பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Jun 2, 2012

பள்ளிக்கு சென்ற முதல் நாள்

இன்று காலை நானும் என் முதலாளியும் அலுவலக நிமித்தமாக அவருடைய அறையில் பேசிக் கொண்டிருந்தோம்... அப்பொழுது அவருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது, நான் வெளியேற முற்படுகையில், எதிர் இருக்கையில் அமரச் சொல்லி விட்டு அலை பேசியில் பேசத் துவங்கினார். பேச்சு இன்றைய பள்ளி துவக்கம் குறித்ததாக இருந்தது. தன்னுடைய இரண்டாவது மகளுக்கு இன்று பள்ளி துவங்குவது பற்றி சொல்லி விட்டு, ஒவ்வொரு வருடமும் பள்ளி முதல் நாளில் தானே அழைத்துச் சென்று முதல் வரிசையில் அமர்த்தி விட்டு வந்ததாகவும், இந்த வருடம் தனக்கு சொல்லி விட்டு, வாழ்த்துப் பெற்று, அவள் மட்டுமே கிளம்பி விட்டதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

மெல்ல அவரின் பேச்சு அப்பெண் குழந்தையாக இருக்கும் பொழுது, முதல் நாள் பள்ளியில் சேர்த்த நினைவுகளில் பயணிக்கத் தொடங்கியது. அழுது புரண்டு "டாடி, வேணாம் டாடி நான் உங்க கூடவே வீட்டுக்கு வரேன் டாடி" என்ற பெண்ணை சமாதனப் படுத்தி அமரவைத்து விட்டு விசும்பி அழும் பெண்ணை, சன்னலின் வழியாக பார்த்தபடி தானும் அழுது கொண்டிருந்ததை சொல்லும் போது, அவர் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் துளிகள் மெல்ல கீழிறங்கத் துவங்கியது...

அனைத்து பெற்றோரும் தம் குழந்தை பள்ளிக்கு சென்ற முதல் நாள் நினைவுகளை மறந்து விடுவதே இல்லை. மெல்ல மெல்ல ஒரு பொக்கிஷம் போல நினைவின் அடுக்குகளில் புதைந்து கிடக்கின்றன். சில பெற்றோர் அவர்களாகவே நினைத்துப் பார்ப்பதோடு சந்தோசப் பட்டுக் கொள்ளகிறார்கள். ஒரு சிலர் விபரம் தெரிந்த வயதில் தன் குழந்தைகளிடம் புகைப் படத்தோடு அந்நினைவுகளை சொல்லி மகிழும் நாட்களும் உண்டு. பெண் குழந்தைகள் எனில் பெரும் பாலும் பெற்றோர் திருமணம் முடிந்த பிறகு, அப் பெண்ணின் சிறு வயது புகைப் படங்களை பார்த்தபடி நினைவுகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

மெல்ல மெல்ல வளரும் குழந்தையை, அவர்களின் கனவுகளை, அவர்களுடைய வெற்றிகளை, தோல்விகளை எல்லாவற்றையும் தங்களுடைய வாழ்வாக மாற்றிக் கொண்ட பெற்றோர்களே எங்கும் நிறைந்திருக்கிறார்கள். நான் முதல் நாள் பள்ளிக்கு சென்றது நன்றாக நினைவிருக்கிறது. என்னுடைய மூன்று வயதிலேயே பால் வாடியில் (அரசு மழலையர் பள்ளி) அக்காவுடன் அமர்ந்து அம்மா, ஆடு, இலை மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துகளை கற்றுக் கொண்டதன் விளைவாக நான்காம் வயதில் நான் முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப் பட்டேன். தலையைச் சுற்றி காதைத் தொடும் வழிமுறையில் வெற்றி பெற்றதால், ஆசிரியை ஒருவரால் பிறந்த தேதி மாற்றப் பட்டு என் கல்விப் பயணம் தொடங்கியது. அக்காவும் நானும் ஒரே வகுப்பு, ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் இருவரும் வேறு வேறு பிரிவில் கூட மாற்றப் படவில்லை.

என் நினைவுகளில் நான் கரைய, ஒரு தகப்பானாய் எதிரில் அமர்ந்திருந்த ஒருவர் தன்னிலை மீண்டார். எப்பொழுதும் பெண்களுக்கும், அப்பாக்களுக்குமான உறவு மகத்தானது. அலுவலக பணிகளை பேசி முடித்து வெளியே வரும் போது யோசித்தேன், எப்பொழுதும் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் எங்கும் நிலைக்காத நான் இதே நிறுவனத்தில் நான்கு வருடங்களைக் கடந்தும் இங்கு பணி புரிந்து வருவதன் காரணம் புரியத் துவங்கியது....

May 31, 2012

நானும் ஒரு சிறுவனே...


இன்று காலை ஒரு மின் ரயில் ஒன்று கடப்பதற்காக பூட்டப் பட்ட ரயில்வே கேட் முன் நின்றிருந்தேன். ரயில் பாதி கடக்கும் போதே ஒரு சிறுமி தன் கையினை நீட்டி "டா டா" காட்டிய படி பயணித்துக் கொண்டிருந்தாள். நானும் பதிலுக்கு என் கைகளை அசைக்கத் தொடங்கினேன். எங்கே செல்கிறாள், நான் யார், அச் சிறுமி யார் என்பது பற்றியெல்லாம் நான் கவலைப் படுவதில்லை. அச் சிறு பெண்ணுக்கு மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி...

சுற்றிலும் இருந்த நாகரிக கூட்டம் என்னை வித்தியாசமாய் பார்த்தது. அதைப் பற்றியெல்லாம் கவலைப் பட எதுவுமே இல்லை. நான் பதிலுக்கு கையசைத்ததும் தன்னுடன் இருந்த மற்ற சிறுவர், சிறுமியரிடம் சொல்ல, ரயில் என்னை கடந்து சிறிது தூரம் செல்கையில் என்னை நோக்கி ஐந்து, ஆறு கைகள் அசைந்து கொண்டிருந்தன... நல்ல வேளை மற்றவர்களைப் போல் எனக்குள் இருக்கும் சிறுவனை நான் கொன்று விடவில்லை... :-)

உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் குட்டீஸ்....

May 29, 2012

உன்னோடு ஒருநாள் - ஒன்று

இன்று ஞாயிற்றுக் கிழமை, இருவருக்குமே விடுமுறை தினம். மணி ஏழு. நேற்றிரவு பார்த்த திகில் படமொன்றால் கட்டியனைத்த படி தூங்கிப் போயிருந்த நீ, எனக்கு முன் விழித்திருந்தாய். மெல்ல காதோரமாய் வந்து இன்னிக்கு மாட்டிகிட்ட டா என்கிறாய். எனக்குள் கொஞ்சம் பயமும் கொஞ்சம் சந்தோசமுமாய் கலந்து படுக்கையிலிருந்து எழுந்து விடலாமா வேண்டாமா என்றபடி உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன். போர்வை விலக்கி தலையணையாய் என்னை மாற்றிக் குறுக்கே படுத்துக் கொள்கிறாய். நான் எழுந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் நீ இப்படி செய்வது உன் வழக்கம்.

எழுந்து குளியலறைக்குள் சென்று வருகிறேன், அதற்குள் சூடான தேநீர் வைத்திருக்கிறாய். ஞாபகம் வச்சுக்கோடா இன்னிக்கு நான் தான் என்கிறாய் சிரித்தபடி, வேறு வழியின்றி நானும் புன்னகைக்க, நேரம் கடக்கத் தொடங்குகிறது. அடச் சே இன்னிக்கு எந்த புதிய படமும் வெளிவர வில்லை. போன வாரம் போல் உன்னிடம் தப்பிகக் இயலாது. வகையாய் மாட்டிக் கொண்டேன்.சரி சரி என் படி காலை சமையலுக்குள் நுழைகிறேன். எப்பொழுதும் விடுமுறை தினமென்றால் நளபாகம் எனக்கானது. உனக்குப் பிடித்த சிலவற்றை எனக்கு சமைக்கத் தெரியும் என்பதால் நீயும் சமாளித்துக் கொள்கிறாய் அடிக்கடி குறிப்புகள் கொடுப்பதோடு சரி.

