பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 26, 2013

குழந்தை போல.



 














யாரையும் வெறுக்காமல்
யாரையும் உறுத்தாமல்
நாக்கைச் சரியாக அடக்கி
நான் வாழ்ந்து விடுகிறேனே
குழந்தை போல
மூன்று மாதக் குழந்தை போல
கற்பனைச் சிலந்தி கட்டாமல்
மனத்தின் தூய கோட்டையினுள்
ஒன்றுமே அறியாத ஆத்மாவைப்போல
கனவுகளைப் பற்றிக் கொண்டு
விலை மதிக்க முடியாத தன் புதையலை
தனக்கே தனக்கு என நினைத்து
தன் விலையில்லா மணிக்கு
பாலூட்டும் அன்னையைப் போல
நானும் வாழ்ந்து விடுகிறேனே
குழந்தை போல
ஆசையில்லாத பூச்சி போல
திருப்தியுடன்
தன்னலமற்று.


-இரோம் சர்மிளா (தமிழில் அம்பை)

அமைதியின் நறுமணம்



 

வாழ்க்கை முடிந்துபோனதும்
உயிரற்ற கூடான என் உடலை
தயவு செய்து தூக்கிச் சென்று
தந்தை கூப்ரூவின் மலை உச்சியில்
வைத்து விடுங்கள்

என் செத்த உடல்
கோடாரியாலும் மண்வெட்டியாலும்
சிதைக்கப்பட்டு
நெருப்பில் சாம்பலாவதை
நினைத்தால்
மனதில் அசூயை பொங்குகிறது

வதங்கப் போகும் சருமம்
பூமியினடியே அழுகட்டும்
வரும் தலைமுறையினருக்கு அது உபயோகப்படட்டும்
உலோககருவாக அது மாறட்டும்

இனிவரும் காலங்களில்
நான் பிறந்த காங்லேயின் வேர்களிலிருந்து
நான் அமைதியின் நறுமணத்தைப் பரப்புவேன்
உலகின் ஒவ்வொரு மூலைக்கும்.


-இரோம் சர்மிளா ( தமிழில் அம்பை)

தந்தை கூப்ரூ: மணிப்பூரின் வடமேற்கில் உள்ள மலை. தங்கள் மூதாதையர் என்று அவர்கள் கருதும் புனித ஸ்தலம்.
காங்லேய்: காங்லேய்பாக் என்பதின் சுருக்கம். மணிப்பூரின் பழங்காலப் பெயர்.

செத்த உடல் நெருப்பில் சரியாக எரிந்து முற்றிலும் சாம்பலாக, சிலசமயம் அதை வெட்டித் துண்டு துண்டுகளாக்கி, பின் எரிக்கும் வழக்கம் மணிப்பூரில் உள்ளது.

Jan 30, 2013

எழில் நலம்

 "கடந்த ஞாயிறு மாலை, திருப்பூர் லட்சுமி நகர் குலாலர் திருமண மண்டபத்தில்  நிகழ்ந்த எழில் நலம் கவிதை நூலுக்கான ஆய்வுக் கூட்டத்தில் நான் வாசித்த உரையின் பதிவு... "

"எழுதிய கவிதைகளில்
என்னைத் தேடுகிறீர்கள்
நான்
என் எழுதாக் கவிதைகளில்
காத்திருக்கிறேன்...

இது அண்ணன் திரு. மகுடேசுவரன் அவர்களின் கவிதைகளில் ஒன்று. அவரது கவிதைகள் எப்பொழுதும் இந்த சமூகத்தின் வெளிகளில், கனவுகளில், இருப்புகளில், தேடலில், வலிகளில், காட்சிகளில் பயணித்தபடி இருப்பது போலவே, முகநூலில் நட்பும், ஒரே ஊரில் வசித்தும் கூட இருவரும் சந்திக்க இயலாமல், முயலாமல் இருந்தோம். :-) . இரண்டு நாட்களுக்கு முன் புத்தகத் திருவிழாவில், தமிழினி பதிப்பகத்தில்,  மிக மிக எளிமையாக, சிரித்த, சிநேகமான முகத்துடன் கைகளைக் குலுக்கிக் கொண்டே வரவேற்றார் அண்ணன் மகுடேசுவரன். அவருடைய எழில்நலத்தை அவருடைய அழகிய ஒப்பத்துடன் வாங்கிக் கொண்ட பிறகு விடைபெற்றுத் திரும்பினேன்.

