பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 29, 2011

தொலைத்து விட்ட சித்திரங்கள்...


பேருந்தில் குழந்தையொன்று
பின் நோக்கிச் செல்லும்
மரங்களுடனும்
செடிகளுடனும்
பேசிக்கொண்டே வந்தது...
காற்றில் அலையும்
கைகளில் புதிதாய்
சிதறிக் கொண்டிருந்தன
பல நூறு வண்ணங்கள்...
புன் சிரிப்பில்
தெறித்து விழுகிறது
காணமல் போயிருந்த
நிலவொன்று...
யாருக்கும் புரியாமல்
போக
நான் ரசித்து கொண்டிருந்தேன்
அதன் விரல்களில்
உருவாகி மாறிக் கொண்டே
இருந்த
சித்திரங்களை...
ஒரு வேளை
நானும் தொலைத்திருக்கலாம்
அக் குழந்தை ரசித்துக்
கொண்டிருக்கும்
இயற்கையின் ரகசியங்களை...

Sep 28, 2011

பருத்திக் காடும், பொன் வண்டும்...


பள்ளிக் கூடம் லீவு விட்டால்
மாமா வீடு போவோம்
பஸ்ஸிலே பாதி தூரம்
கால் நடையா மீதி தூரம்...

குத்தைகைக்கு காடு புடிச்சு
மழை பெய்யும் போது மட்டும்
கடலைக் காய் நடும் மாமா
மீதி காலமெல்லாம் பருத்தி செடி வச்சிருப்பார்...

விடுமுறை காலமெல்லாம்
பருத்தி வெடிச்சிருக்கும்
மேகக் கூட்டம் வந்து
காடெல்லாம் நிற்பது போல்...

விடியும் முன்னே எழுந்து
ஒவ்வொரு செடியா பருத்தி பஞ்சு தேடி
எடுத்து கோணியில சுமந்து வந்து
குடிசைல பொதி வைப்போம்...

பணை வெல்லம் போட்டு
அத்தை குடுக்கும் வரக்காபி
அத்தனை ருசி இருக்கும்
அந்த முன்மதிய நேரத்திலே...

பக்கத்திலே இலந்தை மரம்
காய்ச்சு பழுத்திருக்கும்
வேலியோரம் சூரிப் பழம்
பொருக்கி எடுக்க சண்டை வரும்...

பொழுது சாயும் வேளையில
பொன் வண்டு புடிக்கப் போய்
தீப் பெட்டிக்குள்ள அடைச்சு வச்சு
கொண்டு வந்து இரவெல்லாம்
முழிச்சிருந்தேன் பொன்வண்டு ஒளிருமென...

ஞாயிற்று கிழமை வந்த
கொண்டாட்டம் தான் எனக்கு
சேவல் சண்டை வேடிக்கைக்கு
கூட்டிப் போவார் எங்க மாமா...

திரும்பி வரும் போது
கையில பத்து ருபாய் நோட்டு தந்து
செலவு பண்ணாம வச்சுக்க
புத்தியும் சொல்லிடுவார்...

இப்பவும் காடிருக்கு
பருத்தியும் இல்லாம
கடலையும் இல்லாம
நிரப்பி வச்சு கல்லு நட்டி...

எங்கே இருக்கும் அந்த
இலந்தை மரமும்
பொன் வண்டு பூச்சியும்
தேடித் போக நானுமில்லை
என்னை நானே தொலைச்ச பின்ன...

Sep 27, 2011

அவள் அவன் மற்றும் ஓர் மனமுறிவு...

ஒரு கொலை மற்றும் ஒரு தற்கொலை
இவற்றை தவிர்க்கும் பொருட்டு
நாம் பிரிந்தோம்...

இருவரும் பிரிந்தது ஒரு மைதானமல்ல
வெவ்வேறு திசைகளில் போக...

மலைப் பாதையில்
மேல் நோக்கிய பயணத்தில் நீ
பள்ளத்தாக்கில் நான்...