காலை உணவு முடிந்தது, அடுத்ததாய் காத்திருக்கும் ஒரு வார துணிகளைப் பொறுக்கி எடுத்த படி மொட்டைமாடிக்கு செல்கிறோம். பக்கத்து வீட்டு அக்கா உன்னைப் பார்த்து புன்னகைக்க என்னை தள்ளியபடி முதலில் ஓடுகிறாய். இந்த வாரம் துவைப்பது நீ, அலசுவது நான். அடுத்த ஒரு மணி நேரம் கழிகிறது. வீட்டுக்குள் வந்ததும் கணினியை ஆன் செய்ய விழைகையில், குறுக்கே வந்து தடா என்கிறாய். வேறு வழிகளில்லை. உன்னுடைய ஸ்கூட்டியில் காய்கறி வாங்க அடுத்த பயணம். அடுத்து மதிய சமையல். உணவு, மதிய நேர தூக்கம் என நேரம் கடந்து விட மாலையாகிறது.

வாங்க சார் என எழுப்பி அழைத்துச் செல்கிறாய். இனி தப்பிக்க வழிகளே இல்லை. உன் நெடு நாள் ஆசை. ம்ம் நடக்கட்டுமென அமைதியாய் அமர மெல்ல டிரிம்மரை எடுத்து என் ஆறு நாள் தடியை செதுக்கத் துவங்குகிறாய். எல்லாம் முடிகையில் மீசையை சரி செய்வேன் என அடம் பிடித்து, நான் உன் கையை பிடிக்க, நீ திமிறி அழுத்த பாதி மீசை காணமல் போயிருக்கிறது. போடி என அடிக்க துரத்த, ஓடிச் சென்று ஒளிகிறாய். சிரித்தபடி முழு மீசையை எடுத்து விட்டு வருகிறேன், என்னையே எனக்கு புதிதாகப் பார்ப்பது போல் தெரிகிறது. இது வரை ஒரு நாள் கூட மீசை இல்லாமல் இருந்ததில்லை நான். நாளை அலுவலகத்தில் வரும் கேள்விகளை சிந்திக்கத் தொடங்கியிருந்தேன்.

அதன் பிறகு மீண்டும் தேநீர், சிறிது தொலைக்காட்சி என கழிய, இரவு உணவுக்குப் பின்னதான வேளையில் படுக்கையில் நான்.அருகே வந்து அமர்ந்து கொண்டு மன்னிசுடு டா என்கிறாய். இப்படி உன்னைப் பார்க்க எனக்கே பிடிக்கல, இனிமே இந்த மாதிரி விளையாட மாட்டேன் என்ற படி அருகில் சாய்ந்தாய். உன்னை இழுத்து அணைத்தபடி, விடுடா புஜ்ஜிமா, என் ஆபிஸ்ல பக்கத்து சீட் பொண்ணு ஒன்னு என்னை மீசை இல்லாம பார்த்தா நல்லா இருக்கும்னு அடிக்கடி சொல்லிட்டு இருந்துச்சு, காலைல அந்த பொண்ணுகிட்ட கேட்டுட்டு சொல்றேன் என்றேன் சிரிப்பை மறைத்தபடி . அருகிலிருந்த தலையணையை கையிலெடுத்தாய். மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறி சில நொடிகளில் இலவம் பஞ்சையும் சேர்த்துக் கொண்டு சுழலத் தொடங்கியது. இருவருக்குமான தலையணை யுத்தம் தொடங்கியது பிறகு முடிந்தது.

காலையில் பக்கத்து வீட்டுக்கார அக்கா கேட்கும் போது உன் உதட்டின் காயத்துக்கு காரணத்தை சொல்லிவிடு என்றபடி கிளம்பினேன், அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்கு இன்னும் ஆறு நாள் இருப்பதை சபித்தபடி...

"உன்னோடு கழிக்கும்
ஒவ்வொரு நாளையும்
திருவிழாவாக்கி விடுகிறாய்
உன் காதலால்..."

அம்மாவுக்காக

இன்றும் கூட மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரவு வேளைகளில் லாந்தர் விளக்கை ஏற்றி வைக்கிறாள் அம்மா, தனது நாற்பது வருட காலத்தை மின்சாரமின்றிக் கடந்தவள், நான் படிக்கும் நாட்களில் ஏறக்குறைய என் கல்லூரி காலம் முடியும் வரை என் வீட்டில் மின் இணைப்பு இல்லை. சிவப்பு வண்ணமடித்த விளக்கை மாலை ஆறு மணிக்கு ஏற்றி வைத்து படிக்கச் சொல்லுவாள். அப்பா எப்பொழுதோ காலி செய்த குவாட்டர் பாட்டிலில் துண்டுத் துணியால் திரி செய்து அதை விளக்காக்கி அதன் வெளிச்சத்தில் சமைக்கத் துவங்கும் அம்மா, அன்று காட்டு வேலையின் இடை நேரத்தில் பறித்த கீரைகளை மண்சட்டியில் வேகவைத்து சோற்றோடு பிசைந்து எனக்கு கொடுத்த அந்த நாட்களை எப்படி மறக்க...

முதலில் எழுத்து வேலைகளை முடித்து விட்டு நான் படிக்கத் தொடங்கும் போது பதினோரு மணி ஆகிவிடும். அதன் பிறகும் அம்மா படுக்கையில் அமைதியாக விழித்திருப்பாள். நான் உறங்கப் போகும் நேரத்தை கணக்கிட்ட படி. காலை ஆறு மணிக்கு என் தந்தை என்னை எழுப்பும் போது சரியாக நான் உறங்க சென்ற நேரத்தை சொல்லி "பாவம் விட்ட்ருங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்" என்று சொல்லியதை அரைகுறை தூக்கத்தில் கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் தெரியாது அம்மாவுக்கு எப்படி இது தெரியும் என்று, ஏனென்றால் என் வீட்டில் அப்பொழுது சுவர் கடிகாரம் கூட இல்லை. பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் புகைவண்டி ஓசை, தொழிற்சாலை மணியோசை என அவளின் நேரம் கணக்கிடும் முறை நானறியா ஒன்று.

தினமும் எட்டு ரூபாய்க்கு கூலி வேலை செய்து தினமும் அரிசி வாங்கி, டீ தூள் சர்க்கரை வாங்கி என்னை கொஞ்சம் கொஞ்சமாய் வளர்த்தவள் அம்மா.இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது, கடைக்கு செல்வதெனில் என்னை மட்டுமே அனுப்புவாள், காரணம் அதில் மீதமாக பெரும்பாலும் ஐந்து அல்லது பத்து பைசா கிடைக்கும். எதாவது தின்பண்டம் வாங்கிக் கொள்ள எனக்கு அனுமதியும் கிடைக்கும். எல்லோரும் மிதிவண்டி ஒட்டிக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு கிடைத்த டயர் வண்டியோடு சுற்றிக் கொண்டிருப்பேன். வாடகை சைக்கிள் மணிக்கு ஒரு ரூபாய். ஞாயிறு விடுமுறை நாளில் நிச்சயம் எனக்கு அந்த வாய்ப்பு உண்டு. எனக்கு அரை மணி நேரம், அக்காவுக்கு அரை மணி நேரம் என காலத்தையே பகிர்ந்த தருணம் அது.

அன்றிலிருந்து இன்றுவரை என்ன படிக்கிறேன் என கேட்டதே இல்லை. சிறுவர்மலர், பாலமித்ரா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என கிடைக்கும் எல்லாவற்றையும் ஓசியில் படித்து விடுவேன். குட்டி கபீசும், இரும்புக் கை மாயாவியும் இன்னும் நினைவில் இருக்க எதை வேண்டுமானாலும் படிக்கட்டும் என்று அம்மா எனக்கு கொடுத்த அதிக சுதந்திரம் இருந்தது. பத்தாம் வகுப்பு படித்து முடித்த வேளை, லாரி ஒர்க்சாப்பில் எனக்கு வேலை. ஒரு மாதம் முடிகையில் ஓரளவு மதிப்பெண்களுடன் தேறி இருந்தேன். பாலிடெக்னிக்கில் இடம் கிடைத்தது. அனைத்தும் இலவசம் என்றும், ஆண்டுக்கு புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களுக்காக 4000 ரூபாய் கட்ட சொன்ன போது யாருமே அன்றைய இரவில் தூங்கவில்லை.