இனி நேரடியாக எழில் நலம் தொகுப்புக்குச் செல்லலாம். அதற்கு முன்பு என்னைப் பற்றி, நான் பெரும்பாலும் கவிதை நூல்களை வாசிக்கத் தயக்கம் கொண்டவன். ஆரம்ப காலங்களில் வாசித்த போதிலும் தற்பொழுது நானும் கவிதை என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருப்பதால், வாசிக்கும் கவிதைகள் எனக்குள் இரு வித தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அது மகிழ்வாகவோ, வலியாகவோ, சமூகத்தின் மீதான இன்னொரு பார்வையாகவோ  இருந்து விடுகிறது. அடுத்து அக்கவிதை என் எழுத்துகளில் ஏற்படுத்தும் தாக்கம். மனதில் பாதித்த,பதிந்த  வரிகள் எப்பொழுதும் ஏதாவது ஒருவகையில் மறுபிரதியாக என் எழுத்துகளில் வந்து விடுகிறது. இதை எப்படியும் தடுத்து விட இயல்வதில்லை. இருந்தும், திரு கல்யாண்ஜி, தேவதேவன், அய்யப்ப மாதவன், குமரகுருபரன், ரேவா, அண்ணன் மதிராஜ் ஆகியோரை தவிர்த்து விட இயல்வதில்லை. இந்தப் பட்டியலில் மகுடேசுவரன் அண்ணனுக்கு நீங்காத இடம் உண்டு.

இனி எழில் நலம் கவிதைகள்..


"தன் மீது
வழி தவறித் தொற்றிய
புழு கண்டு
அலறித் துடித்தாள்
பட்டுடுத்தியவள்..."

இது வெறுமனே பட்டுடுத்திய ஒரு பெண்ணை மட்டும் குறிப்பதாகத் தோன்றவில்லை. இன்பங்களை மட்டுமே நுகரத் துடிக்கும் இன்றைய சமுதாயத்தின் மீதான ஒரு சாடலாகவே இருக்கிறது. வயற்காட்டில் உழுபவர், ஆடை நெய்பவர், சாக்கடை அள்ளுபவர் என எவரைப் பற்றியும் கவலைப் படாமல் சொகுசு வாழ்க்கை மட்டுமே வாழத் துடிக்கும் அனைவரையும் பட்டுடுத்திய ஒருத்தியின் வாயிலாக சாடியிருக்கிறார் என்றே பொருள் கொள்கிறேன்.

"தீப் பெட்டிக்குள்
பொன்வண்டைப்
பிடித்தடைக்கும் சிறுமி
மாபெரும்
பொக்கிஷப் பேழை ஒன்றின்
சொந்தக்காரி ஆகிறாள்..."

இது ஆகச் சிறந்த ஒன்று. குழந்தைகளின் உலகம் மாபெரும் கனவைக் கொண்டது. அழகானது, அவருகளுக்கு நாம் பெரிதெனவும், ஆகச் சிறந்ததெனவும் சொல்லும், நினைக்கும் எதைப் பற்றியும் கவலையில்லை. சிறு மண்பாத்திரம், பட்டாம் பூச்சி, புத்தகம் நடுவே வளர்க்கும் மயிலிறகு, சோட்டா பீமின் சாகசங்கள் எனும் அற்புத உலகில் வாழ்கிறார்கள். பொம்மைகளுக்கு  கதை சொல்லித் தூங்க வைக்கும் தேவதைகள். நாம் அவர்கள் உலகை உருவாக்காமல் போனாலும், அவர்களாக உருவாக்கிக் கொண்ட உலகில் நம் அறிவைத் திணிக்காமல் இருந்தால் போதும். அதைத் தான் இக்கவிதை சொல்லியிருக்கிறது. கவிதையின் இறுதியில் பொன்வண்டை தீப்பெட்டியிலிருந்து விடுதலை செய்து சிறுமி கடவுளாகிறாள், அதன் மூலம் தன்னை ஒரு தேவதூதனாக மாற்றிக் கொள்கிறது கவிதை.

அடுத்து "என் வேண்டுதல்"  எனும் தலைப்பில்

நிற்றற் கொரு
காவெழில் மாமரம்

சுற்றற் கொரு
சுந்தரத் தேன் வனம்

கற்றற் கொரு
நூற்ப் பெருங் காப்பியம்

அற்றற் கொரு
காமுக மாமதம்

உற்றற் கொரு
வாள் விழிக் காதலி

தொடந்து போய்க் கொண்டே இருக்கிறது. முடிகையில்

இதுவும் போதுமோ? என முடித்திருக்கிறார்.

