பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 4, 2011

கவலை எனக்கில்லையடி


மத்தியான வேளையில நிழலொதுங்க மரத்த காணோம்
ஆனாலு மாமனுக்கு மனசெல்லா கனவிருக்கு..

அவுத்து விட்ட ஆட்டுக்குட்டி தெக்கு பக்கம் போகுதடி
அடுத்த வரப்பு தாண்டிப்புட்டா வசவு வரும் வண்டி போல...

இப்படியே கனா கண்டு என் வயசு அழிஞ்சு போச்சு
தலையெல்லாம் நர முடியும் வேர் புடிக்க தொடங்கியாச்சு...

எங்க ஊரு பள்ளியில நல்ல பேரு நானெடுக்க நாலு வருசமாச்சு
ஏட்டு கல்வி நான் முடிச்சு ஏழெட்டு வருசமாச்சு...

பட்டணத்து காலேஜில் பவிசாக படிச்ச பொண்ணு
பாசக்கார மாமனோட மனசுனக்கு தெரிஞ்சுடுமா...

சுடிதாரு போட்டுக்கிட்டு மாரோடு நோட்டு வச்சு
நீ போன அழகெல்லாம் ஊரு சொல்ல கேட்டிருக்கேன்...

கம்பியூட்டர் கணக்குன்னு பாடம் சொல்லி குடுப்பவளே
கண்ணமூடி யோசிக்கிறேன் நம் கணக்கு சரிவருமா...

காடு கழனி எதுமில்ல கரவ மாடு நாலுமில்ல
அப்பனாத்தா சொத்துமில்ல எத சொல்லி பொண்ணு கேட்க...

என்னோட கனவெல்லாம் காகிதத்தில் எழுத்தாகி
வரப்பு தண்ணீரில் வரி வரியா ஓடுதடி...

மூணு மாடி வீடுகட்டி குளிரு பொட்டி ரெண்டு இருக்கு
வெறும் பய எங்கிட்ட ஆச மட்டும் தானுண்டு...

கண்டாங்கி கட்டிக்கிட்டு கருகமணி மாலையோட
அங்கங்க பொண்ணிருக்கு பெத்தவளுக்கும் கனவிருக்கு...

உன் மனசு ஆசையெல்லாம் மாமனுக்கு தெரியுமடி
காசு பணம் வாழ்க்கை இல்லேன்னு காதோரம் சொன்னவளே...

காலையில கண் விழிச்சு மாக்கோலம் நீ போட்டு
தலைகுளிச்ச ஈரம் வாசம் வீடு நிறைவதெக்காலம்...

இலக்கியமும் வரலாறும் கவிதையோட கதையும்
வாங்கி வாங்கி சேர்த்திருக்கேன் உன் ஆசை தெரியாதா..

உன்ன கை புடிச்சு வாழ போற வாழ்க்கையோட
எண்ணமிங்கே ஓடுதடி மயிலு பொன்னே எப்ப வருவ...

உங்கையால சோறு தின்னு மடிமேல தலை சாய்க்க
எத்தனை நாள் ஆகுமுன்னு யாருமொன்னும் சொல்லலையே...

நிலாகாயும் ராப்பொழுதில் நச்சத்திரம் எண்ணிடுவோம்
குளிர் காத்து அடிக்கும் போது போர்வைக்குள்ள ஒளிஞ்சிடுவோம்...

ஆஸ்தியெல்லாம் எதுமில்ல ஆண்புள்ள வேணாமே
ஆசைக்கு ஒரு மகள உன்ன போல வேணுமடி...

சடசடன்னு இங்கிலீசு சளைக்காம பேசுவியாம்
நெனச்சாலே நெஞ்சுக்குள்ள படபடப்ப இருக்குதடி...

வத்தாத கெணறு போல கனவெலாம் ஊறுதடி
ஆசைப் பயிர் விளையுதடி மனசெல்லாம் நிறயுதடி மயிலே உன்னால...

தோளட தோள் சேத்து கை புடிச்சு போகயில
அற்பனுக்கு வாழ்வு பொறந்த கதை ஒன்னு உண்மையாகும்...

வேறேதும் வேணாமே என் மடியில் தல சாய்த்து
நீயுறங்கும் நாளொன்றில் என் சீவன் போனாலும் கவலை எனக்கில்லையடி...

Jul 2, 2011

கிழிகிறது முகத் திரை..


ஒவ்வொரு முறையும் என் மணல் வீட்டை
கலைத்து போகிற காலடிகள்
யாருடையதாக இருக்கும் என்று தெரியவில்லை
சில சமயம் என் கால்களையும்
சந்தேகப் படத் தோன்றுகிறது...

சிறு புறாக் குஞ்சு
மரத்தடியில் கிடக்க...
மரத்திலேறி கூட்டில் வைத்து
தாய் பறவை வருமென வலையும்
விரிக்கிறேன் என் வீட்டில்
புறாக் கூண்டு வெறுமை என...

செய்து விட்ட தவறுகளுக்கு
உறுத்தல் இல்லாமலா போகும்,
நாளை பார்க்கலாம்
வருவது வரட்டுமென
கிழிகிறது முகத் திரை..