இடையில் அக்கா படிப்பை நிறுத்தி விட்டு நூல் மில்லில் வேலைக்கு சேர்ந்ததும், அப்பாவின் வருமானம் கணிசமாக குறைந்ததும், அம்மா தன்னால் முடிந்தவரை குடும்ப பாரம் சுமந்ததுமாய் ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை. லாரி ஒர்க்சாப்பில் வாழ்க்கை நிரந்தரப் படும் என்று நினைத்த வேளையில், பக்கத்து வீட்டு ஓரளவு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இருவர் எனக்கான பணத்தை அதிகாலை அம்மாவிடம் கொடுக்க, அம்மா அழுது நான் பார்த்த முதல் நாள். அது வரை எதைப் பற்றியும் கவலைப் படாத, எந்த துயரத்தையும் தாங்கிக் கொள்ளும் இரும்பு மனுசி அவள் என்றே நினைத்திருந்தேன்.

படித்து முடித்து இன்று சம்பாதிக்கும் பொழுது தெரிகிறது அன்றைய ஒரு ருபாய் எத்தனை மதிப்புடையது என்று. அம்மாவிடம் கொடுக்கும் பணத்திற்கு எந்தக் கணக்கையும் இதுவரை கேட்டதில்லை நான், அது போல் என்னிடமும் அம்மா எவ்வளவு சம்பளம் என்று கேட்டதே இல்லை. ஒருமுறை உறவினரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொன்னதைக் கேட்டேன் "அவன் வயசில் அவனுக்கு எதுவும் வாங்கி தர முடியல, இப்போ அவனா எதை வாங்கினாலும் நான் கேட்க மாட்டேன்". அம்மா இது வரை என்னை ஒரு பணம் சம்பாதிக்கும் ஒருவனாக பார்த்ததே இல்லை. உனக்கு சரியானதை செய் என்பார், எனக்கு பிடிக்காத இடத்லிருந்து திடீரென வேலையை விட்டுப் போகும் போதும் என்னிடம் எதுவும் கேட்காமல் சிரித்தபடி சோறு போட்ட அம்மா என்றுமே தேவதை தான்.

இன்றும் ஏன் லாந்தர் விளக்கு எரிகிறது எனக் கேட்டேன் ஒரு நாள். அது என்னமோ தெரியல "எனக்கு அந்த வெளிச்சம் இருந்துட்டே இருக்கணும் போல இருக்கு குமாரு" என்று சொல்லும் போது அவள் கண்களில் எதோ ஒரு வலி இருந்தது. அது எனக்கானதாகவும் இருக்கலாம். இன்னமும் இரவு வேளைகளில் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது லாந்தர் விளக்கு அம்மாவுக்காக....

Mar 1, 2012

பீதோவன் - ஒரு புதையல்...

இசை என்றாலே என்னைப் பொறுத்தவரை ராகதேவன் இளையராஜா மட்டும் தான்... எனது இரவுப் பொழுதுகளை மிக மிக ரம்மியமாக்கிய பாடல்கள் பெரும்பாலும் இசைராஜாவின் திரைப் பாடல்களே... இன்றும் கூட அலைபேசி நினைவகத்தில் பெரும்பான்மை அவரின் இசையே நிரப்பி வைத்திருக்கிறேன்... இசை என்றால் இளைய ராஜாவை மட்டுமே அறிந்தவன் நான்.. மிக சில ரகுமான் பாடல்களும் பிடித்தமானவையே... இதில் என்ன வினோதம் என்றால் எனக்கு இசை என்றால் என்னவென்றே தெரியாது... வெறும் ரசனை மட்டுமே... சுருதி, லயம், தாளம் இன்ன பிற சங்கதிகள் பற்றி எந்த விஷய ஞானமும் துளி கூட இருந்ததில்லை.... வெறுமனே ரசிப்பதும், அதன் போக்கிலேயே மகிழ்வதும், சோகமாவதும், சிரிப்பதும், ஆடுவதுமாய் என்னை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தவை ராஜாவின் பாடல்கள்...

சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் இருள் இனிது... ஒளி இனிது வாசித்துக் கொண்டிருந்தேன்... இசை கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்ற கலைஞர்களை பற்றி வெளியான உலக திரைப் படங்களைப் பற்றி மிக அருமையாக எழுதி இருந்தார்... அதில் தான் "பீத்தோவனின் காதல்" இருந்தது... அதுவரை பீத்தோவனின் இசை என்று விண்டோசில் இருக்கும் இரண்டு மூன்று இசை கோர்வைகளை கூட என்னால் சரியாக கேட்கவில்லை என்பது மறுக்க முடியா உண்மை...அது போக பீதோவன் ஒரு காது கேளாதவர், அவருக்கு வெளி உலகம் அறியா காதல் இருந்தது என்பது வரை மட்டுமே தெரியும்...

பீதோவனைப் பற்றிய திரைப் படம் IMMORTAL BELOVED பற்றி சொல்லும் முன் அவரது தனிப் பட்ட வாழ்க்கைப் பற்றியும் சொல்லி இருந்தார் எஸ்.ரா. கூடவே இடை செருகலாக மொசார்ட் பற்றிய AMADEUS திரைப் படம் பற்றியும் ... அந்த நூலில் பீதோவன் வாழ்வைப் பற்றிய சிறு குறிப்பையும், திரைப்படம் குறித்த தனது பார்வையையும் அழகாக சொல்லி விடுகிறார் எஸ்.ரா. ஆனால் எனக்குள் எஸ்.ரா அறிமுகப் படுத்தியது பீதோவன், மொசார்ட் என்னும் இரு இசை மேதைகளின் இசையை... இணையத்தில் பதிவிறக்கம் செய்து முதலில் பீதோவனை கேட்ட்கத் தொடங்கினேன்.. அது வரை இசைக்கு பாடலின் வரிகள், அதன் பொருள் மிக முக்கியம் என்று சொல்லி வந்தவன் நான்... வெறும் இசை பொருளற்றுப் போய்விடுகிறது, இசையையும் பொருளையும் மிக அற்புதமாக கோர்த்ததே இளைய ராஜாவின் மிகப்பெரும் சவால் என்று நம்பிக் கொண்டிருந்தேன்...



அனால் என் முடிவுகளை பொடிப் பொடியாக்கி, மௌனமாய் என்னை மாற்றி வைத்தான் பீதோவன். மெல்ல மெல்ல இசை உருமாறி உயிருக்குள் ஊடுருவதும் அதை தள்ளி நின்று நானே வேடிக்கை பார்ப்பதுமான விந்தை... இன்றும் பீதோவன் கொண்டாடப்படுவதன் காரணத்தை மிக மிக காலம் கடந்து அறிந்து கொண்டிருக்கிறேன்...மூன்லைட், சிம்போனி 9.. போன்ற மிகச் சிறந்த இசைக் கோர்வைகளை காது கேளா ஒருவரால் எப்படி இவ்வளவு ரம்மியமாக உருவாக்க முடிந்தது என்று புலம்ப வைத்திருக்கிறான் பீதோவன்... எத்தனையோ அவமானங்களையும், சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களையும், வலிகளையும் தாங்கி கொண்டே தனது இசை பயணத்தை தொடர்ந்திருக்கிறார் மாபெரும் இசை மேதையான பீதோவன்...அதுவே அவரது இசையில் வெளிப் படுகிறது... உணர்வுகளை பாடிய, இசைத்த ஒருவனின் வெற்றியே பீதோவன் என்னும் தனி மனிதனின் வெற்றி...

அப்புறம் மொசார்ட்... பீத்தோவனின் தந்தை ஒரு இசை பாடகர்.. தனது மகன் மொசர்ட்டைப் போல் பெரிய இசைக் கலைஞனாக வர வேண்டும் என்ற ஆசையில் தான் இசை கற்றுக் கொடுத்திருக்கிறார்... மொசார்ட் மற்றுமொரு சகாப்தம்.. பீதோவனுக்கு முந்தையவர் எனினும் அவரது இசை சொல்ல முடியா மகிழவையும் அதே சமயத்தில் நம்மில் எதோ இழந்த ஒன்றை நினைவு படுத்தவும் செய்கிறது... அந்த மகிழ்வில் இனம் புரியா சோகத்தையும் படரச் செய்கிறது...

இசையை மட்டுமே தான் வாழ்நாளென கொண்டிருந்த இரு இசைமேதைகளை அறிமுகப் படுத்தியது இருள் இனிது... ஒளி இனிது...நன்றி எஸ்.ரா வுக்கு...

எஸ்.ராவின் வரிகளில் சொல்வதெனில்... "இவ்வுலகை சந்தோசப் படுத்த நினைத்த எல்லோரின் பின்னாலும் மறைந்திருக்கிறது சொல்ல இயலா துயரங்கள்..."




