் உறக்கம்
வண்ணத்துப் பூச்சியின் முதல் சிறகடிப்பு
தேனீக்களின் மலர்த் தேடல்
கிணற்றின் ஆழத்தில் ஒளிரும்
மீசை மீன்கள்
சாரைப் பாம்பொன்று
சட்டை மாற்றும் சூழல்
தொலை தூரத்தில் கூவி வரும்
நீராவி புகைவண்டி குரல்
வானமெங்கும் அலையும் மேகக் கூட்ட பறவைகள்
சிறுகல் பட்டு நெளியும் குளங்களின் வட்டங்கள்
மெல்ல மெல்ல தோகை விரிக்கும் மயில்களென
அனைத்தையும் ஒரு சேர கண்டுவிட துடித்து
அத்தனையும் இழந்துவிட்ட
பரிதவிப்பில் தனித்திருக்கிறது
உனக்கான கவிதையொன்று....

No comments: