பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Dec 9, 2011

தவி(ர்)த்தலன்றி வேறொன்றுமில்லை...


மீண்டும் ஒரு இனிய கனவை வீணடித்துவிட்டு
மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது...
தடித்து நீண்ட வினாடிகளாலான - இந்த இரவு-
ஒரு சர்வாதிகாரியின் முறைப்போடு - அருகமர்ந்து
என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது...
என் முகவரிக்கு நீ அனுப்பிவைத்திருக்கும் மௌனம்-
எனக்கான பிரத்யேகங்கள் ஏதுமற்ற - உன்
அன்றாடங்களை முடித்துக் கொண்டு
இன்றும்-நீ
உறங்கிப் போயிருக்கக் கூடும்....
ஒட்ட இயலாமல் உருண்டு கொண்டிருக்கும்
நீர்க்கோளத்தின்
தவிப்பையறியா தாமரை இலையைப்போல-
விழித்திருத்தலுக்கும் உறக்கத்திற்குமான இந்த
இடைவெளிகளின்
பரிமாணங்கள் முழுவதும்
எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது...
உனக்கும் எனக்குமிடையே
எதுவுமே இல்லாத ஏதோ ஒன்று...

-சுவாதி ச.முகில்

விடை கொடு காதலனே..!


விடை கொடு காதலனே..!
கண்ணீர் விடாதே..!
இருள் போர்வைக்குள்
உன்னுடன்
இனிய சுகங்களைப்
பகிர்ந்து கொண்டதென்னவோ
உண்மைதான்..
நீ மேய்ந்த இடங்களெல்லாம்
நித்தமும் உன் நினைவைச்
சொல்லிக் கொண்டிருக்கும்!
ஆனாலும் அன்பே..!
பிரிந்து செல்கிறேன்..
நான் காதலை நேசிக்கிறேன்
கூடவே என் கனவுகளையும்!
ஒரு வேலைத் தேடித் தராத
உன் வெற்றுப் பட்டம்
என் எதிர்காலக் கனவுகளை
எரித்தே விடும்!
உன் உதடுகளில் எனக்கு
உணவு கிடைக்காது!
கரடு முரடான பாதையில்
கை கோர்த்து நடந்து
நாளைய வாழ்வை
நரகமாக்குவானேன்..?
ஓலைக் குடிசையில்
உள்ளங்களின் சங்கமத்தில்
காதல் கீதம் பாடி
களித்திருப்போமென்கிறாயா?
கற்பனையில் இவையெல்லாம்
கற்கண்டு விசயம்தான்!
சுடுகின்ற நிஜங்களில்
வாழ்க்கையின் தேவைகள்
சுட்டெரிக்கப்படும்போது
காதலென்பது வெறும்
கண்ணீராய்த்தான் முடியும்!
ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது காதலனே!
நம்முடைய நெருக்கம்
நமக்கே சுமையாகுமுன்
நண்பர்களாகவே பிரிவோம்!
விடை கொடு காதலனே..

- பெமினா (துபை)

நீ உணர மறுத்த காதல்


உன்னையே தேடிக் கொண்டிருந்த
எனக்கு வாய்த்துவிட்டது
என்னைத் தேடும் ஒருவனின் தேடல்..

நீ எதிர்பார்த்திருந்த
நிபந்தனைகள் எதையும்
என்னிடம் விதிக்கவில்லை அவன்..

நான் உன்னிடம் வாரியளித்த
அன்பைவிடவும்
மேலதிகமாய் என்னில் பொழிகிறான்..

என் வழித்தடங்களை
ஒருபோதும் தெரிந்துகொள்ள விரும்பியதில்லை அவன்..
ஆனால் அவற்றால் ஏதேனும் ஆபத்து நேருமென
நானாகவே மேலோட்டமாய் சொல்லி வைத்தேன்..

உன்னால் ஏற்பட்ட காயத்திற்கும்
சேர்த்தே மருந்து குழைக்கிறான்..
உன்னையும் சேர்த்தே நேசிக்கிறான்
நீ என்னால் நேசிக்கப்பட்டதால்..

இப்போது காயங்களாறி
நடமாடத்துவங்கியிருக்கிறேன்.
இனிவரும் மழையிரவுகளில்
அவனுக்காய் அடைகாப்பதற்கு என்னிடம்
அதே கதகதப்போடு மிஞ்சியிருக்கிறது
நீ உணர மறுத்த காதல்..

-இசைப் ப்ரியா

Dec 3, 2011

கோலங்கள்...


என் வீடு சின்னஞ் சிறிய குடிசை
முன்னால் அகன்ற வாசலும்
வேப்பமரமும் மருதாணிச் செடியும்
ஓரமாய் ஒரு செம்பருத்தியும் உண்டு...
அம்மா அதிகாலையில் சிறியதாய் கோலமிடுவாள்
நெளிவுகளால் நிறையும் வாசல்...
அதிகாலையில் விளக்கொன்றை
வெளிச்சத்திற்கென பிடித்திருப்பேன்
தெருவிளக்கு ஒளிரா நாட்களில்...
அக்கா கொஞ்சம் பெரிதானதும்
கோலப் பொடி கை மாறியது...
அம்மா சாணமிட்டு மெழுகி
கருப்படித்த களிமண் அடுப்பில் மட்டுமே
அதன் பிறகு நெளிவுகளை வரைந்தாள்...
அக்காவோ நெளிவுகள் கைவரப் பெறாமல்
கட்டங்களை நிரப்பினால் வாசலில்...
பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்
அவளும் தூரிகை பிடிக்கிறாள் விரல்களில்
அம்மாவின் கருப்பு வெள்ளை கோலங்கள்
அக்காவினால் கலரென மாற்றப்படுகிறது...
கார்த்திகை மாதங்கள் முழுதும்
தீபங்களால் நிறைக்கிறாள்
மார்கழியில் சங்குகள்
தையில் தேர்க் கோலம் என
வண்ணங்களில் மிளிர்கிறது வாசல்...
கிளிகள் மயில்கள் மான்கள்
பொங்கும் பானைகள் கரும்புகள் என...
பச்சை தீர்ந்து போன நாளொன்றில்
நீல நிற கிளிகள் பறந்தது
அது போலவே மான்கள் சில நேரம்
புலிகளென உறுமியது
அதிகாலை சாரல் மழையில்
நனைந்து கொண்டு போட்ட மீன் கோலத்தின்
மீன்கள் மழை நீரில் கரைந்து நீந்தியபடி சென்றது...
எனக்கு எப்பொழுதும் சில புள்ளிகள் வைக்கும்
வாய்ப்புகள் கிடைக்கும்...
விடியும் பொழுது சில நேரம்
திண்ணையில் அமர்ந்து கொண்டு
யாரையும் மிதித்து விடாமல்
காவலிருந்திருக்கிறேன்...
எல்லோருக்கும் சொல்ல முடிந்த என்னால்
என் அப்பாவிடம் சொல்ல முடியவில்லை
பூக்கள் கிளிகள் மயில்கள் தீபங்களை
மிதித்த படி தான் கடந்து செல்வார்
அக்காவோ அம்மாவோ எதுவும்
கேட்டதில்லை எனும் போதும்
அவர் இல்லாத போது
சிறிதேனும் திட்டி இருக்கலாம்
மனதிற்குள்ளாவது...