பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 9, 2011

பிதற்றல்கள்


தனிமையின் தீராத பக்கக்களின்
பற்றி எரியும் கூண்டுகளின் சுவர்களில்
ஒரு தேவையில்லா விசாரணை
ஒரு முறை முழுமையாய்
அழுதுவிட வினாடிகள் அற்று
வெளிபாடா வேதனைகள் அறுபட
ஒளிகிறது கனவு கொண்ட மனது
கழிவு நீர்க் குட்டையில்
நீண்ட நாள் தேங்கிய நீரின்
அசுத்தத்தில் பொறிபடும் புதிய மீன்களென
நீந்திக் களைக்கிறது தேடிய பாடலொன்று
அரூபமாய் பின் தொடரும் உன்னை
விலக்கிவிடவும் சேர்த்துக் கொள்ளவும்
வலிமையின்றி துவளும் கரங்களில்
மூன்று நாட்களுக்கு முன் பறித்த
மலரொன்றின் இடைவிடா மரணக் கேவல்
விடுதலைக்குப் பின்னரும்
சிறை வேண்டி தவமிருக்கும்
குற்றவாளியென உன்னிடம் புலம்பி
சரணடையும் புரளி பிதற்றல்கள்
யாருமே இல்லை என்றான உலகில்
இனி யாருடனும் பேசவேண்டி இருக்காது
எனக்கான ஒரு புது மொழியில்
என் கனவுகளை தேடுவேன்
கிடைத்தால் கிடைக்கட்டும்
இல்லையென்றாலும் கவலை இல்லை
உச்சிக் கிளைப் பறவையென
நீ உண்டுவிட்ட மீதக் கனிகளை விட்டுச் செல்
என் பசி பொழுதுகள் காத்திருக்கிறது
ஒரு எச்சிலின் ருசிக்கென
எல்லாவற்றையும் வாசித்து விட்டு
என்னிடமே விளக்கம் கேட்காதே
நிச்சயம் என்னிடமும் இல்லாத
ஒன்றை நானும் தந்துவிட முடியாது

Oct 4, 2011

காத்திருப்பு...


கண்கள் ஒளிரக் காத்திருக்கிறது
பூனையொன்று பாலின்
வாசத்தை நுகர்ந்த படி
நானும் காத்திருக்கிறேன்
என் பாதி உறக்கத்தில்
உருளப் போகும் பாத்திரங்களின்
சப்தங்களை எதிர்பார்த்து...

Oct 3, 2011

சாபக் கனவுகள்


உனக்குள் புதைந்து கிடக்கும்
கவிதைகளை விட நான் ஒன்றும்
பெரிதாய் எழுதி விடப் போவதில்லை
உன்னைப் பற்றி...

பிடித்திருக்கிறதா என்ற கேள்வியுடன் நான்
ஆம் என்ற பதிலுடன் நீ
இருவருமாய் காத்திருக்கிறோம்
ஒரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி...

ஒருவேளை இந்த நேரத்திலும்
உன் விரல்கள் அனிச்சையாய்
தடவிக் கொண்டிருக்காலாம்
அலைபேசியில் என் எண்களை...

உன் மெல்லிய உதடுகளை
வருடும் போது என் விரல்கள்
உதிர்ந்து விட்ட ஒரு
மயிலிறகாய் மாறி விடுகிறது...

என் கவிதைக்கான முதல் தேடல்
காலையில் உன் நெற்றியில் நான் இடும்
குங்குமத்தின் சிறு வட்டத்தில்
தொடங்கி விடுகிறது...

நாம் இருவருமாய்
இணைந்து ஒரு மழை நாளில்
பார்த்த வானவில்லில்
பதினாறு வர்ணங்கள்...

நம்முடைய வாரிசை நீ
சுமப்பதை என் தோள்களில்
சாய்ந்து கொண்டு சொன்ன போது
நான் பார்த்தது இவ்வுலகின்
அழகான வெட்கம் ஒன்றை...

இன்னும்
இன்னுமாய்
ஏராளமான கனவுகள்
கொட்டிக்கிடக்கிறது என்னில்
உன்னை சேரும் பாதைகள்
அடைபட்டு கிடக்க
வாழ்வின் சாபங்களாகவும்....

Oct 2, 2011

நானும் ஒரு பறவையும்...


எத்தனை எதிர் பார்ப்புகளுடன்
கிழித்தாலும் நாட்காட்டியில்
திரும்பியா வரப் போகிறது
உன்னோடு நானிருந்த நாட்கள்...

ஒளிந்து விளையாடும்
விளையாட்டில் நீ எப்பொழுதும்
ஒளிந்து கொள்கிறாய்
நான் தேடுவதாய் நடிக்கிறேன்...

ஒரு கவிதையாவது
எழுதி விட வேண்டும்
உன்னைப் பற்றி நினைக்காமலோ
வார்த்தைகளுக்குள் அடைக்காமலோ...

உனக்கும் எனக்குமான
இடைவெளியில் நிறையும்
கனத்த மௌனங்களிடையே
ஒரு கடலின் ஓயாத அலைகளின் ஓசை...

நமக்குப் பிறக்கப் போகும்
குழந்தைகளின் சிரிப்பால்
இன்றைய என் உறக்கத்தின்
கதவுகளை திறக்கிறேன்...

கனவின் ஒரு முனையில் நீயும்
மறு முனையில் நானுமாய் காத்திருக்க
முடிவின்றி நீள்கிறது
நம் தனிமை இரவுகள்...

என் நினைவுகளில் ஒரு
மரமும் அதில் அழகான பறவையும்
எப்பொழுதும் பறக்கலாம்
என்னை தனிமையில் விட்டு விட்டு...