பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 2, 2011

கிழிகிறது முகத் திரை..


ஒவ்வொரு முறையும் என் மணல் வீட்டை
கலைத்து போகிற காலடிகள்
யாருடையதாக இருக்கும் என்று தெரியவில்லை
சில சமயம் என் கால்களையும்
சந்தேகப் படத் தோன்றுகிறது...

சிறு புறாக் குஞ்சு
மரத்தடியில் கிடக்க...
மரத்திலேறி கூட்டில் வைத்து
தாய் பறவை வருமென வலையும்
விரிக்கிறேன் என் வீட்டில்
புறாக் கூண்டு வெறுமை என...

செய்து விட்ட தவறுகளுக்கு
உறுத்தல் இல்லாமலா போகும்,
நாளை பார்க்கலாம்
வருவது வரட்டுமென
கிழிகிறது முகத் திரை..

அதிகாலை விண்மீன் கூட்டங்களை
காட்டி மயக்கியவாறே
நிலவை திருடிச் செல்லும் என்னை
காட்டிக் கொடுக்காத
இருள் இருக்கும் வரை மட்டுமே
நல்லவனாய் நடிக்க வைக்கும் பகல்...

கண்ணாடி தொட்டிக்குள் வண்ண
மீன்களாய் வரவேற்பறையில்
படுக்கையறையில் யாருக்கும் தெரியாமல்
ஒளித்து வைக்கப் படுகிறது
என் ஆணாதிக்க சமன்பாடுகள்...

உனக்கான எல்லா வசதிகளும்
கிடைக்கும் ஆனாலும் நீ
என் அனைத்து முடிவுகளுக்கும்
சரி என்று தலையசைக்கும்
அந்த நொடிவரை...

நீ தோற்கும் பொழுது
என் புன்னகையை மறைத்து
உனக்காக விசும்புவேன்...
மனதில் நீண்டு கொண்டே
செல்கிறது கோரை பற்கள்...

எல்லாம் சரியாகிவிடும்
என் சாவில்
நல்லவனென்று நீயும் சொல்வாய்
நரகத்தில் என் இடத்தை
யாராலும் நிரப்ப
முடியாதென எனக்குத் தெரியும்...

Jun 18, 2011

ம்ம்ம்ம்ம்ம்....


உன்னால் அதிகமாய்
உச்சரிக்கப் பட்ட ஒரே வார்த்தை
இது தான்...

இது வார்த்தையா,எழுத்தா?
என்னிடமிருக்கும் போது
எழுத்தாகவும்
உன்னிடமிருந்து வரும் போது
வார்த்தையாகவுமே
இருப்பதால் தடுமாறி போகிறேன் நான்!!!!

காலையில் படுக்கை அருகே
தேநீர் வைத்து எழுப்பும் போது
சலிப்பாய் ஒரு ம்ம்ம்ம்...
எழுந்து உடல் வளைத்து
சோம்பல் விடும் போது
உதடு சுளித்து ஒரு ம்ம்ம்ம்....
சரி என்று தலை அசைத்தலும்,
வேண்டாம் என மறுத்தலிலும்,
உதடுகளை உள் மடித்து...
புருவம் உயர்த்தி...
இப்படியாய் சில ம்ம்ம்ம்.....

எத்தனை கூட்டத்தில்
இருந்தாலும் என்னை எச்சரிக்கும்
ஒற்றைச் சொல்!
எத்தனை முறை கோபப்பட்டாலும்
என்னை குளிரவைக்கும்
ஒரு எழுத்து!!

கண் மூடி கதை கேட்கும்
நேரம் இடையிடையே மெலிதாய்..
மழை சாரல் நனையும் போது புன்னகையாய்....
வேகமான பயணத்தில் கட்டிக் கொண்டு காதோரமாய்...
ஒற்றை எழுத்தில்
எத்தனை விதம்
எத்தனை உச்சரிப்பு...

இன்னும் சொல்லாத "ம்ம்ம்ம்" கள்
நிறைய....
சொல்லி விட முடியாத "ம்ம்ம்ம்" களும்
நிறைய....

சொல்லிவிடாதே என்கிறாய்...
"ம்ம்ம்ம்" என்ற எச்சரிக்கையோடு...

Jun 11, 2011

முத்தங்கள்....


அதிகாலை வேளை
நெற்றியின் மீது
மென்மையாக இதழ் பதித்து
என்னை துயில் நீக்குவதில்
துவங்குகிறது
என் ஒவ்வொரு நாளும்....

வெட்கத்தோடு

நீ முத்தம் கேட்க
அன்றைய தினத்தின்
என் நாட் குறிப்பு
சிவந்து போய் கிடக்கிறது...

இரைக்கு காத்திருக்கும்

ஒரு புலியின் வேட்கையோடு
எப்பொழுதும் உன் உதடுகளில்
பதுங்கி இருக்கிறது
எனக்கான முத்தங்கள்....