எல்லோருக்குமே தங்கள் வாழ்வைப் பற்றிய கனவுகள் இருக்கத் தான் செய்கிறது. பொருளாக, கல்வியாக, சாதனையாக இப்படி ஏதேனும் ஒரு வகையில் மனது அதற்கான கனவை தினமும் தயாரித்தபடியே தான் இருக்கிறது. இப்படி இருந்திருந்தால், இது இருந்திருந்தால்,இப்படி நடந்திருந்தால்  எனும் நினைவை, கனவைக் காணாதவர்கள் எவருமே இல்லை தான். கனவு காண எல்லோருக்குமே உரிமை இருக்கிறது. இயல்பில் வாய்த்தல் என்பதும், அதை வார்த்தைகளில் வரித்தல் என்பதும் எல்லோருக்கும் சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கிறது. சிலருக்கு மட்டும் விதி விலக்காக, உங்களுக்கும் வாய்க்கும் என்றே நினைக்கிறேன் உங்கள் கவிதைகளால்... எங்களுக்கும் வாய்க்கட்டும் வாசிப்பதால்...

அடுத்து,

" குடும்பஸ்தனின் பைக்
எப்பொழுதும்
ரிசர்வ் பெட்ரோலில் தான்
ஓடிக் கொண்டிருக்கிறது"

மற்றும்....

" நீ ஏமாந்தவற்றை
எடுத்துக் கணக்கிடு
உலகின்
மிகப் பெரிய நட்டக் கணக்கு
உன் கணக்கு.
சரியா?

போன்ற வாழ்வியலின் யதார்த்தங்களை  கண் முன்னே வைக்கும் கவிதைகள் கவிதை நூலில் ஏராளமாய் விரவியிருக்கிறது. நம் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுவதே இவ்வகைக் கவிதைகளின் வெற்றி என்றே நினைக்கிறேன். நீங்களும் நிச்சயம் வாசிக்கும் போது சிறிது நேரம் கண் மூடுவீர்கள்.

அடுத்ததாக,

"தவழக் கையூண்றும்
குழந்தை
பூமியைத் தாங்கிப் பிடிக்கிறது"

"அவ்வளவு எளிதில்லை
மௌனம் கலைந்து
சொல்லும் முதல்ச் சொல்
பிறந்த குழந்தையின்
வீறிடலாய்
எல்லோருக்கும் இனிக்கும்படியாய் இருப்பது."

இந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கும் போதெல்லாம், என்னுள் ஒரு பிரம்மாண்டம் விரிந்து கொண்டே இருக்கிறது. அதனுள் நான் ஒரு சருகாய் , உதிர்ந்த இறகாய், ஒரு கரையும் துகளாய், காற்றோடு கரையும் வாசனையாய் விழுகிறேன். வேறெப்படியும் இவ்வரிகளை  விவரிக்க எனக்குத் தெரியவில்லை. வாசிப்பவர்களின் மனதில் நீங்காது என்பது மட்டும் நிச்சயமான ஒன்று.

"நீ இல்லாவிடில் இன்னொருத்தி
அந்த இன்னொருத்தி
உன் போலிருந்தால் போதும்..."

இந்த வரிகளை பற்றி விவரிக்கத் தேவை இல்லை என்றே நினைக்கிறேன். எல்லோருடைய மனதிலும் சாகும் வரை மறக்காத யாரோ ஒருவனின், ஒருத்தியின் நினைவினை, யாருமறியா அகக் காதலை இதை விட வேறெப்படியும் சிறப்பாக, எளிய வாரத்தைகளால் சொல்லி விட இயலாது தான். உணர்வும், உயிர்ப்பும் குறையா இவ்வரிகளுக்காக தனிப்பட்ட முறையில் நன்றிகள் சொல்லிக் கொள்ளகிறேன் அண்ணா.

"பாடல் பரவும் முன்
காற்றில் இருந்தது
கனமான வெற்றிடம்"

"வெந்து தணிந்த காட்டில்
சாம்பல் குவியலடியில்
தகதகத்து ஒளிரும்
பெரும் கங்கு தானோ
காதல்"

இவைகளும் கூடவே,

"ஏற்கனவே குருவிகளும் கிளிகளும்
இடம்பெயர்ந்து விட்ட நகரம் தான் இது"

எனும் திருப்பூரின் இன்றைய நிலையைச் சொல்லும் கவிதைகளும் மனதில் நீங்காதவை.


பின்தொடர்தல், ஆத்தா, அன்றில் போன்றவையும் நண்பர்களைப் பற்றிய கவிதைகளும் அருமை. அதிலும் பால்ய கால நட்பைப் பற்றிய கவிதையொன்றை இங்கே குறிப்பிடாமல் இருக்க இயலவில்லை..

