
எத்தனை எதிர் பார்ப்புகளுடன்
கிழித்தாலும் நாட்காட்டியில்
திரும்பியா வரப் போகிறது
உன்னோடு நானிருந்த நாட்கள்...
ஒளிந்து விளையாடும்
விளையாட்டில் நீ எப்பொழுதும்
ஒளிந்து கொள்கிறாய்
நான் தேடுவதாய் நடிக்கிறேன்...
ஒரு கவிதையாவது
எழுதி விட வேண்டும்
உன்னைப் பற்றி நினைக்காமலோ
வார்த்தைகளுக்குள் அடைக்காமலோ...
உனக்கும் எனக்குமான
இடைவெளியில் நிறையும்
கனத்த மௌனங்களிடையே
ஒரு கடலின் ஓயாத அலைகளின் ஓசை...
நமக்குப் பிறக்கப் போகும்
குழந்தைகளின் சிரிப்பால்
இன்றைய என் உறக்கத்தின்
கதவுகளை திறக்கிறேன்...
கனவின் ஒரு முனையில் நீயும்
மறு முனையில் நானுமாய் காத்திருக்க
முடிவின்றி நீள்கிறது
நம் தனிமை இரவுகள்...
என் நினைவுகளில் ஒரு
மரமும் அதில் அழகான பறவையும்
எப்பொழுதும் பறக்கலாம்
என்னை தனிமையில் விட்டு விட்டு...