பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Apr 9, 2012
தேவதையின் ஓவியம்
அவள் தொடங்கி விட்டாள்
அவளுக்கான உலகை படைக்க
ஒரு எழுதுகோலும்
சில வெற்றுத் தாள்களும் போதும் அவளுக்கு
ஒற்றை நிறம் கொண்டு
ஆயிரம் நிறங்களை உருவாக்கும்
அற்புதம் அங்கே நிகழ்கிறது
சிறு சிறு கோடுகளை வரைந்து காற்றென்றாள்
ஒரு ஒழுங்கில்லா வட்டத்தில்
கிடையாய் இரு கோடுகள்
நெடுவாக்கில் ஒன்றுமாய் பூனை என்றாள்
எதையுமே வரையாமல் கையிரண்டை விரித்து
வானம் காண்பிக்கிறாள்
விரல்களின் அசைவுகளில் அதில் சில
பறவைகளைப் பறக்கச் செய்கிறாள்
நெருக்கமாய் புள்ளிகளை வைத்து தரை என்று சொல்லி
அதில் ஒரு செடியையும் நடுகிறாள்
பல விதப் பூக்கள் மலரும் நானறியா செடி
இன்று அதில் ஒரு தாமரை மலர்ந்திருக்கிறது
கோணலான ஒரு கட்டம் வீடாகிறது
கூடு தேடும் பறவைகளுக்கென
அருகில் இன்னுமொரு வீடும் தருகிறாள்
அவளின் ஓவியத்தில் நிச்சயம்
இருந்துவிடுகிறது ஒரு கிணறும் அதில்
தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு வாளியும்
எந்த மீன்குஞ்சுகளையும் கண்ணாடித் தொட்டியில்
அடைப்பதில்லை அவள்
எப்பொழுதும் இருளாக இருப்பதில்லை அவள் உலகு
மெல்ல மெல்ல சோர்வில் அயர்ந்து
வரைந்த வீட்டின் மீதே உறங்கி விடுகிறாள்
அதுவரை வேடிக்கை பார்த்த கடவுள்
அழத் துவங்குகிறார் அவள் எந்த இடத்திலும்
தன்னை வரையவில்லை என...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமை.
வாழ்த்துகள்.
அருமை
Post a Comment