" இருந்த காசுக்கு
மிட்டாய் வாங்கி
சட்டை முனை சுற்றி
பல்லால் கடித்து
ஆளுக்கொரு பாதியை
வாயிலிட்டுச் சுவைத்த
அந்த நண்பனை எனத்  இடத்தில்
தொலைத்தேன்"

தொலைத்தேன் என முடித்திருக்கிறார், உண்மையில் இது தொலைத்தோம் என்றல்லவா இருந்திருக்க வேண்டும். எல்லோருமே தொலைத்திருக்கிறோம் தான். சிறு வயதில் என்னொடு ஓணான் பிடிக்க ஓடி வந்த நண்பர்கள் பலர் இன்று வெறும் நினைவுகளாகவே எஞ்சியிருக்கிறார்கள். எங்களது ஊரின் கிராமத்து அரசு தொடக்கப் பள்ளி, நாக லட்சுமி டீச்சர், பள்ளிக்கு கிளம்பும் போது அம்மா தரும் பத்து பைசா, ஆரஞ்சு மிட்டாய் என வெகு நேரம் என் பால்யத்தின் நாட்களில் எனை கொண்டு போய்ச் சேர்த்த வரிகள். கண்களை மூடித் திறக்கையில் ஏனோ இரு கண்களிலும் நீர் வழிந்திருந்த தடம் மிஞ்சியிருந்தது. தும்பிகள் பிடித்த கதைகளோடு, என் கை பிடித்து செல்லமாய் ஒரு சகோதரனைப் போல் தனது எழில் நலத்திற்குள் அழைத்துச் சென்று, சுற்றிக் காட்டி, திரும்பவும் கொண்டு வந்து விடுகிறார். இடையிடையே நான் சிரிக்கிறேன், அழுகிறேன், துடிக்கிறேன், வெறுமையை, ஏகாந்தத்தை உணர்கிறேன். காதலில் தொலைகிறேன். ( காதல் கவிதைகளை நான் இங்கு குறிப்பிடவில்லை, வாசகர்கள் கட்டாயம் வாசிக்கவும்).

எல்லாவற்றையும் கடந்து பார்க்கும் போது, கவிதைகளை, கவிதை நூல்களை நான் வாசிக்காமல் இருப்பது நல்லதென்றே தோன்றுகிறது. கவிதைகள் என்னை அவற்றுள் இழுப்பதும், பிறகு நான் சுதாரித்தபடி விலகி ஓடுவதுமாய் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கை.

இறுதியாக கவிதைகளை எப்படி வாசிக்க வேண்டுமென்று தனது கவிதை ஒன்றிலேயே குறிப்பிடுகிறார் அண்ணன் மகுடேசுவரன். அதுவும் அழகாகவே இருக்கிறது,

"ஒரு குழந்தை
நல்லுறக்கத்திலிருந்து
கண் விழித்ததும்
இவ்வுலகை
எப்படி அறியக் காணுமோ
அப்படிக் காணுங்கள்
கவிதைகளை..."

வேறெப்படிக் காண...

நன்றி...

(எழில் நலம் கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் செய்யச் சொல்லி அன்பால் ஆணையிட்ட சேர்தளத்தின் தலைவர் திரு. வெயிலான் அவர்களுக்கும் ,தொடந்து ஊக்குவிக்கும் கொண்டிருக்கும் சேர்தள நண்பர்களுக்கும்  எனது நன்றிகள்...

Dec 24, 2012

வர்ணங்கள் அற்ற வானம்...

வர்ணங்கள் அற்ற வானில்
சிறகுகளின்றிப் பறப்பதில்
என்ன இருந்து விடப் போகிறது?

ஏதாவது ஒரு துயரம் தொலைக்க
உன்னிடம் ஓடி வருகிறேன்
எப்பொழுதாவது,
திரும்புகையில் புதிதாய் ஒன்று கூடுகிறது.

எந்தக் கதையும் உனக்கு சுவாரசியம் இல்லை
முன்பே நீ அறிந்திருக்கக் கூடும்
இல்லையெனில், நீ
ரசிக்கும் அளவுக்கு சொல்லத் தெரிவதில்லை.

அடிக்கடி உன்னை விடைபெறுவதன் நிமித்தமாய்
வட்டத்தினுள் அடைபட்ட காலத்தை பார்க்கிறேன்
என்னை தன் கையில் வைத்து விளையாடியபடி
புன்னகைக்கிறது அதன் போக்கில்.

கடந்து வெளிவரும் வேளையில்
சட்டென உதிரும் ஒரு துளி நீரில்
எதுவும் இருக்கலாம்
நீ
நான்
நம் உறவு
எல்லாவற்றையும் தாண்டி எதுவுமில்லையென
நீ அடிக்கடி சொல்லும் அந்த ஒன்று.