பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 8, 2011

உயிர்க் கோலம்










நகரமும் அல்லாத கிராமத்தின் பழமை தொலைத்த என் ஊர்...விடியற் காலை... பனி பொழியும் இந்த நாளின் துவக்கத்தில் வெளியூர் பயணம்.... தெருவெல்லாம் அமைதியாய், இரவு நேர தெரு விளக்குகள் சில எரிந்தும் எரியாமலும்... குளிருக்கு நான் பிரத்யேகமாக வேறு உடைகள் அணிவதில்லை. மெல்லிய குளிர் ஒரு அனுபவம்... மெல்ல உடலில் ஊடுருவி, முழுதும் ஆக்கிரமித்து, அமைதியாய் ரசிக்கவைக்கும் ஆனந்தம்.... ரயில் பயணங்களில் ஜன்னலோர இருக்கை போல... இரண்டு தெருக்களை தாண்டி நடக்கிறேன்... ஒரு இளம் பெண் தான் வீட்டு வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள்... மனம் லயித்துப் பார்த்துக் கொண்டே கடந்து போகிறேன்... பேருந்து நிறுத்தம், கூட்டமின்றி வந்தது ஒரு அரசு பேருந்து... அங்கிருந்து நகரப் பேருந்து நிலையம், மறுபடி ஒரு நீண்ட பயண தொடக்கம், இடையில் நுரையீரலை புகையால் நிரப்பிக் கொண்டேன்...

பேருந்து வெறுமையாக இருந்தது... இரண்டே பேர்... ஓட்டுனர், நடத்துனர் என்னோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர்... எப்பொழுதும் போல எனக்குப் பிடித்த ஜன்னலோர இருக்கை... சில அமைதியான நிமிடங்கள்... நகரம் விட்டு வெளியே வந்திருந்தது பேருந்து... என் நினைவுகள் காலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பெண்ணை சுற்றத் துவங்கியது... இதே போல் நான் வெகு நாட்கள் வாழ்ந்திருக்கிறேன்... குளிர் காற்று முகம் வருட,முன்னோக்கி நகரும் பேருந்தில் பின்னோக்கி நகர ஆரம்பித்தன என் நினைவுகள்....

அது அவளின் கிராமம், பெயர் என்று ஒன்று இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அது அவளின் கிராமம். அடிப்படை வசதிகள் கூட முழுமையாய் சென்றடையாத அந்த மிக சிறிய பகுதி நகரத்திலிருந்து கிட்டத் தட்ட முப்பது கிலோமீட்டர்களில் இருந்தது. நீரோடையின் சலசலப்பு, மரங்களின் தூய்மையான காற்று, மதிய நேர வெயிலோடும் கூட குளுமையை பரப்பி நிற்கிறது உனது கிராமம், உன்னை வளர்த்த கிராமம். நீ நடந்த தெருக்களும், நீர் பிடிக்கும் தெருக் குழாய்களும், கிணற்றடியும் என்றும் உன் வரவிற்காக காத்துக் கொண்டே இருந்தன. உன் வீட்டின் முன் ஒரு பெரிய வேம்பும், அதனால் உன் வீடு வாசலில் படரும் நிழலும், அதில் வசித்த பறவைகளும், நிழலில் படுத்துறங்கும் நாயும் காணாமல் போயிருக்கும் இந்நாட்களில்....என் நினைவில் நீங்காமல் இருக்கிறது நம் முதல் சந்திப்பு, அது என்னையே எனக்கு அறிமுகம் செய்த முதல் பயணத்தின் தொடக்கம்.. ஒரு மலையின் குகைக் கோவில் ஓவியங்கள் போல மறையாமல் இருக்கிறது நம் நினைவுகள்...