உண்மை தான் நாமும் இசையிடம் மயங்கி நிற்பது நாம் எதோ ஒரு வகையில் காயம் பட்ட மனதை மயிலிரகென வருடுவதால் தான்... இசை நம்மை மகிழ்விக்கிறது,துயரங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுவிக்கிறது... மறக்க முடியாத சில உறவுகளின் நேசத்தை மீண்டும் மீண்டும் நினைவு கொள்ள வைத்து, அவர்களே நம் வாழ்வெங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதை நம்மிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது....

Feb 21, 2012

அணுமின்சாரம்...


அண்மைகாலமாக அனைத்து அறிவு சார் நண்பர்களாலும் மீண்டும் மீண்டும் கூடங்குள அணுமின் நிலைய ஆதரவு பெருகிக் கொண்டு வருகிறது.இந்திய அரசும், தமிழக அரசும் ஆளுக்கொரு குழுவினை அமைத்து அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று ஆணித்தரமாக சொல்லப் பட்டுவிட்டது.ருஷ்ய அணுஆராய்ச்சியாளர்களும் தங்களின் அதி நவீன படைப்பை பெருமைப் படுத்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.அப்படியே செயல்படுவதாக வைத்துக் கொண்டாலும் தமிழகத்தின் மின் தேவைகளை இது பூர்த்தி செய்துவிடுமா? இதில் பெறப் படும் மின்சாரம் எந்த் மாநிலங்களுக்கு, எந்த நாட்டுக்கு
பயன்படப் போகிறது என்பதுவும் முக்கியமான ஒன்று.

பாதுகாப்பானது, பாதுகாப்பானது என்று வானுயர ஒலிக்கிறது குரல். ஜப்பானில் இல்லாத தொழில் நுட்ப பாதுகாப்பா?புகுஷிமா அணு உலை விபத்தில் உலகிற்கு மறைக்கப் பட்ட செய்திகள் நிறையவே, குறிப்பாக உயிர் சேதம் குறித்த தகவல்கள். சுமார் இருபதாயிரம் வரை இருக்காலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் கிட்டத் தட்ட இரண்டு இலட்சங்களை தொட்டிருக்கிறது உயிர் இழப்புகள். ஜப்பானின் மக்கள் தொகை, அவர்களின் தொழில் நுட்பம், உலக நடுகளின் உதவிகள் என அனைத்தும் இருந்தும், மிக மிக விரைவில் அணு உலை கதிர்வீச்சுகள் கட்டுப் படுத்தப் பட்ட போதிலும் அச்சிறிய நாட்டுக்கு இந்த மக்கள் தொகை இழப்பு என்பது மிக மிக அதிகமானது.சரி இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஜப்பானின் தொழில் நுட்பம் இங்கே இல்லை எனும் போதும் நாம் கொஞ்சம் கூட சளைத்தவர்களில்லை. என்ன சுற்றி வாழும் அப்பாவி மக்களின் அடுத்த தலைமுறையோ, அதற்குப் பின் வரும் சந்த்தியினரோ தான் பாதிக்கப் படப் போகிறார்கள். தமிழ் நாட்டில் பூகம்பமே வராது... என்ன தான் சுனாமி பேரிடர்கள் வந்த போதிலும் அணு மின் நிலையம் எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாது. எந்த வெங்காயப் பாதுகாப்போ, மூன்றடுக்கு,நான்கடுக்கு அன்று வரிசைப் படுத்திக் கொண்டாலும், அதே எச்சரிக்கை ஏன் மக்கள் வாழும் எண்ணிக்கை அதன் சுற்றுப் புற மக்கள் பெருக்கம் போன்ற சாதராண விஷயங்களில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.அதுவும் படித்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களிடையே இருக்கும் பிரச்சனையே, எதற்காகவும் போராட மாட்டார்கள். தொலைக் காட்சியிலும், செய்தித் தாள்களிலும் அரசு தரும் அறிவியல் பூர்வமான விளக்கங்களை படித்து விட்டு மித மிஞ்சிய அணு அறிவால்? ஏன் இந்த வெற்றுக் கூட்டம் சில வெளி நாட்டு சக்தி( இது தனி விவகாரம்) களிடம் பணம் வாங்கிக் கொண்டு நல்ல திட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது எனும் சிந்தனையில் அறிவுபூர்வமாக விவாதிக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. எனக்கும் கூட அவனவனுக்கு வரும் போது செத்து தொலையட்டும் என இருந்து விடலாம் என்று தோன்றுகிறது, என்ன செய்ய நான் அப்படி சிந்திக்கப் பழகியவன் அல்ல.


எதுவும் நடக்கவே நடக்காது என்று சொல்லி. எதாவது ஒரு விதத்தில் நடந்தே விட்டால், போபால் சம்பவம் எனக்கும் செய்தியாகவே தெரியும். ஆனால் மறுக்க முடியா உண்மைகளும் இன்று வரை கண்முன் தொடர்கிறது. இந்த நொடி பிறக்கும் குழந்தை எதாவது ஒரு குறையுடன் பிறக்கிறது. இன்று வரை அதன் கழிவுகள் முழுமையாக அகற்றப் படவில்லை. விபத்து நடந்து இத்தனை ஆண்டுகள் முடிந்தும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் நம் அறிவாளி கூட்டங்கள்? இது வரை எத்தனை மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பட்டிருக்கிறது. இந்த குற்றத்திற்கு யார் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.சரி எனக்கு அறிவியல் தெரியாது, ஆனால் இந்திய மற்றும் தமிழக அரசு சுயனலவாதிகளின் கபடங்கள் தெரியும். விஷ வாயு கசியும் காரணம் சொல்லி கைது செய்யப் பட வேண்டிய ஒருவனை பாதுகாப்பாக வெளி நாட்டுக்கு தப்ப வைக்கும் அயோக்கியர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள். இப்பொழுது இன்னும் அதிகமாகி இருக்கிறார்கள்.தமிழ், தமிழ் என சொல்லிக் கொண்டே தமிழர்களை அழிக்கும் நாசகாரக் கும்பல், அதை வேடிக்கை பார்க்கும் மற்றொரு கும்பல், தந்தை பெரியாரின் வழித் தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த இரு அயோக்கிய பதர்களும் இங்கு தான் இருக்கிறார்கள்.

எங்கு ஆபத்து இல்லை, வீட்டில் எரிவாயு வெடிக்காதா? பேருந்து கவிழாதா? ரயில்கள் விபத்துக்குள்ளாகாதா? இப்படி என்னைச் சுற்றி கேள்வி கேட்கும் கும்பல்களுடன் நானிருக்கிறேன். அப்போதைய விபத்துகள் எதிர்கால சந்ததிகளை பாதிப்பதில்லை. எதற்கும் விஷ வாயு கசிவினால் இப்பொழுது போபாலில் பிறக்கும் குழந்தைகளின் நிலை பற்றி விசாரித்துப் பாருங்கள்.இங்கு வியாபாரமாக்கப் பட்டு வரும் கல்வியைப் பற்றியோ, மருத்துவமனை கொள்ளைகளைப் பற்றியோ, நீர்ப்பாதையின் மணல் திருடப்படுவது பற்றியோ, பரமக்குடி, வாச்சாத்தி நிகழ்வுகள் பற்றியோ எந்த நடுத்தர வர்க்கத்திற்கும் கவலை இல்லை.. கொலைவெறிப் பாடலும், நயன்தாராவின் காதலுமே மிக முக்கியமான ஒன்றாக முன் நிற்கிறது. குழந்தைகள் கல்வி என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பணம் சேர்க்கும் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்க மகிழ்வோடு வேடிக்கை பார்க்கிறது, மிஞ்சிப் போனால் ஒரு ஐ.டி பொறியாலனை உருவாக்கி வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி மகிழும் மனநிலை மாறி விடப் போவதில்லை. தான், தன் குடும்பம் என்ற சிந்தனை மட்டுமே முக்கியமாகிப் போன சமூகத்தில், தனிமனித சுகங்களே பெரிதாய் கவனத்தில் கொள்ளப் படுகின்றன. இது ஒரு மன நோய் அன்றி வேறில்லை..

ஒன்று மட்டும் நிச்சயம், ஒரு பேரினவாத அரசையோ, மின் தேவை அதிகம் தேவைப் படும் பணக்கார தொழில் முதலாளிகள் கூட்டமோ நிச்சயம் இத் திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டு விடப் போவதில்லை.யார் போராடினாலும். அது சுயநலமோ, பொதுநலமோ தடுத்து நிறுத்தி விட இயலாது. எப்படியும் இன்னும் சிறிது நாட்களில் செயல் படத் துவங்கும் இந்த அணு உலை நிச்சயம் நம் தலைமுறையை பாதிக்கப் போவதில்லை.உங்களது குழந்தைகளோ, அவர்களது சந்ததியினரோ பாதிக்கப் படுவதை நாம் இருந்து பார்க்கப் போவதுமில்லை. வாழ்க அணு உலை. வாழ்க மின்சாரம்.

