பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 11, 2013

Peepli (Live) - ஒரு விவசாயியின் தற்கொலை



          கருப்பு நகைச்சுவை அப்படின்னு ஒரு வகையான திரைப்பட கதை சொல்லல் இருக்கிறது. ஹாலிவுட்டில் இது போன்ற படங்கள் அடிக்கடி வந்து பட்டைய கிளப்பும். அங்கு நாட்டின் அதிபர் முதல் யாரை வேண்டுமானாலும் நடுரோட்டில் இழுத்து வைத்து சந்தி சிரிக்க வைக்கும் இயக்குனர்கள் உண்டு. அப்படிப் பட்ட திரைப்படங்கள் இந்தியாவில் சில சமயங்களில் வருவதுண்டு. மிக அழுத்தமான ஒரு செய்தியை, நகைசுச்வை ததும்ப சொல்லுவது தான் கருப்பு நகைச்சுவை (பிளாக் காமெடி). அமீர்கான் தற்போது சமூகத்தின் சில அவலங்களை இது போல் நகைச்சுவை ததும்ப, சொல்ல வந்த கருத்தை சுவையாகவும் சொல்லும் படியான சில திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். அப்படி ஒரு படம் தான் “பீப்ளி (லைவ்)”. இது அவரது இயக்கம் அல்ல, ஆனால் தயாரிப்பு.


        நம்ம தமிழ்நாட்டில் பாளையம், புதூர், பட்டி இப்படி முடியும் பல ஊர்கள் இருப்பது போல் மத்திய இந்தியாவில் பீப்ளி என்று முடியும் நிறைய கிராமங்கள் இருக்கின்றன. அப்படி ஒரு கிராமத்தில் நிகழும் கதை. கதை என்று எடுத்துக் கொண்டால் இன்றைய விவசாயிகளின் நிலை என்பது மட்டும் தான். அவர்கள் தங்கள் விவசாய நிலத்தை காக்க முயலுவதையும், தற்கொலை முடிவுகளையும், அதை இந்த அரசாங்கமும், பத்திரிக்கைகளும் எப்படி எதிர்கொள்கின்றன என்பது தான் காட்சிகளாக்கப்பட்டிருக்கிறது.

         நிலத்தை அடமானம் வைத்து விவசாயம் செய்யும் ஏழை விவசாயக் குடும்பம். தவணைத் தொகைகளை செலுத்தாமல் தவறி இருப்பதால், நிலத்தை விற்று விடுவோம் என அறிவுறுத்த, சொந்த நிலத்தையும், தன் குடும்பத்தையும் காக்கும் பொருட்டு, அரசாங்கம் விவசாயிகளின் தற்கொலைக்காக அறிவிக்கும் ஒரு லட்ச ரூபாயை பெற்றால் எப்படியாவது கடனை அடைத்து விடலாம் என தற்கொலை முடிவெடுக்கும் ஒரு எளிமையான விவசாயி மற்றும் அவரின் குடும்பம், கிராமத்தின் எளிய மக்கள் இவர்களே கதை மாந்தர்கள்.

           அடுத்தகாக மிக முக்கியமானது, பத்திரிக்கை உலகின் மீதான சாடல். உலகின் ஒருவர் இறந்தால் அது செய்தியல்ல, ஒரு குடும்பமே இறந்தால் காமிராவையும், மைக்கையும் தூக்கியபடி அங்கே வரும் கூட்டம், யாரோ ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தால் அது செய்தியல்ல, ஆனால் ஒரு பெட்டி கவிழ்ந்து மொத்தமாக இறந்து போனால் அங்கு சென்று செய்தி சேகரிக்கும் பத்திரிக்கை கூட்டங்கள்… இவர்கள் சாவையோ, இன்னும் பிற நிகழ்வுகளையோ தங்கள் வணிகத்திற்கான் செய்தியாகவே பார்க்கும் விதத்தை நச் என சொல்லி இருக்கிறார்கள். உணமையில் இன்றைய பத்திரிகை தர்மமும் இப்படித் தான் இருக்கிறது. பேருந்து எரிவதை படம் பிடித்துக் கொண்டே, இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க என்று மைக் பிடிக்கும் கூட்டமாகவே பத்திரிக்கை உலகம் மாறி விட்டது.