அந்த அதிகாலையில் நான் பணிக்கென தனியே நடந்து வருகையில் உன் வீட்டு வாசலுக்கு நீ நீர் தெளித்துக் கொண்டிருந்தாய். அதிகாலை மண் வாசனை புறப்பட்டு என்னை மென்மையாய் வருடிச் சென்றது. உன் விரல் பட்ட நீர்த் துளிகளெல்லாம் பனித் துளிகளாகவும், விரல் பட காத்திருந்த துளிகளெல்லாம் பன்னீர்த் துளிகள் போலவும் இருந்தன.உன்னை கடந்த அந்த நொடியில், தலை குனிந்தவாறு உன் விரல் பட்ட நீர்த் துளிகள் என் மீது பட்டுவிட தயங்கி நின்றேன். நிமிர்ந்து நீ என்னைப் பார்த்த அந்த பார்வையில் கோரப்பட்ட மன்னிப்பு, சற்றே மிரண்ட மானின் பரிதவிப்பு இரண்டுமாய்.. நேர்கோட்டில் சந்தித்த பார்வையை தவிர்க்க வேண்டி நீ தலை குனிந்தாய்.. அழகிய மலரொன்று அதிகாலையில் தலை குனியுமா என்ன... முகம் பார்த்து ரசிக்க முடியா ஏமாற்றம் எனக்கு...

அடுத்த நாளும் அதே அதிகாலையில் மீண்டும் வருகிறேன், நிகழ்ந்து விடாதா நம் அடுத்த சந்திப்பு என்கிற பதைக்கும் மனதோடு.ஆனால் இன்று நீ வாசலுக்கு தெளித்துக் கொண்டிருந்தது பசும் சாணம் கலந்த நீர். என் ஆடை மீது பட்டு, புது வண்ணம் கொண்டது மேல் சட்டை.. நிமிர்ந்து பார்த்தேன், இம்முறை நீ நிற்கவில்லை, பதற்றத்துடன் வீட்டுக்குள் ஓடினாய்.. திரும்பி அறைக்கு வந்து வேறு உடை மாற்றி திரும்புகிறேன், வாசலில் நீ... உன் வீடு கடக்கும் பொழுது ஒளிந்து கொண்டு, சென்ற பின் வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாய். திரும்பி முகம் பார்த்தேன், இந்த முறையும் தலை குனிந்தாய் சிறு புன்னகையோடு... பின்னொரு நாளில் தான் தெரிந்தது, முதலில் நான் அணிந்து வந்த உடையின் நிறம் உனக்கு பிடிக்காது என்று... அதிலிருந்து அந்த மேல் சட்டை அணிவதில்லை நான்..

அடுத்தடுத்த நாட்களிலெல்லாம் நீ நான் வரும் முன்னதாகவே நீர் தெளிப்பாய், உன் கைகளில் கோலப் பொடிகளுடன் வர்ணமாய் மாறிக் கொண்டிருக்கும் உன் வாசல். சில பண்டிகை நாட்களில் தெரு முழுதும் வண்ணமயமாய்... கோலத்தின் இறுதியில் நீ எழுதிப் போகும் நல்வரவு எனக்கானது என்று எனக்குத் தெரியாமலா போகும்...ஆர்ப்பரிக்கும் மனதோடு அலைந்த நாட்கள் அவை. முதலில் புள்ளிகள் தொடங்கும் போதே நம் கருவிழிப் புள்ளிகளும் சந்திக்கத் தொடங்கின. நம் பார்வையின் சந்திப்பில் பல நேரங்களில் சிதறிப் போயிருக்கிறது நீ வைக்கும் கோலப் புள்ளிகள். சில நேரம் மிதிக்காமல் செல்ல வேண்டி நான் தயங்கி நிற்கும் பொழுது, எழுந்து நின்று வழி விடுவாய். அப்பொழுது தான் பார்ப்பது போல் பார்ப்பேன், அதிகாலை வானம் சிவக்கிறது உன் முகத்தில். வாசல் கோலங்களை விட்டு உன் முகத்தின் அழகுக் கோலத்தை ரசிக்கத் தொடங்கிய தினம் அன்று... தினமும் வழக்கமாகிப் போனது உன் முகமும், வாசல் வர்ணங்களும்...

