பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 28, 2011

காத்திருக்கிறான் ஒருவன்...


உனக்கான கவிதையின் முதல் வரியில்
ஒரு விதை நடப் படுகிறது
இரண்டாவது வரி தானே நீருற்றுகிறது
மூன்றாவது வரியில் முளைவிட்டு துளிர்க்கிறாய்
நான்காம் ஐந்தாம் வரிகளில்
இலைகள் பரப்பி கிளைகள் விரிக்கிறாய்
பின் வரும் வரிகள் ஒவ்வொன்றும்
பருவ மாற்றமென மாறி
பூக்களைத் தூவினாய்
கனிகளை தந்தாய்
உன் கிளையில் நீ ரசித்த இசையொன்றை
பாடிக் களைத்த பறவையென நானும்
உன்னுள் வசித்திருக்க
கடைசி வரியொன்றில் காத்திருக்கிறான்
கையில் தாலிக் கோடரியுடன் ஒருவன்...

Oct 22, 2011

நீ இல்லாத பண்டிகை நாட்கள்


என்ன தான் பண்டிகைக்கு
நீ புதிது புதிதாய் கொலுசு
மாற்றிக் கொண்டாலும்,
எனக்கு ஒரே இசையைத் தான்
தந்து செல்கிறது உன் நடை...

இருவரும் தனித் தனியே
வாழ்த்துச் சொல்லுகிறோம் எல்லோருக்கும்...
நீ எனக்கும் , நான் உனக்கும் சொல்வதாய்
நினைத்துக் கொண்டு...

இனிப்புகள் புத்தாடைகள் என
நிறைகிறது வீடு,
எங்கே இருப்பாய் என
தெருவெங்கும் அலைகிறது மனசு...

நாத்திகனாய் இருப்பதில்
இப்படியும் ஒரு சலுகை...
கொண்டாட்டங்களே இன்றி கழிகிறது
பண்டிகை தினங்கள்...

வானவேடிக்கை நிறையும் இரவில்,
வெடித்துச் சிதறிக் கிடக்கிறது,
நீ கொளுத்தி விட்டுப் போன மனசு...

வந்து வந்து போகிறது
ஏதாவது ஒரு பண்டிகை
வருடம் முழுதும்,
இன்னும் நீ மட்டும் தான் வரவில்லை
நான் கொண்டாடி மகிழ...

உன் உறவுகளோடு
நீ கொளுத்தப் போகும் மத்தாப்புகளில்
வண்ணங்களை சிதறி சிதறி
வெறுமையாய் மிஞ்சுவது
நானாகவும் இருக்கலாம்...

என் கவிதை தாள்களை
சிவகாசிக்கு அனுப்பி இருக்கிறேன்,
உன் வீட்டு வெடிகளில் வெடித்து
வாசலில் நிறைய...

உன் புன்னகையை விட
சிறந்ததொரு பூவானத்தை
எவரும் ரசித்திருக்க முடியாது...

எதுவுமே வேண்டுமென
அடம்பிடித்ததில்லை நீ...
என்னை விலகி செல்ல
வேண்டுமென்பதை தவிர...

கூடை நிறைய பூக்களைச்
சுமந்தபடி வரும் பாட்டிக்கு
நீ இல்லா இந்த பண்டிகை
ஏமாற்றம் தான்..

உன் ஈரக் கூந்தல் வாசத்துடனும்,
போலி அதட்டல்களுடனும்
விடியவே அடம் பிடிக்கிறது
எனது பண்டிகை நாட்கள்...

எத்தனையோ இனிப்புகள்
வீட்டில் அடைபட்டுக் கிடக்க,
நீ இல்லாமல் போனதால்
எறும்புகள் பட்டினி கிடக்கின்றன...

நீ ஊருக்குள் இல்லை என்பதை
அமைதியாக இருக்கும்
தெருக்களே சொல்லி விடுகிறது...

ஒவ்வொரு முறையும்
உன் வரவிற்கென காத்திருந்து
ஏமாந்து விடுகிறோம்
நானும் பண்டிகையும்...

உனக்குப் பிடித்த எல்லா பலகாரங்களும்
வாங்கிய பின் தோன்றுகிறது,
எனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை
நீயும் செய்திருப்பாயென...

புத்தாடைகள் சரசரக்க
நீ வலம் வந்த வீடு
தனித்திருக்கிறது
இறக்கை முளைத்த நினைவுகளோடு...