         அடுத்து அரசாங்கம், மாநில அரசும், மத்திய அரசும் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சுமத்திக் கொள்வதையும், காவல்த் துறையும், சட்டமும் சாதாரண மக்களுக்கு செயல்படும் விதமும், அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எப்படியெல்லாம் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள் என்பதையும் நகைச்சுவை பொங்க சொல்லியிருக்கும் படம் தான் “பீப்ளி லைவ்). 


          இனி படத்திலிருந்து, அக்கிராமத்திலிருந்து அருகிலிருக்கும் நகரத்தின் வங்கிக்கு செல்லும் தொடக்ககாட்சி, அது முடிந்ததும் வீடு, அங்கு கேட்கப்படும் கேள்வி எனத் தொடங்குகிறது. தங்கள் நிலம் பறி போவதைத் தவிர்க்க, அருகிலிருக்கும் அரசியல்வாதியை உதவிக்காக சந்திக்கச் செல்கிறார்கள் அண்ணனும், தம்பியும். அங்கு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அரசாங்கம் பணம் தரும் அதனால் செத்துப் போ என்று சொல்லி அனுப்புகிறார்கள். அதை கேட்டு தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். திருமணமாகத அண்ணன் இறந்தால் எதுவும் கிடைக்காது என்பதன் பொருட்டு, தம்பி தற்கொலை செய்வதாக முடிவாகிறது. அந்த விசயம் வெளியில் தெரிந்து, அதன் பிறகு நடக்கும் அட்டகாசங்களே திரைப்படமாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.

           முதலில் ஊடக வியாபாரிகள் வந்து அந்தக் குடும்பத்தை பேட்டி எடுத்து, எப்பொழுது தற்கொலை செய்யப் போகிறீர்கள், எப்படி தற்கொலை செய்யப் போகிறீர்கள் என்பதை நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்புகிறார்கள். அதன் பிறகு காவல்த்துறை பாதுகாப்புக்கு வருகிறது. அரசியல்வாதிகள் வருகிறார்கள். வழக்கம் போல் சிறுவயது நண்பர்கள், பக்கத்து வீட்டினர், குழந்தைகள் என அனைவரின் பேட்டிகளும் எடுத்து ஒளிபரப்பப் படுகின்றன. அரசியல்வாதிகள் சாதிப் பிரச்சனையாக மாற்ற முயலுகிறார்கள். அதிகாரிகளோ தற்கொலையைத் தடுப்பது தங்கள் கையில் இல்லை, அது காவல்துறையின் பொறுப்பு, நீதிதுறையின் பொறுப்பு என்று தட்டிக் கழிக்கிறார்கள். முதல்வர் முதல் பிரதமர் வரை அடுத்தவர் மீது பழியைப் போடுகிறார்கள். 

           இடையில், இந்த பத்திரிக்கை, டீவி கூட்டங்களால் நாடெங்கும் செய்தி பரவி விடுகிறது. கிராமம் திருவிழாக் கோலம் பெறுகிறது. கடைகள் முளைக்கின்றன. விவசாயின் ஒவ்வொரு அசைவும் படம் பிடித்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லோருக்கும் அவர் எப்பொழுது தற்கொலை செய்து கொள்வார் என்பது மட்டுமே தேவையாக இருக்கிறது. இடையில் ஒரு காலை நேரத்தில் மலம் கழிக்கச் செல்லும் போது அவர் கடத்தப்படுகிறார். எங்கே என்று எல்லோரும் குழம்பித் தவிக்கிறார்கள். அவரின் மலத்தைச் சுற்றி சுண்ணாம்புத் தூள் வட்டமிட்டு, இங்கு தான் அவர் கடைசியாக மலம் கழித்தார் என்பதை தொலைக்காட்சிக்காரர்கள் படம் பிடித்துக் காட்டும் போது, உண்மையில் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்பது விளங்குகிறது.