இப்பொழுதெல்லாம் நான் அதிகாலை விடியலுக்கு காத்திருக்க, தவமிருக்க ஆரம்பித்தேன். உன்னைக் காணும் அந்த நொடிகளுக்காக நாள் முழுதுமாக காத்திருக்கிறேன் என்ற உண்மை என்னில் உணர்கிறேன்.. சற்றே முன்னேற்றம் பெற்று புள்ளிகளிலிருந்து வளைவுகளுக்கு வந்திருந்தது உன் கோலம்.பார்வைகளிலிருந்து புன்னகைகளாய் உரு மாறியிருந்தது நம் உறவு. தினமும் அதிகாலை நேர பறவையின் குரல்களும், சிவந்த கதிரவனின் ஒளியும் நம்மை மெதுவாக ரசிப்பது போல இசையும் ஒளியும் மனதில் காதலென குடிகொண்ட அந்த அற்புத மணித் துளிகள்.காதலா இல்லை ஈர்ப்பா என உணரும் முன்னரே, என் பணி மாற்றம் காரணமாய் வேறு இடத்திற்கு மாற வேண்டி வந்தது... அன்று நம் கடைசி சந்திப்பு.. அன்றும் அதிகாலை தான். என் கையில் வழக்கத்திற்கு மாறாக புதிதாய் பயணப் பெட்டி. அன்று நீ அப்பொழுது தான் நீர் தெளித்துக் கொண்டிருந்தாய். உன்னைக் கடக்கும் பொழுது வேண்டுமென்றே நின்றேன், கைகளில் மட்டுமன்றி, கண்களிலும் நீர்த் துளிகளோடு நீ. இருவர் கண்களிலிருந்தும் தானாக விழுந்த துளிகளில் உன் வீட்டு வாசல் ஈரமாகி கொண்டிருந்தது...

அன்றிலிருந்து பண்டிகை நாட்களைத் தவிர வேறு நாட்களில் நீ கோலமிடுவதில்லை என்றும், உன் தாய் தான் தினமும் வாசலில் நீர் தெளிக்கிறார்கள் எனவும் நண்பனை விசாரித்த பொழுது தெரிந்து கொண்டவை. கனத்து போன இதயம், புரட்டி போட்ட காலம், பணி மாறுதல்கள், பயணங்கள், பல்வேறு நகரங்கள்.. எதிலும் மறக்க முடியா உன் நினைவுகள்... ஒரே ஒரு முறை உன் கிராமம் வந்தேன். நீயில்லாத கிராமம் அது...

வெகு நாட்கள் கழித்து உன் கிராமத்தில் நான். அதே அமைதிதான் ஆனால் இதில் அழகில்லை. வெறிச்சோடிக் கிடந்தன தெருக்கள். பொதுக் கிணறு குப்பைத் தொட்டியை மாறிக் கிடந்தது. வீடு வீடாய் குழாயில் நீர் வந்து சேர்ந்திருந்தது. தெருக் குழாய் மட்டும் குற்று செடிகள் சூழ, கள்ளி செடிகள் வேலியாய் மாறிக் கிடந்தது. பூட்டிக் கிடந்தது உன் வீடு, காணாமல் போன மரத்துடன் முன் வாசல். சில வருடங்களுக்கு முன் உனக்கு திருமணம் நடந்ததும், பிறகு தாய் இறந்து போனதுமாய் உன்னை பற்றிய செய்திகளை கேட்காமலேயே சொல்லிக் கொண்டு வந்தான் நண்பன்... பல ஆண்டுகளாக நீர் தெளிக்காமல் வறண்டு கிடந்தது உன் வீட்டு வாசல்.. அன்றொரு நாள் நீ வரைந்த கோலம் ஒன்றையும், நல்வரவு வார்த்தைகளையும் அங்கே பொருத்திப் பார்த்து கண்ணீருடன் நிற்கும் என்னை தோள் தட்டி ஆறுதல் சொல்லும் நண்பனுக்குத் தெரியுமா என்ன? உன் கோலங்களுக்கு உயிர் உண்டு என்பது....


நடத்துனர் தோள் தட்டி எழுப்புகிறார். தம்பி பேருந்து நின்று பத்து நிமிடமாகிறது என்று... மன்னியுங்கள் சார்.. உறங்கி விட்டேன் என்று பதிலுரைத்து விட்டு கிழே இறங்கி தேடுகிறேன் கோலமிடப்பட்ட வாசல் ஒன்றை இந்த பெரு நகரத்தில்...

தாமரை






தாமரையை பற்றி கவிதையொன்று
எழுதச் சொன்னாய்.....