நிச்சயமாக இது அறிவியல் பூர்வமான ஒருவனின் செய்தி அல்ல, ஆனால் என் வருங்கால மனித இனத்திற்கு பூக்களை மட்டுமே பரிசளிக்க விரும்பும் ஒருவனின் அலறல் சத்தம்... அவ்வளவே...

Dec 1, 2011

இன்னும் எதோ ஒன்று சொல்வதற்கென மீதமாய்...

கடிதமென்றே எழுதத் துவங்குகிறேன் இதை...எத்தனையோ வருடங்களை தாண்டி நெடு நாட்களுக்குப் பிறகு இன்று தொடங்கும் பொழுது கடிதமென எழுதும் கலை கைவரவில்லை. இருந்தும் தொடங்கியாயிற்று...

ஒரு ஒய்ந்து அடங்கிய ரயில் பாதையில் தனியே அமர்ந்து கொண்டு இதை ஆரம்பிக்கிறேன்.ஒரு சிறுவனை போல தண்டவாளத்தில் காதினை வைத்து ஒலிகளை உணர முடியவில்லை என்னால். இப்போதிருக்கும் மன நிலையில், பயன்பாட்டில் இருக்கும் தன்டவாளமென இல்லாமல் மழையிலும் வெயிலிலும் நனைந்தும் காய்ந்து துருவேறிக் கிடக்கிறது. சில நாட்களாக அடித்துக் கொட்டிய மழையில் இருப்புக் கம்பிகளை மறைத்து உயர்ந்து நிற்கிறது புற்களின் கூட்டம். இன்னும் வெப்பம் தயாரிக்காத கதிரவனிடமிருந்து தப்பிய படி படர்ந்திருக்கிறது அதிகாலை பனி துளிகள்.என் கரங்கள் என் இரு அலை பேசிகளையும் கவனித்துக் கொண்டே இருக்கிறது... உன்னிடமிருந்து வரும் ஒரு குறுஞ்செய்திக்கோ, ஒரு தவறிய அழைப்புக்கோ...

தண்டவாளக் கம்பிகள் முன்னாளில் எத்தனை நீராவி இயந்திரங்களையும், பயணிகள் ஏற்றப் பட்ட பெட்டிகளையும் சுமந்திருக்கும்.எத்தனை மனிதர்கள் எந்தெந்த காரணங்களுக்காகவோ பயணம் தாங்கி இருக்கும் இந்தப் பாதை, இப்பொழுது கையசைத்துப் பார்க்கிறேன் அப் பயணங்களில் சென்றிருக்க கூடிய குழந்தைகளுக்கென... முன்னால் விரியும் கனவுக் காட்சியில் பதிலுக்கு கையசைக்கும் குழந்தைகள். பயணம் முடித்த பெட்டிகள் இப்பொழுது எங்கிருக்கும், ஒரு வேளை பயன்படாதென உடைத்து போட்டிருக்கவும் கூடும். அலை பேசியில் மெல்லிசை தவழ்கிறது, நீயோவென எப்பொழுதும் போல எதிர் பார்த்து ஏமாறுகிறது மனதும் நினைவும்...

பயன்பாட்டில் இல்லையெனும் பொழுதும் ஏன் இன்னும் இப் பாதையை, கம்பிகளை, குறுக்கு கட்டைகளை இப்படியே வைத்திருக்கிறார்கள். யாருடைய நினைவுப் பொருளாக இன்னமும் இது காலம் காலமாய் காத்துக் கொண்டே இருக்கிறது. எத்தனையோ உறவுகளை புதிதாய் ஒரு காலத்தில் மலர வைத்திருக்கலாம், எத்தனையோ காதலர்களை சுமந்திருக்கலாம், பின்னர் அவர்களின் பிள்ளைகளையும் அவர்களின் காதல்களையும். என் தலைமுறைக்குத் தான் தகுதியின்றி போனதோ என்னவோ...எப்போதோ ஒரு முறை தனிமையில் சந்திக்கும் காதலர்களும், விடுமுறை நாளன்று மதுப் புட்டிகளோடு கூடுபவர்களையும் தவிர்த்து, வேறு யாருடைய நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது இப் பாதை.

என்ன இது உனக்கென்ன எழுதும் ஒன்றில் இருப்புப் பாதைகளைப் பற்றி எழுதுகிறேன்... சரி தான், இதே போலத் தான் தட தடத்திருக்கும் உன் மனமும் உன் அழைப்புகளை நான் நிராகரித்து மௌனமாய் இருந்த போதும்...எல்லாவற்றையும் பரந்து விரிந்து பார்க்கிறேனோ இல்லையோ, கொஞ்சம் புரிந்து கொள்ளவாவது செய்கிறேன். உன்னிடம் மட்டும் ஏன் இந்த அழிச்சாட்டியம் செய்கிறது மனசு. எந்த ஒரு நொடியிலும் அறிவை வைத்து உன்னையும் என்னையும் சிந்திக்க விடுவதே இல்லை. வெறும் உணர்ச்சி களின் கொந்தளிப்பாகவே மாறி விட்ட பிறழ்வு நிலையில் கோபம் கொண்ட மிருகமென மாறி விடுகிறது என் மௌனம். அதீத கற்பனைகளில் என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன். நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்லி விடலாம் ஒரு நொடியில், எனக்கு அந்தக் கவலைகள் இல்லை. இவ்வுலகில் நான் யாரையும் விட உன்னையே நம்புவேன்... என்னை விடவும். பிறகு ஏன்?

அருகில் உள்ள பாதையில் கடக்கிறது மின்ரயில். புகையில்லை, அருகாமை வெப்பமில்லை. அதிக பட படப்பும் இல்லை. அதிக வேகம் இருக்கிறது. குழந்தைகளும் மற்றவர்களும் வேகமாகவே கடந்து போகிறார்கள். இப்படித் தான் உன் மீதான என் கோபமும் கூட அதி வேகமாக கடந்து விடுகிறது. மிஞ்சும் அன்பைக் கொண்டு என்னை தவிக்க விடுகிறது அதே கோபம். மீண்டும் அழைக்கிறது அலை பேசி, ஆர்வமே இல்லாமல் எடுக்கும் பொழுது யாரோ ஒருவர் தஞ்சாவூருக்கு பஸ் எத்தனை மணிக்கு தம்பி என்கிறார்? என்ன பதில் சொல்ல... தெரியலைங்க என்ற படி துண்டிக்கிறேன்.

உண்மையில் உனக்கு நேசிக்கவும், அன்பை பகிர்ந்து கொள்ளவும் உறவுகளும் நட்புகளும் அதிகமாகவே இருக்கலாம். சில பகிர்வுகள் மட்டும் நமக்கானவை சில நம் கனவுகளுக்கானவை. தனிமையில் புலம்பித் தவிக்கும் எனக்கு, உன்னைத் தவிர வேறு யாரிடமும் சிரிக்கவும், அழவும் தோன்றுவதில்லை என்பது மறுக்க இயலா நிதர்சனம்.நான் கோபம் கொள்பவன் தான் ஆனால் சந்தேகிப்பவன் அல்ல. எனக்கென்று ஒரு இடம், நானிருந்த ஒரு இடம், வேண்டாம் என நீயே சொல்லி தள்ளி வைத்த ஒரு இடம்... எப்படி முடிகிறது உன்னால், அதை வேறொன்றால் நிரப்ப...காரணங்களே இல்லை எனும் போதும்... அது என் இடம்.

எல்லோரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி தான், ஏன் எழுதுகிறீர்கள்? என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வசதியாய் இருக்கிறது... உண்மை உனக்குத் தெரியும், காரணம் அதுவல்ல... நீ என்னை நேசிக்க, நான் உன்னை நேசிக்க... உன் நேசத்தினால் எழுதத் துவங்கியவன், என் கனவுகளை வண்ணத்துப் பூச்சிகளின் இறகுகளில் வண்ணங்கள் எனத் தீட்டி உன் வீட்டுத் தோட்டத்தில் பறக்க விட்டவன். உன் கனவுகளை கடன் வாங்கி சில கற்பனைகளை கலந்து கவிதைகள் செய்து அதில் வாழத் துவங்கியவன்...இன்னும் சொல்வதென்றால் நான் வாழ்வது உன் நாட்களை கடன் வாங்கிக் கொண்ட பிறகு தானே...

