பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 17, 2011

மெழுகுவர்த்தி


எப்பொழுது தேவைப் படுவதில்லை தான்
ஆனாலும் உபயோகித்திருப்பாய்
மின்சாரம் தொலைத்த பொழுதொன்றில்
மெழுகுவர்த்தி ஒன்றை....

முழுமையான வெளிச்சத்தை
தருவதில்லை எனினும்
அடையாளம் காட்ட உதவும்
சிறு தீபமென...

மெல்லிய காற்றின் சீண்டல்களில்
கூட அசைந்து துடிக்கிறது
அதன் மெல்லிய தீ நாக்கு
ஒரு நடனத்தை குறியிட்டு...

அழுது வடியும் கண்ணீரையோ
உருகி கரையும் உடலையோ
ரசிக்கிறோமே இன்றி
கவலைப் படுவது இருளைப் பற்றியே...

வீட்டில் ஒருவராவது இருக்கிறார்கள்
மெழுகுவர்த்தியினை வெளிச்சமென
நினைக்காது ஒரு தியாகத்தின்
உண்மை பொருளை உணர்ந்தவராய்...

தேவாலயங்களிலும்
பிறந்த நாள் விழாக்களிலும்
காணக் கிடைத்தாலும்
அங்கே சிறப்பு அவற்றுக்கில்லை...

மின்தேக்கிகள் நடைமுறைக்கு
வந்த பின் அதிகம்
மறக்கப் பட்டவை
சிம்னி விளக்கும் மெழுகுவர்த்தியுமே...

நான் எழுதிக் கொண்டிருப்பது
மெழுகுவர்த்தியை பற்றி என
நீ தவறாக நினைத்தால்
அது என் தவறல்ல...

பெயரற்ற உறவு...


விடுமுறை நாளென
நீ நேரம் வரை தூங்கிப் போக
விடிந்த பின்னும்
விடியாமலிருக்கிறது
எனது இன்றைக்கான நாளொன்று...

நேற்றிரவு உனக்கென
நான் எழுதி வைத்த
பனித்துளி கவிதைகளை
அதிகாலை கதிரவன்
திருடிக் கொண்டிருக்கிறான்...

எப்பொழுதும் போல்
உதாசீனப் படுத்தப் படும்
கோரிக்கைகளையே நான்
வைத்திருக்கிறேன்
உன்னிடம் ஏமாறு வதற்கென...

வீட்டில் நீ மீன் சாப்பிடும்
பொழுதெல்லாம் கூரிய முள்ளொன்று
சிக்குகிறது என் தொண்டையின்
மெல்லிய இடுக்குகளில்...

நேற்றிரவு இரவு விளக்கின்
ஒளியில் நீ தூங்கும் போது
அனல் கக்கும் சூரியனின்
ஒளிக் கதிர்களில் தவித்திருந்தேன்...

விட்டுக் கொடுக்கவே இயலாத
சில மணித்துளிகளை
யாரிடமோ கொடுத்து விட்டு
கொதிக்கும் மனதை
மறைக்கத் தெரிவதில்லை எனக்கு...

அடிக்கடி கோபம் கொள்வதில்
அர்த்தங்கள் இல்லையென
சொல்லி தேற்றுகிறாய்
முடிந்தால் தானே
முயற்சித்துப் பார்க்க...

இயலாமையின் கரங்களில்
சிக்குண்ட நினைவுகளை
கொல்லவும் தவிர்க்கவும்
நீ வேண்டும் என்னுடன்...

தொடரத்தான் செய்யும்
மனதின் மரண ஒத்திகை
கடைசியாய் துடித்து
அடங்கும் நொடிவரை...

எப்படி முடிக்க என்று
தெரியாமல் தொடங்கிவிட்ட
கவிதையென
அழகாகவும் அழுகையுடனும்
நம் பெயரற்ற உறவு...

Sep 16, 2011

தோளில் உறங்கும் தேவதை


ஆயிரம் முறை கூட
சண்டை போடலாம்
மீண்டும் மீண்டும்
மன்னித்து ஏற்றுக் கொள்வதால்...