கைக்கு கிடைத்த
செடி கொடி இண்டு இடுக்குகளைப்
பற்றியபடி மேலேறி வர
நடத்திய மரணப் போராட்டமே
பயணமாக நான்....

என்னை மீண்டும் கீழே தள்ளிவிடக்
காத்திருந்ததில் உன் பயணம்
மறந்தவனாய் நீ...

என் திசைகளில் நீ இல்லை
உன் எல்லா திசைகளிலும்
நான் இருந்தேன்...

முகமற்ற அருவத்தை வீழ்த்த
காற்றை பாளம் பாளமாக
வெட்டிய படி நீ
கொஞ்சம் கொஞ்சமாய்
பைத்திய காரனாகிக் கொண்டிருந்தாய்...

நான் திரும்பியும் பார்க்காமல்
நகர்ந்த போது
நீ
என் ஆடைகளைப் பறித்து
நிர்வாணமாக்க முயன்றாய்...

என் சிம்மாசனத்தை
நான் அடைந்த போது
உன் மகுடம்
கீழே விழுந்திருந்தது..

உன் முகமிருக்கும் இடத்திற்கு
என் பாதம் உயர்ந்த போது
கட்டுகளற்ற வெறிநாயாய்
உன் நாக்கை அவிழ்த்து விட்டாய்...

நான்
உன் வீட்டின் வழியே
மேள வாத்தியங்களோடு
ஊர்வலம் போன போது
நீ
என் பழைய கடிதங்களில்
பூதக் கண்ணாடி வைத்து
தேடிக் கொண்டிருந்தாய்...

நான்
மேலே மேலே நகர்ந்து
மேகங்களை அடைந்து
மழையை பொழிவித்த போது
நீ
நகர முடியாத
பெரு வியாதிக்காரனாய்
ஊர் எல்லையில் கிடந்தாய்
அழுகிய விரல்களோடு...

"பத்தினிகள் அற்ற ஊரில்
இன்னும் எப்படி
மழை பெய்கிறது? என்று
முனு முணுத்துக் கொண்டே
உன் பசிக்கு
ஏந்தினாய்
என் மழையை...

-தாமரை...

மழை நாடகம்...

அவர்களின் பிரிவுக்கு
அவர்களே தான்
காரணமாய் இருந்திருக்கிறார்கள்

அவர்கள் கண்களை
வீசிக் கொண்டது
அதே மக்களின் வீச்சரிவாளுக்கு
மேலாகத்தான்

அவர்கள் நெருங்கி வந்த போதும்
வீதிகள் இப்படித்தான்
பிரிக்கப் பட்டிருந்தன

மாடி வீட்டுக்காரர்கள்
குச்சு வீட்டுக்காரர்களோடு
அதிகம் பேசிக் கொள்வதில்லை
இப்போது போலவே

வீரத்தோடு உயர்த்திக் காட்ட
கைதான் இல்லை
இழுத்துக் கொண்டு ஓட
கால்கள் கூடவா இல்லை?

வேறொருவனுக்கு வாக்கப்பட்டு
புதுச் சரடு மின்ன அவ்வப்போது
வாசலில் எட்டிப் பார்க்கிறாள் அவள்

எதோ கொடுக்க எதோ வாங்க
கடை எடுபிடியாய்
அடிக்கடி வந்து போகிறான் அவன்

மழை வந்தாலும் வராவிட்டாலும்
அவனோடு ஒரு குடை
எப்போதும் வருகிறது

மறந்து விட்டுப் போன குடையை
வாங்க வருகிறான் அவன்
எடுத்துக் கொடுக்கிறாள் அவள்

கோழைகளுக்கு மழையில்
நனைய கொடுத்து வைக்கவில்லை
என்றாலும் குடையை
மறந்து விட்டுப் போகும்
மதி நுட்பமேனும் வாய்த்திருக்கிறதே...

-தாமரை...