         கடத்தபட்ட விவசாயி இருக்குமிடம் தற்செயலாகத் தெரியவர, ஊடக்கூட்டம் அங்கும் குவிகிறது. அங்கு நடக்கும் எதிர்பாரா விபத்தில், அந்தப் பகுதி எரிந்து விட, இறந்த ஒருவரின் சடலத்தை எடுத்துக் கொண்டு, அது தான் அவ்விவசாயின் பிணம் என்று சொல்லி அலப்பறைகளோடு அதன் இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. மெல்ல மெல்ல அந்த கிராமம் காலியாகிறது. இவர்கள் உருவாக்கிய குப்பை கூளங்களுடன் வெறிச்சோடிய கிராமத்தை காணமுடிகிறது. இறுதியில் மழிக்கப்பட்ட முகத்தோடு ஒரு நகரத்தில் கட்டிடத் தொழிலாளியாக அவ்விவசாயி வேலை செய்வது காட்டப்படுகிறது. கடந்த 1991 முதல் 2001 வரை 8 லட்சம் விவசாயிகள் தங்கள் கிராமங்களை, தொழிலைக் கைவிட்டு நகரத்தின் கூலிகளாக மாறி இருப்பதாகச் சொல்லி படம் நிறைவடைகிறது.

         உண்மையில் மக்களுக்கு எப்பொழுதுமே பரபரப்பான ஒரு நிகழ்வு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பத்திரிக்கை உலகமும், தொலைக்காட்சிகளும் ஏன் அரசியல்வாதிகளும் கூட அந்த பரபரப்பை தக்க வைத்துக் கொள்வதையே விரும்பிகிறார்கள். ஒரு விவசாயின் தற்கொலை என்பது ஒரு நாட்டின் கேவலம். அதை ஊடகங்களும், அதிகாரிகளும், அரசியவாதிகளும் எப்படி அனுகிறார்கள் என்பதை வெளிப்படையாக இது வரை யாரும் சொன்னதில்லை. இது அந்த வகையில் மிக முக்கியமான திரைப்படமாகவே இருக்கிறது.  இது போன்ற ஊடகங்களை, அதிகாரிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும் என்பதும், ஒரு சாதாரண விவசாயின் தற்கொலை முடிவென்பது, எந்த விதமான துயர நிலையை அக்குடும்பத்தில் உருவாக்கும் என்பதும் நாம் கவனிக்க வேண்டிய செய்தி.

          பருவமழை பொய்த்துக் கிடக்கும் இன்றைய சூழலில், வங்கிகளிடம் வாங்கிய கடனை, பிறரிடம் வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் நாடெங்கும் இருக்கிறார்கள். வெறும் எண்ணிக்கை, புள்ளி விவரங்களாக அரசாங்கமும், அதிகாரிகளும் பார்ப்பதை, பரபரப்புக்குரிய விசயமாக ஊடகங்கள் சித்தரிப்பதன் பின்னால் இருக்கும் விவசாயக் குடும்பத்தின் துயரங்களை யாருமே அறிவதில்லை. சிந்திக்க வேண்டிய விசயங்களை நாம் சுலபமாகக் கடந்து விடுகிறோம் என்பதும், ஒவ்வொரு விவசாயி கிராமத்தை விட்டு வெளியேறும் போதும் இழப்பு நமக்குத் தான் என்பது அறியாத வரை, இது போன்று நகரத்தின் கூலிகளாகக் குடியேறும் விவசாயம், நெசவு இன்னும் பிற பாரம்பரிய தொழில் செய்யும் மக்களின் வாழ்வை பழிவாங்கும் கூட்டத்தில் நாமும் ஒருவராக இருக்கிறோம் என்பதை உணர்ந்து வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கும். 