அதிகாலை விண்மீன் கூட்டங்களை
காட்டி மயக்கியவாறே
நிலவை திருடிச் செல்லும் என்னை
காட்டிக் கொடுக்காத
இருள் இருக்கும் வரை மட்டுமே
நல்லவனாய் நடிக்க வைக்கும் பகல்...

கண்ணாடி தொட்டிக்குள் வண்ண
மீன்களாய் வரவேற்பறையில்
படுக்கையறையில் யாருக்கும் தெரியாமல்
ஒளித்து வைக்கப் படுகிறது
என் ஆணாதிக்க சமன்பாடுகள்...

உனக்கான எல்லா வசதிகளும்
கிடைக்கும் ஆனாலும் நீ
என் அனைத்து முடிவுகளுக்கும்
சரி என்று தலையசைக்கும்
அந்த நொடிவரை...

நீ தோற்கும் பொழுது
என் புன்னகையை மறைத்து
உனக்காக விசும்புவேன்...
மனதில் நீண்டு கொண்டே
செல்கிறது கோரை பற்கள்...

எல்லாம் சரியாகிவிடும்
என் சாவில்
நல்லவனென்று நீயும் சொல்வாய்
நரகத்தில் என் இடத்தை
யாராலும் நிரப்ப
முடியாதென எனக்குத் தெரியும்...

Jun 18, 2011

ம்ம்ம்ம்ம்ம்....


உன்னால் அதிகமாய்
உச்சரிக்கப் பட்ட ஒரே வார்த்தை
இது தான்...

இது வார்த்தையா,எழுத்தா?
என்னிடமிருக்கும் போது
எழுத்தாகவும்
உன்னிடமிருந்து வரும் போது
வார்த்தையாகவுமே
இருப்பதால் தடுமாறி போகிறேன் நான்!!!!

காலையில் படுக்கை அருகே
தேநீர் வைத்து எழுப்பும் போது
சலிப்பாய் ஒரு ம்ம்ம்ம்...
எழுந்து உடல் வளைத்து
சோம்பல் விடும் போது
உதடு சுளித்து ஒரு ம்ம்ம்ம்....
சரி என்று தலை அசைத்தலும்,
வேண்டாம் என மறுத்தலிலும்,
உதடுகளை உள் மடித்து...
புருவம் உயர்த்தி...
இப்படியாய் சில ம்ம்ம்ம்.....

எத்தனை கூட்டத்தில்
இருந்தாலும் என்னை எச்சரிக்கும்
ஒற்றைச் சொல்!
எத்தனை முறை கோபப்பட்டாலும்
என்னை குளிரவைக்கும்
ஒரு எழுத்து!!

கண் மூடி கதை கேட்கும்
நேரம் இடையிடையே மெலிதாய்..
மழை சாரல் நனையும் போது புன்னகையாய்....
வேகமான பயணத்தில் கட்டிக் கொண்டு காதோரமாய்...
ஒற்றை எழுத்தில்
எத்தனை விதம்
எத்தனை உச்சரிப்பு...

இன்னும் சொல்லாத "ம்ம்ம்ம்" கள்
நிறைய....
சொல்லி விட முடியாத "ம்ம்ம்ம்" களும்
நிறைய....

சொல்லிவிடாதே என்கிறாய்...
"ம்ம்ம்ம்" என்ற எச்சரிக்கையோடு...

Jun 11, 2011

முத்தங்கள்....


அதிகாலை வேளை
நெற்றியின் மீது
மென்மையாக இதழ் பதித்து
என்னை துயில் நீக்குவதில்
துவங்குகிறது
என் ஒவ்வொரு நாளும்....

வெட்கத்தோடு

நீ முத்தம் கேட்க
அன்றைய தினத்தின்
என் நாட் குறிப்பு
சிவந்து போய் கிடக்கிறது...

இரைக்கு காத்திருக்கும்

ஒரு புலியின் வேட்கையோடு
எப்பொழுதும் உன் உதடுகளில்
பதுங்கி இருக்கிறது
எனக்கான முத்தங்கள்....

எனக்கு தெரியாமல்

பின்னால் வந்து கட்டியணைத்து
கழுத்தில் புதைந்து
இதழ் பதிப்பாய்...
உலகின் போதை மாத்திரைகளுக்கு
மொத்தமாய் நீ விடும் சவால் அது...

மென்மையாய் தொடங்கி

வன்முறையில் குருதி
வழிய...
கைக் குட்டையில் இரு நாட்கள்
உதடு மறைத்த
ஒரு நினைவும் கூட...

ஒவ்வொரு முறை நீ

வெளி கிளம்புகையில்
என்னை அழைப்பாய்...
எனக்குத் தெரியும்
என் கன்னங்களில் ஈரத்தோடு
நான் திரும்புவேன் என்று...

ஏகாந்த இரவொன்றில்

கேட்டாய்...
கொடுத்த முத்தத்தில்
பிடித்த முத்தம் எதுவென?
இன்னும் கொடுக்காமல்
நீ மிச்சம் வைத்திருக்கும்
முத்தமென்றேன்....
தொடங்கி விட்டாய்
இதற்காகத் தானே காத்திருந்தாய்....