தாமரைப் பூவை
தாமரைப் பூ என்றே அழைப்பதைத் தவிர
வேறென்ன சொல்லி விட முடியும்....
சில நேரங்களில் வண்ணங்களைப் பற்றியோ
கோர்க்கப்படும் சரங்களிலோ தாமரை பற்றி
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் நானோ
தாமரை பூத்த குளங்களைப்
ரசித்துக் கொண்டிருக்கிறேன்...
இளஞ் சிவப்பு, ஊதா, வெண்மை என
பல தாமரைகள் உண்டு
நான் ரசித்ததென்னவோ
அடர் சிவப்பில் குருதியின் நாளங்களை
கொண்ட மலரொன்றை...


தன் இரு புறங்களிலும்
நீர் ஒட்டி விடாத இலைகளை பரப்பி
அழகான குழந்தை போல இதழ்
விரித்துச் சிரிக்கிறது,
எப்பொழுதும் குளிர் நீரில்
இருப்பதால் என்னவோ அதி மென்மையாய்
விரல்களால் தீண்டவும் பயம் என்னில்...
நடுங்கும் கைகளோடு நான் வருடும்
வேளையொன்றில்
தேனுண்ணும் பறவையென மாறி
சிறகடிக்கிறது ஒளிந்து கொள்ளும் மனம்....
சில வக்கிர மனங்கள்
பறித்து சூடி தங்களை அழகு படுத்திக்
கொள்ளும் பொழுது
தாமரைப் பூக்கள் பூக்களாய் இருப்பதில்லை
வெறும் காகிதப் பூக்களாகவே,
என்னில் என்றும்
பூக்களையும் நீர் நிலைகளையும்
பிரிதரிந்தவனில்லை
வெறும் இதழ்களை நம்பி வந்தவன்
வேர்களில் சிக்கி தவிக்கிறான்
நான் வேர்களை நம்பியவன்...
எல்லோரும் சொல்வது போல்
எல்லாமே பூக்களுமே ஒன்று அல்ல
ஒரு பூவின் வாசனையை
வேறு ஒரு பூவிடம் தேடுபவன் அறிவிலி
நான் ஒரு ரசிகனே
எனக்கென மலர்ந்த
தாமரையை ஒன்றை
அதன் இதழ்களை
அதன் பரந்த இலைகளை
நீர் மறைத்த வேர்களை
செம்மை பரவிய அதன் நிறத்தை....


இனி என்ன,
தாமரைப் பூவை
தாமரைப் பூ என்றே அழைப்பதைத் தவிர
வேறென்ன சொல்லி விட முடியும்....
தனக்கான சூரியன் எதுவென்று
தாமரைக்கு தெரியும்....
என்னவளுக்கு சொந்தமாய்
இருக்கிறது ஒரு தாமரையும்
ஒரு ரோஜாவும்...

Aug 1, 2011

படுகொலைகள்















சில கணங்களில் நிகழ்கிறது
மனித உறவுகளின் படுகொலைகள்
யாரையும் கேட்காமல்
யாருக்கும் தெரியாமல்....

இங்கே கொலைக்கு
தேவைப்படுவதெல்லாம்
நேசிக்கும் மனமும்
கோபம் கொண்ட இதயமுமே...



சுடு சொற்களை வீசி விட்டு
இனி என்னால் உனக்கு
எந்த தொந்தரவும் இல்லை
எனும் போது நிகழ்ந்தே விடுகிறது
அக் கொலைச் செயல்...

ஏதாவது தவறுகள்
செய்திருந்தால் மன்னித்துக் கொள்
எனும் போது
சிதையில் தள்ளப்படுகிறது காதல்...


இனி தவிக்கவோ
துடிக்கவோ வேண்டி இருக்காது
உன் வாழ்க்கை உனக்கு
என் வாழ்க்கை எனக்கு
என்கிறது குரல் ...

இவ்வளவு எளிதாய்
நிகழ்ந்துவிடுமா ?
அன்பு கொண்ட
இதயங்களின் முறிவு....

இங்கே எல்லோரும்
கொலையை செய்து விட்டோ,
தடுக்கவோ முடியாமல்
நிற்கிறோம்
கண்ணீர்
நினைவுகளோடு....


" இங்கே சில கனவுகள் உறங்குகின்றன"






அன்பு தேவதையே,
நான் இதுவரை உனக்கு கடிதங்கள் எழுதியதில்லை... எழுதிய கடிதங்கள் முழுமையற்று போனது... ஆனால் இன்று இந்த சூழலில் உனக்கு எழுத வேண்டி வரும் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை...உண்மையில் கடிதம் என்பது தூரங்களின் வடிவம்... உனக்கும் எனக்கும் அப்படியொன்றும் அதிக தூரமில்லை...இன்னொன்று கடிதங்கள் உணர்வுகளின் வெளிப்பாடே அன்றி வேறொன்றுமில்லை...