கை நிறைய மீதமாய் நாட்களை வைத்துக் கொண்டு என்ன செய்வதென தெரியாமல் இடுக்குகளின் வழியே ஒழுக விடுகிறேன். நீ இல்லாத நாட்கள், உன்னுடன் பேசாத மொழிகள், உன்னைப் பேசாத கவிதைகள்... போடி... நீரின்றி அமையாது உலகு என்பதைப் போல நீ இன்றியும் அமையாது என் உலகு...இத்தனைக்குப் பிறகும் ஏதோ ஒன்று சொல்வதற்கென மீதமாய் உணர்கிறேன்... உன் காதுகளில் சொல்கிறேன் ,அழைத்து விடு தேவதைகளின் ராட்சசியே...

மழை...



Aug 12, 2011

இரோம் ஷர்மிளா


நேற்று ஒரு பதிவை கணினியில் எழுதிக் கொண்டிருந்த பொழுது தோழர் சந்தோசு செல்வா அரட்டையில் வந்தார்... பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம், சேகுவேரா, ஈழத் தலைவர் பிரபாகரன் ஆகியோரை பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது " மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா பற்றி சொன்னார்.. மிக சமீபத்தில் ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் வாசித்த நினைவு வந்தது... நாம் அனைவரும் விளம்பரப் படுத்தப் பட்ட அன்னா ஹசாரே போன்றோரை மட்டுமே தூக்கிப் பிடித்து கொண்டிருக்கிறோம்... வட கிழக்கு மாநிலங்களில் இந்திய பேரினவாத அரசு எப்பொழுதும் முறைகளையே கையாண்டு வருகிறது.. நாம் இந்தியாவின் வடகிழக்கு மாநில முதல்வர்களின் பெயர்களைக் கூட தெரிந்து வைத்திருக்கப் போவதில்லை... இங்கே இரோம் ஷர்மிளா குறித்த சில தகவல்கள்....

"மணிப்பூர் அயர்ன் லேடி" அல்லது "Menghaobi" என்று அழைக்கப்படும் ஷர்மிளா(மார்ச் 14, 1972 இல் பிறந்தார்,பெற்றோர் கேட்ச் நந்தா (தந்தை), Ongbi சக்தி (அம்மா) ஒரு சிவில் உரிமைகள் ஆர்வலர், அரசியல் ஆர்வலர், மற்றும் கவிஞர் . அவர் முதல் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வன்முறை சட்டங்கள் இது ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம், 1958 (AFSPA), நீக்கப் பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக உணவு மற்றும் நீர் மறுத்து, அவர் "உலகின் மிக நீளமான பசி" என்று அழைக்கப்படுகிறார்.

நவம்பர் 2,2000 தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பத்து அப்பாவி மக்களை அஸ்ஸாம் ரைபிள்ஸ் எனும் இந்திய துணை ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றனர்."மலோம் படுகொலை" என்று அழைக்கப்பட்ட இந்த கொடிய நிகழ்வு இந்திய வன்முறை ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப் படவே இல்லை. அக்கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு தண்ணீர் இன்றி போராட்டத்தை துவக்கினார் ஒரு கால்நடை தொழிலாளியின் 28 வயது மகள். அவர் இரோம் ஷர்மிளா.

அவர் உண்ணா விரதம் தொடங்கிய மூன்று நாட்களுக்கு பின்னர், போலீஸ் மூலம் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 309 கீழ் சட்டவிரோத "தற்கொலைக்கு முயற்சி", என்கிற பேரில் கைது செய்யப் பட்டார் , பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை வேகமாக சீரழிந்து, காவலில் பின்னர் வலுக்கட்டாயமாக உயிரோடு வைக்க nasogastric செருகல் பயன்படுத்த பட்டது . அதிலிருந்து IPC பிரிவு 309, இன் கீழ் ஒவ்வொரு ஆண்டும், ஷர்மிளா கைது செய்யப் படுவதும் வெளியே விடப்படுவதும் வழக்கமாகிப் போனது. மீண்டும் கைது "தற்கொலை முயற்சிகள்" [அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து] ஒரு வருடம் நீட்டிக்க மீண்டும் மீண்டும் தண்டிக்கப் பட்டுள்ளார்.
இந்திய அரசாங்கம் 2000 ல் இருந்தது "காலவரையறையின்றி ஒரு கிளர்ச்சி" என்ற சந்தேகத்தின் பேரில் எந்த குடிமகனையும் தடுத்து அனுமதிக்கும் AFSPA,. சட்டம் எதிர்ப்பு மற்றும் சித்திரவதை, மனித உரிமைகள் மறுத்தல் , கட்டாய காணாமல் போதல் ஆகியவற்றை பொது மக்களிடையே கடைப்பிடித்து வருகிறது.


அவருக்கு 2005ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்க சிபாரிசு செய்ய ஒரு மகளிர் அமைப்பு கோரியது.அவருக்கு "அமைதி, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் உயர்வு மற்றும் வாதிடும் செயல்படும் ஒரு சிறந்த நபர் அல்லது குழு," இது மனித உரிமைகலுக்கான Gwangju பரிசு 2007 இல் வழங்கப்பட்டது."மக்கள் காவல் துறையினர்" என்ற லெனின் "ரகுவான்ஷி" விருதை பகிர்ந்து மனித உரிமைகள் குழு.

28 நவம்பர் 2010 அன்று, பிரிட்டன் பசுமை கட்சி தலைவர் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கெய்த் டெய்லர் ஷர்மிளா கோரிக்கையான AFSPA நீக்கப்பட வேண்டும் என இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

இது போன்ற தேவதைகளும் இந்த மண்ணில் பிறந்தது துயரப்படவே தவிர வேறெதற்கும் இல்லை. வணங்குகிறேன் தோழி.

நன்றி தோழர் சந்தோசு செல்வா... இந்த தோழியின் புகைப்படத்தை உங்கள் முகவரியாக கொண்டதற்கு...

Aug 8, 2011

உயிர்க் கோலம்










நகரமும் அல்லாத கிராமத்தின் பழமை தொலைத்த என் ஊர்...விடியற் காலை... பனி பொழியும் இந்த நாளின் துவக்கத்தில் வெளியூர் பயணம்.... தெருவெல்லாம் அமைதியாய், இரவு நேர தெரு விளக்குகள் சில எரிந்தும் எரியாமலும்... குளிருக்கு நான் பிரத்யேகமாக வேறு உடைகள் அணிவதில்லை. மெல்லிய குளிர் ஒரு அனுபவம்... மெல்ல உடலில் ஊடுருவி, முழுதும் ஆக்கிரமித்து, அமைதியாய் ரசிக்கவைக்கும் ஆனந்தம்.... ரயில் பயணங்களில் ஜன்னலோர இருக்கை போல... இரண்டு தெருக்களை தாண்டி நடக்கிறேன்... ஒரு இளம் பெண் தான் வீட்டு வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள்... மனம் லயித்துப் பார்த்துக் கொண்டே கடந்து போகிறேன்... பேருந்து நிறுத்தம், கூட்டமின்றி வந்தது ஒரு அரசு பேருந்து... அங்கிருந்து நகரப் பேருந்து நிலையம், மறுபடி ஒரு நீண்ட பயண தொடக்கம், இடையில் நுரையீரலை புகையால் நிரப்பிக் கொண்டேன்...

பேருந்து வெறுமையாக இருந்தது... இரண்டே பேர்... ஓட்டுனர், நடத்துனர் என்னோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர்... எப்பொழுதும் போல எனக்குப் பிடித்த ஜன்னலோர இருக்கை... சில அமைதியான நிமிடங்கள்... நகரம் விட்டு வெளியே வந்திருந்தது பேருந்து... என் நினைவுகள் காலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பெண்ணை சுற்றத் துவங்கியது... இதே போல் நான் வெகு நாட்கள் வாழ்ந்திருக்கிறேன்... குளிர் காற்று முகம் வருட,முன்னோக்கி நகரும் பேருந்தில் பின்னோக்கி நகர ஆரம்பித்தன என் நினைவுகள்....