எனக்கு தெரியாமல்

பின்னால் வந்து கட்டியணைத்து
கழுத்தில் புதைந்து
இதழ் பதிப்பாய்...
உலகின் போதை மாத்திரைகளுக்கு
மொத்தமாய் நீ விடும் சவால் அது...

மென்மையாய் தொடங்கி

வன்முறையில் குருதி
வழிய...
கைக் குட்டையில் இரு நாட்கள்
உதடு மறைத்த
ஒரு நினைவும் கூட...

ஒவ்வொரு முறை நீ

வெளி கிளம்புகையில்
என்னை அழைப்பாய்...
எனக்குத் தெரியும்
என் கன்னங்களில் ஈரத்தோடு
நான் திரும்புவேன் என்று...

ஏகாந்த இரவொன்றில்

கேட்டாய்...
கொடுத்த முத்தத்தில்
பிடித்த முத்தம் எதுவென?
இன்னும் கொடுக்காமல்
நீ மிச்சம் வைத்திருக்கும்
முத்தமென்றேன்....
தொடங்கி விட்டாய்
இதற்காகத் தானே காத்திருந்தாய்....

Jun 8, 2011

கனவுகளின் சொந்தக்காரன்


அன்பு தோழனே!!!
நலமா?
நள்ளிரவு பொழுதுகளில்
மெல்லிய இசையோடு என் உறக்கம்
தொலைத்த இரவுகளுக்கு காரணம்
உன் நினைவுகள் என்பதை
பகலில் உன்னிடம் சொல்ல
முடியுமா என்ன?

என் காதுகளில் மென்மையாய்
இசைக்கிறது சுசீலாவின்
"உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்"
நினைவுகள் உன்னை சுற்ற தொடங்குகிறது...

பதின் வயதில் நான்
தொலைத்து விட்ட என்
மெல்லிய உணர்வுகளை...
இதயம் வருடும் கவிதைகளை, காதலை...
என்னிடமிருந்து எனக்காய்
மீட்டுத் தந்தவன் நீ...

உறவுகளின் பாசமும்
நட்பின் அரவனைப்புமாய்
வாழ்ந்த என்னில்
பரிதவிப்பின் சுகத்தையும்
காத்திருத்தலின் துடிப்புகளையும்
கற்றுக் கொடுத்தவன் நீ...

பேசி சிரித்த
சில நாட்களுக்குள்
உன்னை பிரியும் சில நொடிகளுகாய்
கண்ணீர் நிறையும் விழிகளை
எவ்வாறு உண்டாக்கினாய்?

எனக்குள் ஒளித்து வைத்த
ஒருத்தியை
எனக்கே தெரியாமல் வெளிக் கொணர்ந்து
என்னிடமே அறிமுகப் படுத்தினாய்...
எப்படி முடிகிறது உன்னால் மட்டும்?

மலர்களை,
பனித் துளியை,
மழையின் குளுமையை,
நதியின் சலசலப்பை,
விண்மீன் கூட்டங்களை ரசிப்பவள் தான்...
யாரிடமும் சொல்லியதில்லை...
உன்னிடம் மட்டும் என் இந்த மாற்றம்?

மடியில் உறங்குவது போல நடிக்கும்
என் கையில் வளையல்களை
எத்தனை முறை எண்ணிக் கொண்டிருப்பாய்
காதோர சுருள் முடிகளை ரசித்துக் கொண்டே...

நெற்றியில் படரும் வியர்வைத் துளிகளை
உன் மெல்லிய முத்தத்தால்
துடைக்கும் முயற்சியில் அதிகம்
வியர்க்கிறது எனக்கு....

முழு நிலா இரவுகளில்
நீ ஊட்டிவிடும் நிலாச் சோறு,
கைகோர்த்த மாலை நேர சிறு நடை,
கனவுகளில் சிணுங்கல்,
தலையணை சண்டை,
எண்ணி முடிக்காத நட்சத்திரம்
இவ்வாறு எனக்கான உணர்வுகளை
தேடும் உன்னை என்னவென்று சொல்ல...

அடை பட்டு கிடந்த
சிறு பறவை ஒன்றின் சிறை கதவுகளை
திறந்து கனவுகளின் வானத்தில்
பறக்க வைத்தவன் நீ..
என் கால்களிலும் கழுத்திலும்
விலகாத நிரந்தர தளைகள்
இன்னமும்...
தெரியும் தானே உனக்கும்?

உண்மையை சொல்வதெனில்....
நீ உணர்வுகளின் காதலன்
நானோ?
நிகழ காலத்தின் கைதியாய்....
இருவரும் பறந்து திரிவோம்
கனவுகளில் மட்டுமாவது....

சற்று திரும்பி படுக்கும் பொழுது
நினைவு வருகிறது நான் இருப்பது
என் நிஜத்தில்....
இன்னும் இசைக்கிறது
சுசீலாவின் குரல்...
"மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ......"

இப்போதைக்கு என்னால்
முடிந்தது ஒன்று மட்டுமே...
கவனமாய் இரு..
ஏனெனில் என் கனவுகளின்
சொந்தக்காரன் நீ...