உன்னை காதலிக்க துவங்கிய அந்த நொடிகள் தான் எத்தனை அழகானவை, அற்புதமானவை... என் மனதில் சிறு சிறு கனவின் விதைகளை நீ நட்டுச் சென்ற அந்த ஆழமான பொழுதுகள்... இன்று அந்த கனவுகள் மலராய் பூத்துக் குலுங்கும் நேரத்தில் நீ அருகில் இல்லை... மனதில் மலர்ந்த மலர்களை ரசிக்கவும் இயலாமல், களையென பிடுங்கி எறியவும் முடியாமல் என் கண்ணீர்த்துளிகளை அவற்றின் வேர்களில் பாய்ச்சுகிறேன்....

நீயும் நானும் கொண்ட நேசம் ரம்மியமானது... அதிகாலை பொழுதைப்போல, முழு நிலவின் பிரகாசத்தைப் போல, கைதேர்ந்த ஒரு ஓவியரின் விலை மதிக்க முடியா படைப்பைப் போல, வசீகரிக்கும் ஒரு கவிதையைப் போல, மெல்லிய மழையின் தீன்டலைப் போல, சிறு குழந்தையின் முத்தத்தைப் போல எத்தனை இயல்பாய் நீ எனக்குள் நிறைந்திருக்கிறாய்....

என் காதலை எப்படி நிரூபிக்கப் போகிறேன், நியாயத் தராசினைக் கொண்டு எடை போடா முடியுமா என்ன? வாமனனைப் போல் அடிகள அளந்து என் தலை மீது வைக்கவோ? அனுமன் போல நெஞ்சு கிழித்து உன் முகம் காட்டவோ முடியுமா என்னால்?... ஆர்ப்பரிக்கும் மழையைப் போல் புவியை நிறைத்து, அருவிஎனப் பெருகி எப்படிச் சொல்லப் போகிறேன். நதியைப் போல் நீளுமோ, கடலைப் போல் ஆழமாகவோ... என் கவிதைகளில் கிறுக்கிக் கொண்டா? பின் அடையாளம் எதுவென்பாய்? இதோ என் உறக்கம் தொலைத்த விழிகளும், தத்தளிக்கும் கனவுகளும், வார்த்தைகள் அற்றுக் கிடக்கும் கவிதைகளும், காரணமின்றி கண் நிறைக்கும் நீரும்.... இவை இன்றி வேறென்ன சொல்லிவிட முடியும் நம் நேசத்தைப் பற்றி...

என் சின்னஞ் சிறிய உலகின் தேவதை நீ... என் கவிதைகளின் இளவரசி நீ... என் ஆசைகளின் முதற்ப் புள்ளி, என் எழுத்துக்களின் பொருட்ச் சொல். ஒரு ஜன்னலின் கதவுகளை திறந்து உலகின் பரந்த வெளிகளுக்கு என்னை அழைத்துச் சென்றவள் நீ... ஒவ்வொரு நொடியும் வாழும் கலையினைக் கற்றுக் கொடுத்தவள் நீ... மரணித்துக் கொண்டிருந்த மனதொன்றை அன்பெனும் மருந்திட்டு காப்பறியவள் நீ.. என் தாயின் மறு பிரதி நீ... என் சேயின் கருப்பொருள் நீ... என் காலங்களில் வசந்தமாய், கோடை யாய், குளிராய் என அனைத்து மாற்றமும் நீ...

முடவன் ஒருவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்ட கதையாய் உன் மீதான என் காதல். காதலுக்கு எதிர்ப்புகள் இருக்கும் பலவகைகளில்.. இன்று என் மித மிஞ்சிய காதலே எதிர்ப்பாய் மாறிப் போனது... என் காதல் எனக்குத் தெரியாமலே உன்னைச் சுற்றி வலைகள் விரித்த போது நீ கதறினாய்... உன் கால்கள் அதில் சிக்குண்ட போது வலைகள் உன்னை நெருக்கியதே தவிர, என் வலைகளை நீக்கி விட முடியவில்லை என்னால்... இறுதியில் ஒரு நாள் நீ எனக்குத் தெரிந்தே வலைகளை அறுத்த பொழுது, நடுங்கும் கைகளுடன் உன்னிடம் மண்டியிட்டேன், தவித்துப் போன மனதுடன்....