அது அவளின் கிராமம், பெயர் என்று ஒன்று இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அது அவளின் கிராமம். அடிப்படை வசதிகள் கூட முழுமையாய் சென்றடையாத அந்த மிக சிறிய பகுதி நகரத்திலிருந்து கிட்டத் தட்ட முப்பது கிலோமீட்டர்களில் இருந்தது. நீரோடையின் சலசலப்பு, மரங்களின் தூய்மையான காற்று, மதிய நேர வெயிலோடும் கூட குளுமையை பரப்பி நிற்கிறது உனது கிராமம், உன்னை வளர்த்த கிராமம். நீ நடந்த தெருக்களும், நீர் பிடிக்கும் தெருக் குழாய்களும், கிணற்றடியும் என்றும் உன் வரவிற்காக காத்துக் கொண்டே இருந்தன. உன் வீட்டின் முன் ஒரு பெரிய வேம்பும், அதனால் உன் வீடு வாசலில் படரும் நிழலும், அதில் வசித்த பறவைகளும், நிழலில் படுத்துறங்கும் நாயும் காணாமல் போயிருக்கும் இந்நாட்களில்....என் நினைவில் நீங்காமல் இருக்கிறது நம் முதல் சந்திப்பு, அது என்னையே எனக்கு அறிமுகம் செய்த முதல் பயணத்தின் தொடக்கம்.. ஒரு மலையின் குகைக் கோவில் ஓவியங்கள் போல மறையாமல் இருக்கிறது நம் நினைவுகள்...

அந்த அதிகாலையில் நான் பணிக்கென தனியே நடந்து வருகையில் உன் வீட்டு வாசலுக்கு நீ நீர் தெளித்துக் கொண்டிருந்தாய். அதிகாலை மண் வாசனை புறப்பட்டு என்னை மென்மையாய் வருடிச் சென்றது. உன் விரல் பட்ட நீர்த் துளிகளெல்லாம் பனித் துளிகளாகவும், விரல் பட காத்திருந்த துளிகளெல்லாம் பன்னீர்த் துளிகள் போலவும் இருந்தன.உன்னை கடந்த அந்த நொடியில், தலை குனிந்தவாறு உன் விரல் பட்ட நீர்த் துளிகள் என் மீது பட்டுவிட தயங்கி நின்றேன். நிமிர்ந்து நீ என்னைப் பார்த்த அந்த பார்வையில் கோரப்பட்ட மன்னிப்பு, சற்றே மிரண்ட மானின் பரிதவிப்பு இரண்டுமாய்.. நேர்கோட்டில் சந்தித்த பார்வையை தவிர்க்க வேண்டி நீ தலை குனிந்தாய்.. அழகிய மலரொன்று அதிகாலையில் தலை குனியுமா என்ன... முகம் பார்த்து ரசிக்க முடியா ஏமாற்றம் எனக்கு...

அடுத்த நாளும் அதே அதிகாலையில் மீண்டும் வருகிறேன், நிகழ்ந்து விடாதா நம் அடுத்த சந்திப்பு என்கிற பதைக்கும் மனதோடு.ஆனால் இன்று நீ வாசலுக்கு தெளித்துக் கொண்டிருந்தது பசும் சாணம் கலந்த நீர். என் ஆடை மீது பட்டு, புது வண்ணம் கொண்டது மேல் சட்டை.. நிமிர்ந்து பார்த்தேன், இம்முறை நீ நிற்கவில்லை, பதற்றத்துடன் வீட்டுக்குள் ஓடினாய்.. திரும்பி அறைக்கு வந்து வேறு உடை மாற்றி திரும்புகிறேன், வாசலில் நீ... உன் வீடு கடக்கும் பொழுது ஒளிந்து கொண்டு, சென்ற பின் வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாய். திரும்பி முகம் பார்த்தேன், இந்த முறையும் தலை குனிந்தாய் சிறு புன்னகையோடு... பின்னொரு நாளில் தான் தெரிந்தது, முதலில் நான் அணிந்து வந்த உடையின் நிறம் உனக்கு பிடிக்காது என்று... அதிலிருந்து அந்த மேல் சட்டை அணிவதில்லை நான்..

அடுத்தடுத்த நாட்களிலெல்லாம் நீ நான் வரும் முன்னதாகவே நீர் தெளிப்பாய், உன் கைகளில் கோலப் பொடிகளுடன் வர்ணமாய் மாறிக் கொண்டிருக்கும் உன் வாசல். சில பண்டிகை நாட்களில் தெரு முழுதும் வண்ணமயமாய்... கோலத்தின் இறுதியில் நீ எழுதிப் போகும் நல்வரவு எனக்கானது என்று எனக்குத் தெரியாமலா போகும்...ஆர்ப்பரிக்கும் மனதோடு அலைந்த நாட்கள் அவை. முதலில் புள்ளிகள் தொடங்கும் போதே நம் கருவிழிப் புள்ளிகளும் சந்திக்கத் தொடங்கின. நம் பார்வையின் சந்திப்பில் பல நேரங்களில் சிதறிப் போயிருக்கிறது நீ வைக்கும் கோலப் புள்ளிகள். சில நேரம் மிதிக்காமல் செல்ல வேண்டி நான் தயங்கி நிற்கும் பொழுது, எழுந்து நின்று வழி விடுவாய். அப்பொழுது தான் பார்ப்பது போல் பார்ப்பேன், அதிகாலை வானம் சிவக்கிறது உன் முகத்தில். வாசல் கோலங்களை விட்டு உன் முகத்தின் அழகுக் கோலத்தை ரசிக்கத் தொடங்கிய தினம் அன்று... தினமும் வழக்கமாகிப் போனது உன் முகமும், வாசல் வர்ணங்களும்...

இப்பொழுதெல்லாம் நான் அதிகாலை விடியலுக்கு காத்திருக்க, தவமிருக்க ஆரம்பித்தேன். உன்னைக் காணும் அந்த நொடிகளுக்காக நாள் முழுதுமாக காத்திருக்கிறேன் என்ற உண்மை என்னில் உணர்கிறேன்.. சற்றே முன்னேற்றம் பெற்று புள்ளிகளிலிருந்து வளைவுகளுக்கு வந்திருந்தது உன் கோலம்.பார்வைகளிலிருந்து புன்னகைகளாய் உரு மாறியிருந்தது நம் உறவு. தினமும் அதிகாலை நேர பறவையின் குரல்களும், சிவந்த கதிரவனின் ஒளியும் நம்மை மெதுவாக ரசிப்பது போல இசையும் ஒளியும் மனதில் காதலென குடிகொண்ட அந்த அற்புத மணித் துளிகள்.காதலா இல்லை ஈர்ப்பா என உணரும் முன்னரே, என் பணி மாற்றம் காரணமாய் வேறு இடத்திற்கு மாற வேண்டி வந்தது... அன்று நம் கடைசி சந்திப்பு.. அன்றும் அதிகாலை தான். என் கையில் வழக்கத்திற்கு மாறாக புதிதாய் பயணப் பெட்டி. அன்று நீ அப்பொழுது தான் நீர் தெளித்துக் கொண்டிருந்தாய். உன்னைக் கடக்கும் பொழுது வேண்டுமென்றே நின்றேன், கைகளில் மட்டுமன்றி, கண்களிலும் நீர்த் துளிகளோடு நீ. இருவர் கண்களிலிருந்தும் தானாக விழுந்த துளிகளில் உன் வீட்டு வாசல் ஈரமாகி கொண்டிருந்தது...

அன்றிலிருந்து பண்டிகை நாட்களைத் தவிர வேறு நாட்களில் நீ கோலமிடுவதில்லை என்றும், உன் தாய் தான் தினமும் வாசலில் நீர் தெளிக்கிறார்கள் எனவும் நண்பனை விசாரித்த பொழுது தெரிந்து கொண்டவை. கனத்து போன இதயம், புரட்டி போட்ட காலம், பணி மாறுதல்கள், பயணங்கள், பல்வேறு நகரங்கள்.. எதிலும் மறக்க முடியா உன் நினைவுகள்... ஒரே ஒரு முறை உன் கிராமம் வந்தேன். நீயில்லாத கிராமம் அது...

