பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 16, 2011

தோளில் உறங்கும் தேவதை


ஆயிரம் முறை கூட
சண்டை போடலாம்
மீண்டும் மீண்டும்
மன்னித்து ஏற்றுக் கொள்வதால்...

என்னுடன் பேசும்
எல்லா நேரங்களிலும்
சிவந்தே இருக்கிறது உன் முகம்
வெட்கத்திலோ கோபத்திலோ...

ஒரு நாள் உன் வெட்கம்
பார்க்க ஓடி வந்து விட்டு
ஒரு கவிதையோடு
திரும்புகிறேன் என்
வெட்கங்களை தொலைத்து...

உறங்க விடா உன்
உறவுக்கென தினமும்
செதுக்கிக் கொண்டிருக்கிறேன்
நமக்கான
கனவுக் கவிதைகளை...

நீ உறங்கு
உனக்கும் சேர்த்து
விழித்திருக்கிறோம்
நானும் இரவும்
கூடவே குளிரூட்டும்
உன் முத்தங்களும்...

காதலியாகத் தான்
இருந்தாய் நேற்றிரவு
உன் கண்களால்
அணைத்த அந்த நொடியில்
மனைவியானாய்...

நீ இல்லாத பொழுதுகளில்
கொட்டி விட்ட விண்மீன்களில்
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்
நாம் தனித்து மயங்கி
கிடந்த நிமிடங்களை...

நாளையும் ஒரு
வெட்கத்தோடு வா
நான் உனக்கான ஒரு
முத்தத்தோடு வருகிறேன்
சந்திக்கட்டும்
வெட்கமும் முத்தமும்...

குழந்தைகள் மட்டுமே
உறங்கும் பொழுது அழகு
விதிவிலக்காய் என் தோள்களில்
உறங்கி விடும் போதெல்லாம்
குழந்தையாகி விடுகிறாய் நீ...

தேவதை கதைகளில்
நம்பிக்கை இன்றிப் போனேன்
ஒரு தேவதையோடு
இந்த இப்பிறவி முழுதும்
வாழும் வரம் கிடைத்த பின்...

Sep 15, 2011

ஜன்னலோரமாய் மலர்களோடு...


கவிதை கேட்டு
ஒரு மாலை வேளையில்
போனவள் தான்
அதன் பிறகு
கவிதைகளாகவே மாறிப் போனேன்
அவனுள்...

நேசிப்பதற்கே யோசிக்கும்
உனக்கு உன்னிடம்
நான் யாசித்த நாட்கள்
நினைவிருக்குமா என்ன?

கோபங்கள் அன்பின்
வடிவம் என்பதை
எப்பொழுது நீ
புரிந்து கொள்ளப் போகிறாய்...

இந்த உலகை அளக்கும்
உன் பேனாவால்
எனக்குள் நீ எழுதிப் போனது
நமக்கான
ஒரு காவியத்தை...

ஆயிரம் முறை காயப்பட்டும்
உன்னிடம் மயங்கும்
மனதிடம் என்ன தான்
எதிர் பார்க்கிறாய்
காதலைத் தவிர...

உன் புன்னகையில்
நான் சிரித்து மகிழ்ந்த
காலங்களை விட்டு
அகல மறுக்கிறது
என் நிகழ் காலம்...

அமைதி தான் உன்
ஆசையெனில் தவறில்லை
ஆனால் உன் மௌனத்தில்
எரிந்து கொண்டிருக்கும்
மனதை வீசி ஏறிகிறாய்...

உன்னுடன் வாழ
விதிகள் இல்லை தான்
இருந்தும் வாழ்கிறேன்
நீ என்னுள் இருந்த
வசந்த காலங்களில்...

திரும்பி வருவாய் என
தெரியும்
அதுவரை காத்திருப்பதை
தவிர வேறேதும் அறியா
கையறு நிலையில் நான்...

இறுதியாய் ஒன்று
எனக்குத் தெரியும்
உன் எழுத்துகள் எனக்கானவை என
இல்லையென சொல்லி விடாதே
நின்று விடப் போகிறது
உனக்கான இதயம்...

நமக்கான கனவுகளுடன்
என் ஜன்னலோரமாய்
காத்திருக்கிறேன்
தோட்டத்தில் உனக்கென்ன
வளர்த்த மலர்களோடு...

