பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 5, 2012

அன்றாடம் நீ பேரண்டத்தின்…


அன்றாடம் நீ பேரண்டத்தின் ஒளியுடன்
விளையாடுகின்றாய்.
நுண்விருந்தாளியே, நீ மலரிலும் நீரிலும் வருகின்றாய்.
நாளும் ஒரு மலர்க் கொத்தைப் போல் என் கைகளில்
நான் இறுக ஏந்தும்
இந்த வெள்ளைத் தலை மட்டுமா நீ?

எவளும் உனக்கு நிகரில்லை,
நீ என் காதலி என்பதால்.
மஞ்சள் பூமாலைகளிடையே உன்னை நான்
விரித்துப் போடட்டுமா?
யாரது, தென்புலத்து நட்சத்திரங்களிடையே
புகையெழுத்துகளால் உன் பெயரை எழுதுவது?
, நீ தோன்றுவதற்கு முன்னர் எப்படியிருந்தாய் என
நினைத்துப் பார்க்க முயல்கிறேன் !

திடீரென ஓலமிடும் காற்று மூடிய என் வீட்டுச்
சாளரத்தின் மீது மோதுகிறது.
நிழல் மீன்கள் நிறைந்த வலையாக வானம்.
பற்றியிருந்த அனைத்தையும் இப்பொழுதோ பிறகோ
விட்டுவிடுகிறது காற்று.
அவள் உடைகளை அகற்றுகிறது மழை.

புள்ளும் பறக்கின்றன, விரைந்து.
காற்று, காற்று.
மனிதரை எதிர்க்கும் ஆற்றல் எனக்கு மட்டுமே உண்டு.
வானத்தில் நேற்றிரவு நிறுத்திய தோணிகளைக்
கட்டறுக்கும் புயல்
பழுத்த இலைகளையும் சுழற்றி அடிக்கிறது.

நீ இங்கிருக்கிறாய். , என்னை விட்டு
விலகி விடாதே.
என் கடைசி அழைப்புக்கும் விடையளி.
அச்சம் கொண்டது போல் என்னை
இறுக அணைத்துக் கொள்.
ஏதோ ஒன்றின் நிழல் முன்பொருமுறை உன்
கண்கலின் மீது படர்ந்தது.

இப்போது, இப்போதும், நீ எனக்கு மலர்களைக்
கொணர்கிறாய்.
அள்ளி வந்ததில் உன் கொங்கைகளும் மணக்கின்றன.
துயரக் காற்று வண்ணத்துப்பூச்சிகளைத்
துரத்திச் சென்று வதைக்கையில்
உன்னை நான் நேசிக்கிறேன்; என் மகிழ்ச்சி
உன் ப்ளம் இதழ்களைக் கடிக்கிறது.

அனைவரையும் அச்சுறுத்தி ஓட ஓட விரட்டும்
என் பெயர்,
தனிமையில் உழலும் என் முரட்டு ஆன்மா,
இவற்றுக்கு பழக்கபட நீ எவ்வளவு
சிரமப் பட்டிருக்க வேண்டும் !
விடிவெள்ளி நம் கண்களை முத்தமிட,
மங்கிய அதன் ஒளி நம் தலைமேல் விசிறி போல்
சுழல்வதை
எத்தனை முறை பார்த்திருந்தோம் !
என் சொற்கள் வருடிக் கொடுத்தவாறே
உன் மீது பொழிந்தன.
இதப் பேரண்டமே உனக்குச் சொந்தம்
என் நம்பும் அளவிற்கு
உன் வெயில் பட்ட முத்துச் சிப்பி மேனியை
நான் நேசித்தேன்.


மலைகளிலிருந்து இன்ப மலர்கள், நீலப் பூக்கள்
கரும் ஹேசல் மலர்கள்,
முரட்டுக் கூடை நிறைய முத்தங்களுடன்
நான் வருவேன்.
செர்ரி மரங்களோடு வசந்தம் என்ன செய்கிறதோ
அதையே உன்னிடம் நான் செய்ய விரும்புகிறேன்.

இந்த அந்திமாலையைக் கூட…


இந்த அந்திமாலையைக் கூட நாம் இழந்துவிட்டோம்
துயர இரவு இவ்வுலகின் மீது கவிந்தபோது
நாம் கையோடு கைகோர்த்துச் சென்றதை
யாரும் பார்க்கவில்லை
தொலை தூர மலைமுகடுகளில் அஸ்தமனத்
திருவிழாவைச்
சாளரத்தின் வழியே நான் பார்த்திருக்கிறேன்.

சில சமயங்களில் ஒரு துண்டுச் சூரியன்
என் கைகளுக்கிடையே ஒரு நாணயத்தைப் போல்
சுடர் விட்டது.

என் துயரத்தைப் பற்றித் தான் நீ அறிவாயே-
அது என் ஆன்மாவை இறுகப் பற்றுகையில்
உன்னை நான் நினைத்துப் பார்த்தேன்.

அப்போது நீ எங்கே இருந்தாய்?
வேறு யார் உன்னோடு இருந்தது?
அவன் என்ன சொன்னான்?
துயருறும் போதும், நீ எங்கோ இருக்கிறாய்
என் உணரும் போதும்
காதல் என்னை ஏன் முழுமையாக ஆட்கொள்கிறது?

ஒவ்வொரு மாலையும் நான் படிக்கும்
புத்தகம் கீழே விழுந்தது.
அடிபட்ட நாயைப் போல் என் அங்கி
காலருகே சுருண்டு கிடந்தது.

சிலைகளை அழிக்க அந்தி எங்கே செல்கிறதோ
அங்கே நீ மாலைதோறும் மாலை தோறும் விலகிச்
சென்று கொண்டே இருக்கிறாய்.