      இத்திரைப்படத்தில் வரும் எந்த ஒரு கதாபாத்திரத்தின் பெயரையும் நான் இங்கு குறிப்பிடவில்லை. ஏனென்றால் இதில் காட்சிப்படுத்தபடும் விவசாயி நாடெங்கும் இருக்கிறான். இதே அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஊடகத்துறையினரும் தான் அவர்களின் சாவை வேடிக்கை பார்க்கிறார்கள். செய்திகளாக்குகிறார்கள். புள்ளி விவரங்களாக குறித்து வைத்துக் கொள்கிறார்கள். மற்ற எல்லோரையும் விட, நான் நேசிக்கும் ஊடகத்துறையின் மீது தான் எனக்கு கோபம் அதிகமாக இருக்கிறது. ஒரு தவறைச் சுட்டிக் காட்டி, மக்களோடு மக்களாக நின்று போராட வேண்டிய ஊடகத்துறை பரபரப்பு செய்திகளாக மாற்றி தங்கள் விற்பனையை, டி.ஆர்.பி யை உயர்த்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். அவர்கள் பாதிக்கப்படும் போது மட்டும் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் போராட வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

        நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு சமூக அவலம் எப்படி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டுமே தவிர, நடைபெறும் அவலத்தை பயன்படுத்தி எப்படி வாழ்வை ஓட்டுவது என்பதாக இருக்கக் கூடாது. அந்த வகையில் இத்திரைப்படம் மிக முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது.

       ""இந்தப்படத்தில் அந்த மனிதன் தற்கொலை செய்து கொள்கிறானோ இல்லையோ, நிச்சயம் ஒரு விவசாயி இறந்து விடுகிறான் என்பதே உண்மை... ""


Apr 17, 2013

The Japanese Wife - Aparna Sen




 
இந்தியாவில் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகள் நிறைந்த ஒரு சிறுகிராமத்தின் கணக்கு வாத்தியாருக்கும், ஜப்பானின் ஒரு இளம் பெண்ணுக்குமான பேனா நட்பு, காதல், திருமணம், திருமணத்திற்குப் பின்னதான வாழ்வில், அவர்கள் அதற்கு உண்மையாக வாழும் வாழ்க்கை, இவையெல்லாம் வெறுமனே கடிதப் போக்குவரத்தும், மிகச் சில தொலைபேசி அழைப்புகள் மூலம் சாத்தியப்படும் என்று தோன்றுகிறதா? சாத்தியமே என்கிறார் அபர்னா சென். இவர் வங்காளத்தின் மிகமுக்கிய இயக்குனர்களில் ஒருவர். இதுவே ஜப்பானிய மனைவியின் ஒற்றை வரி கதை. குணால் பாசு இதே தலைப்பில் எழுதிய கதையை ஒரு திரைப் படமாக, இல்லை ஒரு திரைக் கவிதையாக மாற்றி காட்சிகள் வழியே ஓடவிடுகிறார் அபர்ணா சென்.(அக்கதையை இதுவரை நான் வாசித்ததில்லை. தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தால் குறிப்பிடலாம்). அதற்கு முக்கிய உறுதுணையாக இருப்பது ஒளிப்பதிவு. சுந்தரவனக் காடுகளில் பொழியும் மழையை, ஆற்றை, படகுப் போக்குவரத்தை, ஒரு சிறு கிராமத்தை, ஜப்பானின் சாதரணக் குடும்பத்தை அழகாகக் காட்டியிருக்கிறது.

ஒரு சிறுகிராமத்தின் கணக்கு வாத்தியார் செனமாய் சேட்டர்ஜியாக ராகுல் போஸ். ஜப்பானிய இளம் பெண் மியாகியாக ஜப்பானிய நடிகை சிகுசா டகாகு. இருவருக்கும் கடிதங்கள் மூலமான் நட்பு பின் காதலாக மாறி ஒரு நிலையில் இருவரும் கடிதங்கள் மூலமாகவே திருமணமும் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழத் தொடங்குகிறார்கள். ஒருவருவருக்கு ஒருவர் மிக உண்மையாக இது போல் வாழ சாத்தியமா எனும் எண்ணம் எழுகிறது தான், ஆனால் படம் முடியும் வரை அவ்வெண்ணம் தோன்றாது என்பது உறுதி. இதற்கிடையில் உறவினர் வீட்டில் தங்கியிருக்கும் கணக்கு வாத்தியார் (உறவினராக மெளஷிமா சேட்டர்ஜி), பின் அங்கு இளம் விதவையாக தன் மகனுடன் வந்து சேரும் சந்தியா (ரெய்மா சென்), அச்சிறுவன் ஆகியோர் மட்டுமே முக்கிய கதைமாந்தர்கள். சந்தியா வந்த பிறகு கதையின் போக்கு சற்று மாறக் கூடும் என்றே நினைக்கிறோம். இருவருக்குமான நேசம், சிறுவனின் மீதான பற்றுதல் ஆகியவை பார்வையாளர்களை அப்படியே தோன்ற வைக்கிறது. ஆனாலும் ஜப்பான் மனைவிக்கு ஏற்படும் நோயும் அதற்கான மருத்துவத்திற்கான செனமாய் –யின் தேடலும் அவர்கள் இதுவரை சந்திக்காத போதும் இருவருக்குமான ஒரு கட்டுக்கோப்பான வாழ்வை, அடுத்தவர் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. 