வெகு நாட்கள் கழித்து உன் கிராமத்தில் நான். அதே அமைதிதான் ஆனால் இதில் அழகில்லை. வெறிச்சோடிக் கிடந்தன தெருக்கள். பொதுக் கிணறு குப்பைத் தொட்டியை மாறிக் கிடந்தது. வீடு வீடாய் குழாயில் நீர் வந்து சேர்ந்திருந்தது. தெருக் குழாய் மட்டும் குற்று செடிகள் சூழ, கள்ளி செடிகள் வேலியாய் மாறிக் கிடந்தது. பூட்டிக் கிடந்தது உன் வீடு, காணாமல் போன மரத்துடன் முன் வாசல். சில வருடங்களுக்கு முன் உனக்கு திருமணம் நடந்ததும், பிறகு தாய் இறந்து போனதுமாய் உன்னை பற்றிய செய்திகளை கேட்காமலேயே சொல்லிக் கொண்டு வந்தான் நண்பன்... பல ஆண்டுகளாக நீர் தெளிக்காமல் வறண்டு கிடந்தது உன் வீட்டு வாசல்.. அன்றொரு நாள் நீ வரைந்த கோலம் ஒன்றையும், நல்வரவு வார்த்தைகளையும் அங்கே பொருத்திப் பார்த்து கண்ணீருடன் நிற்கும் என்னை தோள் தட்டி ஆறுதல் சொல்லும் நண்பனுக்குத் தெரியுமா என்ன? உன் கோலங்களுக்கு உயிர் உண்டு என்பது....


நடத்துனர் தோள் தட்டி எழுப்புகிறார். தம்பி பேருந்து நின்று பத்து நிமிடமாகிறது என்று... மன்னியுங்கள் சார்.. உறங்கி விட்டேன் என்று பதிலுரைத்து விட்டு கிழே இறங்கி தேடுகிறேன் கோலமிடப்பட்ட வாசல் ஒன்றை இந்த பெரு நகரத்தில்...

Oct 16, 2007

காதல் அரசி

பெண்ணே, நீ யார் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது... குழம்பி திரிவேன்... பிறகு தான் தெரிந்தது நீ காதல் தேசத்தின் அரசி என்பது... இது வரை வரலாறுகள் அனைத்தும் உலகின் பெண்கள் பலரை காதலின் இள்வரசிகளாகவே அங்கீகரித்து வந்திருக்கிறது... அரசிக்கான இடம் மட்டும் நிரப்பபடாமலேயே... நீ ஜனிக்கும் அந்த நாள்வரை...
மணிமகுடங்கள் தேடி செல்லும் அரசர்களுக்கும், வீரர்களுக்கும் மத்தியில் காதலின் கீரீடம் மட்டும் உன்னை தேடி வந்து தன்னை அலங்கரித்து கொண்டது... மற்றவர்களெல்லாம் வழிவிட்டு நின்றதை பார்த்திருக்க மாட்டாய், நான் அறிவேன்... அனைவரும் ஏக்கதுடனும், பொறாமையுடனும் பார்த்து கொண்டிருக்கும் போதே காதல் உன்னை அரசியாக ஏற்று தன்னை என்றும் நிலை நிறுத்திக் கொண்டது.உன் முக பொலிவின் முன் காதல் கூட சற்றே வெளிச்சம் குறைந்தது உண்மை தான்.
பெண்ணே இனி நீ எச்சரிக்கையாய் இரு.. உனக்கான சுயம்வரத்தில் காத்து கிடக்கும் இளைங்ஞர்கள் எத்தனையோ எனக்கு தெரியாது....

மெளனத்தின் இசை

இசை... எத்தனை இதயங்கள் வசப்படுகின்றன இந்த ஒற்றை வார்த்தையின் வசீகரத்தில்... மனிதர்களின் மகிழ்வையோ, சோகத்தையோ கூட பிரதிபலித்து போகிறது இசை... அதில் தான் எத்தனை எத்தனை வகைகள்... மனதை வருடும் மெல்லிசை, தாளம் போட வைக்கும் மெட்டுகள், ஆட தூண்டும் நடன இசை,உரையாடல்களுக்கு இனிமை சேர்க்கும் பின்னிசை..... இன்னும் இன்னும்.... சாதாரண மூங்கிலை பார்க்கும் விறகு வெட்டிக்கும், புல்லாங்குழல் வாசிப்பவனுக்கும் வேறுபாடிருக்கிறது.. பானை செய்யும் தொழிலாளிக்கும், அதை கடமாய் மாற்றி இசை எழுப்புபவனுக்கும் இடைவெளிகள் இருக்கிறது... மாடு வெட்டி இறைச்சி விற்பவனுக்கும், அதன் தோலை மத்தளமாய் மாற்றி மங்கலம் இசைப்பவ்னுக்கும் வித்தியாசங்கள் ஆயிரம்...
இவர்கள் அனைவரையுமே தன்னிலை மறக்க வைக்கிறது இசையின் மெல்லிய தழுவல்கள்... இவற்றை தாண்டி நிற்கும் சில நேரம் நாட்டு புற கலைஞனின் தனி குரலும், குழந்தைக்கென பாடும் தாயின் தாலாட்டும்...
விவரிக்க இயலாமல் தனித்து கிடந்த என்னை அனைத்து லயங்களிலும் கட்டி ஒற்றை நொடியில் இழுத்து போட்டு வேடிக்கை பார்க்கிறது உன் மெளனத்தின் இசை....
அது உயிரின் இசை.....

மழை

மெல்லிய மழை அமைதியாக நனைக்கும் என்னை... ஈரமான உடைகளோடு ஏகாந்தமான உன் நினைவுகளோடு நடை பயில ஆரம்பிக்கும் நொடியில், சற்றே வேகம் கொண்டு ஆர்ப்பரித்து நீர் துளிகள் ஊடுறுவும் என் அணுக்களின் அடுக்குகளில்... மழை குறைந்த வேளைகளில் பூ வானம் தூறலாய்.... வாய் திறந்து ஏந்துவேன் காதல் தாகம் தீர்ப்பதற்காய்... முற்றிலும் நின்று, வெயில் வந்து அதன் பின்னும் தொடர்கிறேன்.... கொஞ்சம் கொஞ்சமாய் உலர்கிறது உடைகள்.. இன்னும் மழை தாங்கிய நிலம் போல் ஈரமாகவே இருக்கிறது நாம் இணைந்து நடந்த மழை கால நினைவுகள்...

உயிர்ப் பூ

இதோ இந்த நொடியில் எதோ ஒரு பெயர் தெரியாத காட்டு பூ மலர்கிறது. எதோ ஒரு மலர், தன் வண்ணங்களால் ஒரு வண்ணத்து பூச்சியை வரவேற்கிறது. இன்னுமொன்று பனிதுளிகளை தேனாக்கி வண்டுகளுக்கு பரிசளிக்கிறது... தலை அசைக்கிறது அதன் ரீங்காரத்தில்... மற்றொன்று எதோ ஒரு பெண்ணின் கூந்தலில் அழகு சேர்க்க, ஆலயங்களில் பூஜைக்கென,மணவறை அலங்கரிக்க..... இன்னும் எத்தனையோ... ஆனாலும் அடர்ந்த காடுகளில் யாரும் காணாமல் மலர்ந்து உதிரும் மலர்களின் வாழ்க்கையை பரிசளிக்கும் நீ... என் உயிர்ப் பூ...

மின்னலாக....

தனித்து துவங்கிய என் இருளில் நொடி நேர மின்னல் என என்னையும், என் பாதையையும் வெளிச்சமாக்கி போனவள் நீ..... அந்த ஒற்றை கணத்தின் விளிம்பில் நின்று கொண்டு மீண்டும் வருவாய் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது என் மனம்.... நீ தந்த ஒளியால் எனக்கு புலப்பட்ட பாதைகள் அனைத்தும் உன்னையே வந்தடைகின்றன.... இப்பொழுதெல்லாம் என் வானில் மின்னல்களை காண்பதே அரிதாகிறது.... அப்படியும் வரும் சில வேளைகளில் உன் முகம் தேடுகிறேன், அந்த வெளிச்சத்தில்... மின்னலாக வருவதே நீ என்பதை அறியாமல்....

நினைவுகள்

தினமும் உனக்கென கவிதை எழுதும் அந்த நொடிகள், உன் வரவிற்காக காத்திருந்த அந்த பொழுதுகள், தொலை பேசியில் பேசி மகிழ்ந்த கணங்கள்..... எனக்கே எனக்காக நீ அளித்து போன புன்னகைகள், என் புத்தகங்களுக்கு உன் பெயர் சூட்டிய நாட்கள், நனைவை நனைக்கும் மழை காலங்கள்.... இப்படி எத்தனையோ, மனதின் ஒரு மூலையில் பசுமையுடன்... நீ மட்டும் தான் அருகில் இல்லை, அதனால் என்ன உன் நினைவுகள் இருக்கிறதே நான் உயிர் வாழ... அது போதாதா?