என்னுடன் பேசும்
எல்லா நேரங்களிலும்
சிவந்தே இருக்கிறது உன் முகம்
வெட்கத்திலோ கோபத்திலோ...

ஒரு நாள் உன் வெட்கம்
பார்க்க ஓடி வந்து விட்டு
ஒரு கவிதையோடு
திரும்புகிறேன் என்
வெட்கங்களை தொலைத்து...

உறங்க விடா உன்
உறவுக்கென தினமும்
செதுக்கிக் கொண்டிருக்கிறேன்
நமக்கான
கனவுக் கவிதைகளை...

நீ உறங்கு
உனக்கும் சேர்த்து
விழித்திருக்கிறோம்
நானும் இரவும்
கூடவே குளிரூட்டும்
உன் முத்தங்களும்...

காதலியாகத் தான்
இருந்தாய் நேற்றிரவு
உன் கண்களால்
அணைத்த அந்த நொடியில்
மனைவியானாய்...

நீ இல்லாத பொழுதுகளில்
கொட்டி விட்ட விண்மீன்களில்
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்
நாம் தனித்து மயங்கி
கிடந்த நிமிடங்களை...

நாளையும் ஒரு
வெட்கத்தோடு வா
நான் உனக்கான ஒரு
முத்தத்தோடு வருகிறேன்
சந்திக்கட்டும்
வெட்கமும் முத்தமும்...

குழந்தைகள் மட்டுமே
உறங்கும் பொழுது அழகு
விதிவிலக்காய் என் தோள்களில்
உறங்கி விடும் போதெல்லாம்
குழந்தையாகி விடுகிறாய் நீ...

தேவதை கதைகளில்
நம்பிக்கை இன்றிப் போனேன்
ஒரு தேவதையோடு
இந்த இப்பிறவி முழுதும்
வாழும் வரம் கிடைத்த பின்...

Sep 15, 2011

ஜன்னலோரமாய் மலர்களோடு...


கவிதை கேட்டு
ஒரு மாலை வேளையில்
போனவள் தான்
அதன் பிறகு
கவிதைகளாகவே மாறிப் போனேன்
அவனுள்...

நேசிப்பதற்கே யோசிக்கும்
உனக்கு உன்னிடம்
நான் யாசித்த நாட்கள்
நினைவிருக்குமா என்ன?

கோபங்கள் அன்பின்
வடிவம் என்பதை
எப்பொழுது நீ
புரிந்து கொள்ளப் போகிறாய்...

இந்த உலகை அளக்கும்
உன் பேனாவால்
எனக்குள் நீ எழுதிப் போனது
நமக்கான
ஒரு காவியத்தை...

ஆயிரம் முறை காயப்பட்டும்
உன்னிடம் மயங்கும்
மனதிடம் என்ன தான்
எதிர் பார்க்கிறாய்
காதலைத் தவிர...

உன் புன்னகையில்
நான் சிரித்து மகிழ்ந்த
காலங்களை விட்டு
அகல மறுக்கிறது
என் நிகழ் காலம்...

அமைதி தான் உன்
ஆசையெனில் தவறில்லை
ஆனால் உன் மௌனத்தில்
எரிந்து கொண்டிருக்கும்
மனதை வீசி ஏறிகிறாய்...

உன்னுடன் வாழ
விதிகள் இல்லை தான்
இருந்தும் வாழ்கிறேன்
நீ என்னுள் இருந்த
வசந்த காலங்களில்...

திரும்பி வருவாய் என
தெரியும்
அதுவரை காத்திருப்பதை
தவிர வேறேதும் அறியா
கையறு நிலையில் நான்...

இறுதியாய் ஒன்று
எனக்குத் தெரியும்
உன் எழுத்துகள் எனக்கானவை என
இல்லையென சொல்லி விடாதே
நின்று விடப் போகிறது
உனக்கான இதயம்...

நமக்கான கனவுகளுடன்
என் ஜன்னலோரமாய்
காத்திருக்கிறேன்
தோட்டத்தில் உனக்கென்ன
வளர்த்த மலர்களோடு...