
இன்னும் ஈரமாகதான்
இருக்கிறது
குறுஞ் செய்தியில்
நீ புதைத்தனுப்பிய
முத்தங்கள்...
பெரு மழை யொன்றை
எதிர்பார்த்துக்
காத்திருக்கிறேன்
யாருமறியாமல் கரைந்தழுக...
இலைகளற்ற மரத்தினடியில்
காத்திருக்கிறது
நிழல் வேண்டும்
என் கனவுக் கூட்டம்...
கிடைத்த வரை இலாபம்
என்பதான வாழ்க்கை வாழ
முடியாமல் வெட்கித் துடித்து
தானே சாகிறது மனது...
ஆசைகளும்
கோபங்களும்
காதலுமாய் பெருகும்
என்னில்
மனப் பிறழ்வின் காலடிகள்...
அரைக் கோப்பை தேநீரிலும்
நிறைத்துக் கொண்டே இருக்கும்
புகையிலுமே வாழ்ந்து விட
முடியும் என்றான போது
எப்படி குறையும் உன் மீதான
என் பெரும் காதல்...
No comments:
Post a Comment