Sep 14, 2011

சொல்லாமல்....


உன் வீட்டு முகம் பார்க்கும்
கண்ணாடி முன்பு
நின்று கொண்டு சொல்!
உன்னுள் இருக்கும்
என் பிம்பம் அருகில் தெரியலாம்
ஆன்மாவின் பிரதிபலிப்பாய்!!

சில நொடிகள் மட்டுமே
பார்த்த முகத்தை
ஒவ்வொரு நொடியும் நினைத்துக்
கொண்டிருக்கும் நினைவுகளுக்கு
என்ன பெயர் வைப்பது!!

உன் மௌனங்களைக் கூட
மொழி பெயர்த்து கவிதை என்றேன்!
இனி என் மௌனங்களை
உன்னிடம் தருகிறேன்
கவிதை சொன்னாலும்
காலில் இட்டு மிதித்தாலும் சரியென!!

இலட்சியங்களோடு
வாழும் உனக்கு
இலக்குகளே இல்லாத
என் பயணங்கள்
வேடிக்கையாய் தோன்றுவதில்
வியப்பேதுமில்லை!!

சிறிய பறவை எனினும்
வானின் நீளங்களை
அளந்து திரிந்தவன்!
என் சிறகுகளை நானே
வெட்டிக் கொள்ளும் துயரம் இது!!

வார்த்தைகளின்
பின்னால் மட்டுமே
ஒளிந்து கொண்டவன் இன்று
வாழ்க்கை பிடிக்காமல்
ஒளியும் நாட்களில்!!

அன்பென்று கூறி
தங்கத்தில் பூசினாலும் சிறைகள்
தண்டனை தான்
இனி சிறைகளும் இல்லை
காவலும் இல்லை உனக்கு!!

உன்னை கவிதையாக்க
முயன்று தோற்றுப் போயிருக்கிறேன்
உனக்குத் தெரியும்
என் கவிதைகளுக்கு
தெரியுமா என்ன!!

எனக்குத் தெரிந்ததெல்லாம்
வெறும் வார்த்தைகளே
யதார்த்த வாழ்வென்று
நீ சொன்ன சமன்பாடுகள் அல்ல!!

வெறும் காற்று தான்
தென்றலாகவும்
புயலாகவும்
நீயே சொல்
நான் எதுவென்று?

எப்பொழுதுமே பிரிவில் தான்
புரிகிறது
பிரிக்க முடியாத
உறவுகளின் வலி!

எப்பொழுதும் சொல்லாமல்
புரிந்துகொள் என்பாய்
ஆம்...
என் அமைதியையும்
இனி நீயும்!!

Sep 13, 2011

நாளைக்கென...


விழியில் ஒளியும் நிறங்களை எங்கு தேட...
இன்னும் ஒருநாள் தேவைப் படுகிறது
உன் மீதான கோபத்தை நியாயப் படுத்த...
நெடுஞ்சாலையின் ஓரத்தில்
சிரிக்கும் மஞ்சள் மலர்களில் நிறைகிறது
அலைபேசியின் நினைவகம்...
பூனைக் குட்டிக்கான தட்டில் பால்
கண்டு அழுகிறது பக்கத்து வீட்டு குழந்தை...
உருமாறிக் கொண்டே அலைகிறது மேகம்
மேகமாகவே தோன்றுவது எப்பொழுது...
உதிரும் விண்மீன்களில் லயித்து
கூடவே உதிர்கிறது மனசு...
ஒவ்வொரு நாள் முடியும் போதும்
நாளைக்கென சில விஷயங்கள் பத்திரமாய்...
சிரிப்புகளுடனே கலந்திருக்கிறது
சில கண்ணீர் துளிகளும் சோகங்களும்...
விடைபெறும் வேளை வரும் பொழுது
அழும் மனதும் சிரிக்கும் உதடும் நம்மிடம்..
தெரிந்து கொள்ள வேண்டாம் என நினைக்கும் பொழுது
அதீத ஆர்வம் உள்ளுக்குள் துடிக்கிறது...
எதை எதையோ எழுதிக் கொண்டு விரல்கள்
என்ன செய்து கொண்டிருப்பாய் என
யோசிக்கும் மனதுடன்...