பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 10, 2011

கானல்நீரும் தாகமுமாய்...


என்றுமே பலித்துவிடாத
கனவுகள் நினைவெங்கும்
சிதறிக் கிடக்க கதறி அழுகிறேன் உன்னிடம்
சில நேரங்களில் உன் தோள் சாயல் கூட
ஆறுதலாய் இல்லை
எழுந்ததும் உன்னை பிரிய நேரிடும்
அச்சம் சுமந்த மனதில்
அடிக்கடி நீ சொல்லும் கானல் நீர்
மட்டுமே தெரிகிறது
எல்லா கவசங்களையும் மீறித்
துளைக்கிறது சில கூர் அம்புகள்
நியதிகளின் பெயரில்
அறுந்து தொங்கும் சதைகளுடன்
பயனற்று கிழ் விழவும்
தாங்கிப் பிடிக்கிறது அதே கானல்வெளி
எரியும் உடலுடன் சுற்றி சுற்றி
வெறும் கைப் பிடி சாம்பலென
உதிரும் வேளையில் வருகிறது தென்றல்
உன் வாசலில் தூவ
கனவுகளை எல்லாம் புதைத்துக் கொள்கிறேன்
நினைவுகளையெல்லாம் தூக்கிலிட்டு
இனி என்ன
கானல் நீரும்
அதன் மீதான தாகமுமாய்
மீண்டும் மீண்டும்
தொலையட்டும் வாழ்வு
சாவுக்கும் வாழ்விற்குமான
இடைவெளிகளை நிரப்பிக் கொண்டே...

ஆபிஸில் மதிய உணவு நேரம்


அவன் நிறுத்தாமல்
பேசிக்கொண்டே இருந்தான்.
திறந்திருந்தது அவன் பெரிய டிபன் கேரியர்
அறுசுவை உணவு வகைகள்
அவியல், பொறியல்
சட்னி, சாம்பார் சாதம், தயிர்ச்சாதம்,
அப்பளம் தொட்டுக்கொள்ள ஊறுகாய்
இத்துடன்
தித்திக்கும் இனிப்பில்
இரண்டொரு மாங்கனித் துண்டுகளின் மணம்.

சாப்பிட்டுக்கொண்டே
அவன்
அவன் மனைவியைப் பற்றிக்
குறைபட்டுக்கொள்கிறான்.
அவள் - அறிவிலியாம்.
சோம்பேறியாம்
குண்டாம்
பார்க்க சகிக்கலையாம்
முட்டாளாம்
நடனங்கள் கண்டதில்லையாம்
சங்கீதக்கச்சேரி கேட்டதில்லையாம்
ஏன்..
மாசாலா டீ னா கூட
என்னவென்று தெரியாதாம்
அவளுடன் வாழும் வாழ்க்கை
வெறுத்துவிட்டதாம்
ஆனாலும் ஆனாலும்
என்ன செய்வது
குழந்தைகளுக்காக
குடும்ப கவுரவத்திற்காக..
என்றவன்..

என்னைப் பார்த்து
சொன்னான்..

நான் புத்திசாலியாம்
அறிவுஜீவியாம்
ஆபிஸ் வேலை
வீட்டு வேலை
இரண்டிலும் கெட்டிக்காரியாம்
சம்பாதிக்கிறேனாம்
கவிதை கூட எழுதுகிறேனாம்
என் கணவர் ரொம்பவே
கொடுத்து வைத்தவராம்...

நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்..

அன்றுமாலை
என் கணவருக்குப் பிடித்தமானதை
சமைத்துக் கொண்டிருக்கும்போது
அவர் ஆபிஸ் பையன்
கழுவப்படாத டிபன் பாக்ஸை
என்னிடன் நீட்டிவிட்டு
சொல்லிச்சென்றான்
'பாஸ் இன்று லேட்டாக வருவார் என்று'

-பிரதிபா கன்னடக்கவிதைகள்
மொழியாக்கம்: புதியமாதவி.

Dec 9, 2011

தவி(ர்)த்தலன்றி வேறொன்றுமில்லை...


மீண்டும் ஒரு இனிய கனவை வீணடித்துவிட்டு
மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது...
தடித்து நீண்ட வினாடிகளாலான - இந்த இரவு-
ஒரு சர்வாதிகாரியின் முறைப்போடு - அருகமர்ந்து
என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது...
என் முகவரிக்கு நீ அனுப்பிவைத்திருக்கும் மௌனம்-
எனக்கான பிரத்யேகங்கள் ஏதுமற்ற - உன்
அன்றாடங்களை முடித்துக் கொண்டு
இன்றும்-நீ
உறங்கிப் போயிருக்கக் கூடும்....
ஒட்ட இயலாமல் உருண்டு கொண்டிருக்கும்
நீர்க்கோளத்தின்
தவிப்பையறியா தாமரை இலையைப்போல-
விழித்திருத்தலுக்கும் உறக்கத்திற்குமான இந்த
இடைவெளிகளின்
பரிமாணங்கள் முழுவதும்
எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது...
உனக்கும் எனக்குமிடையே
எதுவுமே இல்லாத ஏதோ ஒன்று...

-சுவாதி ச.முகில்

விடை கொடு காதலனே..!


விடை கொடு காதலனே..!
கண்ணீர் விடாதே..!
இருள் போர்வைக்குள்
உன்னுடன்
இனிய சுகங்களைப்
பகிர்ந்து கொண்டதென்னவோ
உண்மைதான்..
நீ மேய்ந்த இடங்களெல்லாம்
நித்தமும் உன் நினைவைச்
சொல்லிக் கொண்டிருக்கும்!
ஆனாலும் அன்பே..!
பிரிந்து செல்கிறேன்..
நான் காதலை நேசிக்கிறேன்
கூடவே என் கனவுகளையும்!
ஒரு வேலைத் தேடித் தராத
உன் வெற்றுப் பட்டம்
என் எதிர்காலக் கனவுகளை
எரித்தே விடும்!
உன் உதடுகளில் எனக்கு
உணவு கிடைக்காது!
கரடு முரடான பாதையில்
கை கோர்த்து நடந்து
நாளைய வாழ்வை
நரகமாக்குவானேன்..?
ஓலைக் குடிசையில்
உள்ளங்களின் சங்கமத்தில்
காதல் கீதம் பாடி
களித்திருப்போமென்கிறாயா?
கற்பனையில் இவையெல்லாம்
கற்கண்டு விசயம்தான்!
சுடுகின்ற நிஜங்களில்
வாழ்க்கையின் தேவைகள்
சுட்டெரிக்கப்படும்போது
காதலென்பது வெறும்
கண்ணீராய்த்தான் முடியும்!
ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது காதலனே!
நம்முடைய நெருக்கம்
நமக்கே சுமையாகுமுன்
நண்பர்களாகவே பிரிவோம்!
விடை கொடு காதலனே..

- பெமினா (துபை)