சரி முடிவு எப்படி இருக்கலாம் என யூகிக்க முடிகிறதா? அதை எந்த விதமான விமர்சனங்களையும் வாசிக்காமல் படத்தை ஒருமுறை பார்ப்பவர்களுக்கான ஒரு அதிர்வாக, அவர்கள் வாழ்ந்த வாழ்வின் அடையாளமாக அம்முடிவு இருக்கக் கூடும்.
இப்படத்தில் மெல்ல மெல்ல கடிதங்கள் மூலமாகவும், பரிசுகள் மூலமாகவும் கல்கத்தாவின் மூலையில் இருக்கும் ஒரு சிறு கிராமம் ஜப்பானிய நகரத்தின் ஒரு அறை போல, பொம்மைகள், மேசை விரிப்புகள், அலங்காரப் பொருட்கள் என மாறிவிடுவதும், ஜப்பானியப் பெண் தன் கணவன் அனுப்பும் சித்த மருத்துவ மருந்துகளை தன் நோய் குணமாக தொடர்ந்து எடுத்துக் கொள்வதும் ஏறக்குறைய இருவரும் கலாச்சார மாறுதல்களை, புரிதல்களை தங்கள் காதலுக்காக ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பது காதலின் விதியாகவே இருப்பதை நினைவுபடுத்துகிறது.

சந்தியாவுக்கும், செனமாய்க்குமான திருமணப் பேச்சு எழுவதும், மியாகி தன் காதலை அவனிடம் கடிதம் மூலம் தெரிவிப்பதும், அதை ஏற்றுக் கொண்டு கடிதம் மூலமாகவே இருவரும் திருமணம் செய்து கொள்வதுமாய் இருப்பினும், ஏற்கனவே தனக்கான ஒருவனாக சந்தியா செனமாய் யை உருவாக்கிக் கொள்வதால் இருவருக்குமிடையே இருக்கும் நேசம் மிக மிக இயல்பான ஒன்றாகவே நமக்குத் தெரிகிறது. சந்தியாவுக்கும் செனமாய்க்குமான நேசம் ஒரு வெளிப்படுத்த இயலாக் கவிதையென நிகழ்கிறது. இரவில் தனிமையில் அழும் அவளுக்கு ஆறுதல் சொல்ல வருபவனின் மார்பில் சாய்ந்து அழும் போது கதையின் போக்கில் மாறுதல் நிகழுமோ எனும் எண்ணம் பார்வையாளர்கள் எல்லோருக்கும் எழுவதைத் தவிர்க்கவே இயலாது.

பட்டம் விடும் காட்சிகள் ஒளி ஒவியம். அதற்கான மாஞ்சா கயிறு தயாரித்தலும், ஜப்பானிய காற்றாடிகள் போல உருவங்கள் செய்து பறக்க விடுதலுமாய் அழகாகத் தொடங்கும் பட்டம் விடும் போட்டி, மற்றொரு பிரிவினரால் கயிறு துண்டிக்கப்பட்டு தோல்வியடையும் போது, அச்சிறுவனை விட அதிகம் ஏமாற்றமடைபவனாக செனமாய் இருப்பதும், சிறுவனுக்கும் அவனுக்குமான அன்பை வெளிப்படுத்தும் காட்சியாக அமைகிறது. 

