
பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Oct 22, 2011
Oct 15, 2011
நாட்குறிப்பு

ஒரு நாட்குறிப்பில் என்னவெல்லாம்
குறித்து வைக்கலாம்
பெரும்பாலும் நிகழ்வுகளாக
நிறைந்து விடுகிறது
பிரபலங்களின் நாட்குறிப்பு
செலவு கணக்குகள்
குறித்து வைக்கப் படுகின்றன
பலரது வீட்டில்
புள்ளிகள் வைத்து கோலமும்
வரைகிறார்கள் சில பெண்கள்
பால் கணக்கும்
மளிகை தேவைகளும்
தொலை பேசி மின்சாரக் கட்டணங்களின்
கடைசி தேதியும்
மருத்துவ பரிசோதனை தினங்களும் கூட
கவிதைகளால் நிறைகிறது
காதலர்களின் நாட்குறிப்பு
தேதிகளே இல்லையென
புலம்புமோ நடிகர் நடிகைகளின் பக்கங்கள்
அந்தரங்கங்களாலும்
ரகசியங்களாலும்
நிறைந்து யாருக்கும் தெரியாமல்
கிடக்கிறது பரணில் சில நாட்குறிப்புகள்
மறைத்து வைக்கப் பட்ட
கடிதங்களும் புகைப்படங்களும்
இடையில் இருக்கலாம்
வாங்கிய கடனுக்கு
வட்டி கட்டும் தேதிகளும்
குறித்து வைக்கப் படலாம்
நேற்று இரவு பேருந்து நிலையமொன்றில்
கடலை வாங்கும் பொழுது
சுருட்டித் தந்தார்
நாட்குறிப்பு பக்கமொன்றை
அதில்
என்றாவது ஒருநாள் கிழிக்கப்படும்
கவிதைகளை விட
அதிகமாய் என் மனது
........
........
........
........
........
யோசிக்கிறேன்
இனி
ஒவ்வொரு வருட துவக்கத்திலும்
நாட் குறிப்புகளை
பரிசளிக்க வேண்டுமா என?
Oct 13, 2011
மழையும் நீயும்...

மழை நாட்களில் எல்லாம்
அதிகமாகிறது
உன் நினைவுகள்...
இன்று பெய்த மழையைப் போல தான்
நீயும்
முதல் துளியை உணரும்
பரவசம் போல்
சாரலாய் தழுவும்
உன் நேசம்...
சிறிது நேரத்தில் சட சடத்து
நனைத்த மழையென
முழுதும் மூழ்கி விடுகிறேன்
உன் காதலின்
பெருவெளியில்...
காற்று சுழன்றடிக்கும் பொழுதெல்லாம்
வாரி இறைக்கும் சாடல்களில்
உணர்கிறேன் உன்
சில வினாடி கோபங்களையும்...
நனைந்து விட்ட பூமியென
எங்கும் நிறைந்து
விடுகிறாய் என் நினைவெங்கும்...
பூ செடிகளில் தங்கிய
நீரென மழை
முடிந்த பின்பும்
என் மீது விழுந்து கொண்டே
இருக்கிறது
உன் பிரிவின் பின்னரும்
நம் மகிழ்வின் ஈரம்...
நீ எப்பொழுதும்
மழையாகி விடுவதும்
உன்னை எதிர் பார்த்துக்
காத்திருப்பதுமாய்
காலம்
என்னையும்
வாழவைத்து விடுகிறது...
நான் தொலைத்த ஊரில்

செம்மண் புழுதிக் காட்டில்
பொங்கி வருகிறது வெயிலின் வாசம்
மழை நனைத்த இரவு முடிந்து
காலையில் பசுமை போர்த்தும்
புல் மேய இழுத்துப் போகும்
என் வீட்டு ஆட்டுக் குட்டி
வெறும் கால்களால்
வரப்புப் பாதையில் நடை
எருமைக்கென வெயிலில்
சிறு துணியை தலையில் கட்டிக் கொண்டு
புல் அறுக்கும் பாட்டி
ஈரம் காய்வதற்குள் விதைக்கப் படும்
சோள விதைகள்
எஞ்சினை சுழற்றி விடும்
அண்ணனின் லாவகம்
பக்கத்து ஓடையில்
காத்திருக்கும் நாரைகள்
மதிய நேர வேப்பமரக் காற்று
சலங்கை கட்டிய மாட்டுவண்டிப் பயணம்
மரத்தடி கருப்பராயன்
பத்து மணி பழைய சோறு
கம்புச் சோறும் மிளகாய் வத்தலும்
கற்றாழை
கள்ளிப் பழம்
பனங்கிழங்கு
அக்கா குருவி
மாலைநேர மிதிவண்டி
இரவு நேர அரிக்கேன் விளக்கு
அண்ணமார் கதை கூத்து
எத்தனை எத்தனை இழந்திருக்கிறேன்
குளிரூட்டப் பட்ட அறையில்
அலுவலக கணினியில்
வாழ்வைத் தொலைத்த படி..
Subscribe to:
Posts (Atom)