
அந்தியின் விழிப்புகளில்
கவிதைகள் வாசித்தபடி
கரம் பற்றி நடக்கிறாய்
மஞ்சரளித் தோட்டத்தினூடே
பள்ளி உறவுகளைப் பதியம் வைக்கையில்
கருப்பு குண்டன் என
வர்ணித்துச் சிரிக்கிறாய்
கண்களைச் சிமிட்டியபடி
கோபமாய்ச் சிணுங்கும் என்னிடம்
கொஞ்சலாய்ப் பேசி
சிறகடிக்கச் செய்கிறாய்
நீ நட்ட மரத்தின் காற்றையும்
கூடடையும் பறவைகள் பேச்சையும்
கைபேசிவழி
என் செவி சேர்க்கிறாய்
பால் மாற்றி விளித்தபடி
பால்யத்துக்குள் சிக்கிக் கொண்டு
மீள மறுக்கிறோம்
வயதுகளைத் தொலைத்தபடி
உருவம் அறியா உறவின் தன்மைக்கு
ஒற்றை முகம் எதற்கு?
ஓராயிரம் உருவகங்கள் இருக்கையில்!
No comments:
Post a Comment