இறுதிக் காட்சிக்கும் முன்வரும் மழையும், பெருக்கெடுத்து ஓடும் ஆறும், சுழன்று வீசும் காற்றும் படத்தின் கதையோடு ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறது. இசை பற்றி சொல்லவே வேண்டாம் எந்த இடத்திலும் உறுத்தலே இல்லை, கதையோடு பயணிக்கும் இயல்பான இசையாகவே இருக்கிறது. ஜப்பானிலிருந்து மியாகி அனுப்பும் கடிதத்தை, செனமாய் யிடம் கொடுக்க அச்சிறுவன் ஒவ்வொருமுறை சந்தோசமாக ஓடிவருகையிலும் நம் மனதில் சந்தியா, சென்மாய் இருவரும் இணைந்தால் தான் என்ன எனும் எண்ணமும் தோன்றாமல் இல்லை.
இங்கே இறுதியில் என்ன நிகழ்கிறது என்பதை மட்டும் சொல்லாமல் விட்டிருக்கிறேன். ஒரு அழகிய காதல் கவிதையை வாசிக்க உங்களுக்கு விருப்பமிருக்கிறதா? அதை காட்சிகள் வழியாக, தன் திரை மொழியில் தர இயலும் என்பதை நிரூபித்திருக்கிறார் அபர்னா சென்.

*நிச்சயம் பார்க்கலாம்.

மிஸ்டர் அன் மிஸஸ் அய்யர் படத்திற்குப் பிறகே அபர்னா சென் படங்களை தேடிப் பார்க்கத் தொடங்கினேன். அதுவும் ஒரு அழகான காதல் கதையே…. அதை வேறு ஒரு நாள் பார்க்கலாம்.






Mar 6, 2013

பாக்கியவாதி.



இனிமேல் என்றும் எனக்குச் சொந்தமில்லாத
என் அன்பு
கழிவிரக்கத்துடன் என்முன் வரும்போது
காதல் என் உணர்வுகளைச் சீண்டுகிறது
என் விழிகளால் அவன் விழிகளைச் சந்திக்கும்
ஏக்கம் மூழ்கிறது

கட்டுப்பாடுகளின் சுவர்களுக்குள் நான்
அதனால் தான் மனமே இல்லாமல்
பின்வாங்கல்
என்னை மறந்துவிடு என் அன்பே
இன்று நான் வேறு ஒருவனுக்கு
உரிமையானவளாக இருக்கலாம்

அன்று நீ பச்சோந்தியானாய்
இப்படித் தான்
நாம் பிரிந்தோம், அன்புடன்
உன்னை நான் ஆராதித்தேன் மனமார
ஆனால் இன்று நீ
பாக்கியம் செய்த இன்னொருத்திக்கு
உரியவன்.

Feb 27, 2013

வர்ணங்கள் அழகானவை

வண்ணங்களைச் சுமந்து
அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தன
அவ்வண்ணத்துப் பூச்சிகள்
பனித் துளிகளில் கரையாத
மழைக் காலத்தில் சாயமிழக்கா
அவ்வர்ணங்கள் அழகானவை
பறக்கும் பூக்கள் அவை
மிதக்கும் பூக்கள் அவை
சிறகடிக்கும் பூக்கள் அவை
தும்பை செடி தேடி தன் உறிஞ்சு குழல்களால்
தேனெடுக்கும் அழகில்
காலம் மறந்திருக்கிறேன்
அதே தும்பைச் செடிகளால்
துரத்திச் சென்று அமிழ்த்திப் பிடித்திருக்கிறேன்
இறகுகளைக் கையில் பற்றி
துடிப்பதை ரசித்திருக்கிறேன்
மீண்டும் பறக்க விடுகிறேன்
மீண்டும் பிடிக்கிறேன்
அடையாளமென
விரல்களில் தங்கியிருக்கிறது
கருப்பும் சிவப்புமாய் அதன் வர்ணங்கள்
பனித் துளி கரைக்காததை
மழைத் துளியில் சாயமிழக்காததை
எப்பொழுதும்
மனித விரல்கள் சாத்தியப்படுத்துகின்றன
தன் குரூரங்களால்...