எங்கள் ஊரில்
பட்டாசு வெடிக்க தடை செய்யப் பட்ட இடங்கள்
வௌவால் தோப்பும்,
நீ வசிக்கும் தெருவும்...

எல்லா வழிகளையும்
அடைத்துக் கொண்ட பின்னரும்,
ஏதேனும் ஒரு வகையில் கடந்து விடுகிறது
நீ இல்லா பண்டிகை நாட்கள் வெறுமையாய்...

இரவெல்லாம் கண்விழித்து
நீ போட்ட அரிசி மாவுக் கோலத்தில்,
அழகாய் இருந்தது முன்பு வந்த
இதே போன்றதொரு பண்டிகை தினம்...

தீபங்களால்
நீ அலங்கரித்த வீடு
மின்சாரத்தை வீணடித்துக்
கொண்டிருக்கிறது இன்று...

நீ என்னுடன் இல்லையென
சொல்லிக் காயப்படுத்தும்
இந்த நாட்கள்
வராமலேயே இருக்கலாம்...

Oct 15, 2011

நாட்குறிப்பு


ஒரு நாட்குறிப்பில் என்னவெல்லாம்
குறித்து வைக்கலாம்
பெரும்பாலும் நிகழ்வுகளாக
நிறைந்து விடுகிறது
பிரபலங்களின் நாட்குறிப்பு
செலவு கணக்குகள்
குறித்து வைக்கப் படுகின்றன
பலரது வீட்டில்
புள்ளிகள் வைத்து கோலமும்
வரைகிறார்கள் சில பெண்கள்
பால் கணக்கும்
மளிகை தேவைகளும்
தொலை பேசி மின்சாரக் கட்டணங்களின்
கடைசி தேதியும்
மருத்துவ பரிசோதனை தினங்களும் கூட
கவிதைகளால் நிறைகிறது
காதலர்களின் நாட்குறிப்பு
தேதிகளே இல்லையென
புலம்புமோ நடிகர் நடிகைகளின் பக்கங்கள்
அந்தரங்கங்களாலும்
ரகசியங்களாலும்
நிறைந்து யாருக்கும் தெரியாமல்
கிடக்கிறது பரணில் சில நாட்குறிப்புகள்
மறைத்து வைக்கப் பட்ட
கடிதங்களும் புகைப்படங்களும்
இடையில் இருக்கலாம்
வாங்கிய கடனுக்கு
வட்டி கட்டும் தேதிகளும்
குறித்து வைக்கப் படலாம்
நேற்று இரவு பேருந்து நிலையமொன்றில்
கடலை வாங்கும் பொழுது
சுருட்டித் தந்தார்
நாட்குறிப்பு பக்கமொன்றை
அதில்
என்றாவது ஒருநாள் கிழிக்கப்படும்
கவிதைகளை விட
அதிகமாய் என் மனது
........
........
........
........
........
யோசிக்கிறேன்
இனி
ஒவ்வொரு வருட துவக்கத்திலும்
நாட் குறிப்புகளை
பரிசளிக்க வேண்டுமா என?

Oct 13, 2011

மழையும் நீயும்...


மழை நாட்களில் எல்லாம்
அதிகமாகிறது
உன் நினைவுகள்...
இன்று பெய்த மழையைப் போல தான்
நீயும்
முதல் துளியை உணரும்
பரவசம் போல்
சாரலாய் தழுவும்
உன் நேசம்...
சிறிது நேரத்தில் சட சடத்து
நனைத்த மழையென
முழுதும் மூழ்கி விடுகிறேன்
உன் காதலின்
பெருவெளியில்...
காற்று சுழன்றடிக்கும் பொழுதெல்லாம்
வாரி இறைக்கும் சாடல்களில்
உணர்கிறேன் உன்
சில வினாடி கோபங்களையும்...
நனைந்து விட்ட பூமியென
எங்கும் நிறைந்து
விடுகிறாய் என் நினைவெங்கும்...
பூ செடிகளில் தங்கிய
நீரென மழை
முடிந்த பின்பும்
என் மீது விழுந்து கொண்டே
இருக்கிறது
உன் பிரிவின் பின்னரும்
நம் மகிழ்வின் ஈரம்...
நீ எப்பொழுதும்
மழையாகி விடுவதும்
உன்னை எதிர் பார்த்துக்
காத்திருப்பதுமாய்
காலம்
என்னையும்
வாழவைத்து விடுகிறது...