அதீத காதலின் வலிகளை அடைந்தவள் நீ, கொடுத்தவன் நான்... உன் கதறல்கள் என்னை சேராதபடி தடுத்துக் கொண்டிருந்தது என் அதிகக் காதலின் ராகங்கள்.... இறுதியில் என்னை விட்டு செல்லும் ஒரு நாளில், நான் என் உயிருடன் சண்டையிட்டு சாவின் பாதையில் நடக்கத் துவங்கினேன்.ஒரு மிகப் பெரிய முகக் கண்ணாடியினை வைத்து போரிடு என்பது போல இருக்கிறது... இங்கே என் எதிரில் நிற்பவை என் கனவுகளும், ஆசைகளும், வாழ்விற்கான என் கற்பனைகளுமே... என் கூரிய கவிதைகளால் நான் அவற்றை வெட்டி வீழ்த்தும் பொழுது நிலமெங்கும் சிதறிக் கிடக்கும் குருதியின் சுவடுகள் என் ரணங்களிலிருந்து.... என்றுமே வென்றுவிட முடியாத எதிரிகளுடன் போரிட்டு வீழும் பொழுது ஒருவேளை அக்கண்ணாடி அகற்றப் படலாம்....

சிந்தனை தடை பட்ட, உணர்வுகள் எரியூட்டப்பட்ட ஒரு உலகத்தில் இனி நான் கழிக்கப் போகும் ஒவ்வொரு நொடிகளும் கொடிய விரல்களென மாறி என் குரல்வளை நசுக்கும்.... தாகத்திற்கென நான் மழையை எதிர் நோக்கி கிடக்கும் வேளைகளில் சூரியனின் கதிர்கள் என்னைப் பொசுக்கிக் கொண்டிருக்கும்... இந்த உலகம் என்றுமே காதலுக்கானது, காதலர்களுக்கான ஒன்று அல்ல என்பதை என் வறண்ட குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

என் கவிதை வாழ்வின் இறுதி அத்தியாங்கள் உனக்கானவை.. எனவே இனி அவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை... எனக்குள் இருக்கும் உன்னால், உனக்காக பரிசென வைத்திருக்கப் போவது அவற்றை மட்டுமே.... என் இதயத்தின் கடைசி துடிப்பு, மூச்சுக் காற்றின் இறுதித் துளிக் காற்று, கண் நிறைக்கும் கனவுகள் என அனைத்துமே உனக்கானவை.... நான் மரித்துவிடும், மண் மூடும் நொடியொன்றில் கலங்கி விடாதே, ஆறுதல் சொல்ல அங்கே நான் இருக்கப் போவதில்லை....

நேசம் என்பது புனிதமானது மட்டுமில்லை, புதிரானடும் தான்.... யார் மீது யாருக்கும், காரணங்களே இன்றியும்... மிக மிக வேகமாய் காதலின் படிகளில் ஏறிய எனக்கு, இறங்கத் தெரியாத இன்று குதித்து உயிர் விட மட்டுமே தெரிகிறது... இனி என் கல்லறையில் எழுத ஒரு வாசகமும் உண்டு..." இங்கே சில கனவுகள் உறங்குகின்றன"

இறுதியாய் ஒன்று, நான் தவறுகள் செய்தவன்... மன்னித்துவிடாதே... தண்டித்து விடு... மன்னிப்பைக் கோரும் அளவிற்கு நான் எந்த நொடியிலும் வாழ்ந்து விடவில்லை... இனி என் நினைவுகளில் நீ விட்டுச் சென்ற வானமும், நட்டுச் சென்ற மலர்களின் சுகந்தமும், உனக்கே உனக்கான கவிதைகளுமாய்.... என் இறுதிப் பயணத்தை நோக்கி....

"காதலுக்காக
எதை வேண்டுமானாலும்
விட்டுக் கொடுக்கலாம்
காதலையும் கூட...."

என்றும் நினைவுகளுடன்..

மழை....