பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 12, 2012

முக நூல் 12.07.12



பெயர்களும்
ஊரும்
மறந்து போகிறது
முகம் அப்படியே தான் மனதில்...

மௌனத்தின் பொருள்
பேச எதுவுமில்லை
என்பதாக இருப்பதில்லை...

இன்னமும் கூட
எல்லாக் கனவுகளையும்
புதைத்துத் தான் வைத்திருக்கிறேன்
மனதில்...

நான்
நீ
சேர்ந்தால்
நாம்
பிரிந்தால்
ஞாநி...


 

ஊர் கிணறு...



தினமும் மாலை நேரத்தில்
தோழிகளுடன்
கிணற்றடி வருகிறாய்
நீரிறைத்து
திரும்புகையில்
நிறைகிறது அக் கிணறு... 

உன் பிம்பம் பார்த்தே
தன் தாகம் தீர்த்தது
அக் கிணறு...
 

நீ தோழிகளோடு
பேசிச் சிரித்த கதைகளை
யாருமில்லா நேரத்தில்
எனக்குச் சொல்லிச் சிரிக்கிறது
ஊர் கிணறு...

தெருவின் மூலையில்
நீர்க் குழாய் வந்த பிறகு
உன்னைப் பார்க்காமல்
பாழடைந்து கிடக்கிறது
அதே கிணறு...  

உன் வீட்டிற்குள்
நீர் இணைப்பு வர
தேவைகளே இல்லாமல் போனது
தெருவின் நீர்க் குழாய்கள்... 



நீ திருமணமாகிப் போன
நாளிலிருந்து
பேச்சுத் துணைக்கு
இருப்பதென்னவோ
நீரிறைக்கும் ஊர் கிணறு தான்... 

யாருமே செல்வதில்லை
எனும் போதும்
அக் கிணறு
இன்னும் இருக்கிறது
உன் நினைவுகளையும்
நீரையும்
சுரந்த படி... 

இந்நாளிலும்
சில இரவுகளை
நான் கழிப்பதுண்டு
உனக்கும் எனக்குமான
காதலை
அக்கிணறிடம் சொல்லியபடி...

எல்லா கிணறுகளுக்கும்
தெரியும் தான்
நீரிறைத்த பெண்களின்
முகமும் மனதும்...  

Jul 10, 2012

முனுமுனுக்கும் பாடல்...

அவனுக்கான பாடலை
அவனே முனுமுனுக்கட்டும் விட்டு விடுங்கள்
அவனிடம் தாளங்களைப் பற்றியோ
சந்தங்களைப் பற்றியோ
யாரும் கேட்காதீர்கள்
அவனுக்கு அவையெல்லாம்
தெரிந்து விட நியாயமில்லை
பல்லவிகளும் சரணமும் அற்று
அவன் பாடல் ஒலிக்கும்
உங்களால் அவன் பாடலை
ரசிக்க முடியாமல் போகலாம்
அவனைக் குற்றம் சொல்லாதீர்கள்
அவனிடம் உங்களுக்கான
ஒரு ராகத்தை எதிர்பார்க்காதீர்கள்
அவன் தன் துயரத்தைப் பாடுகிறான்
அவன் தன் மகிழ்வைப் பாடுகிறான்
அவன் தன் இயல்பைப் பாடுகிறான்
அவன் பாடுவது பாடலே இல்லையெனும் போதும்
அவன் தன் வாழ்விற்காகவும் பாடக் கூடும்
இன்னுமொரு உயிரின் நினைவுக்காகவும்
பாடியபடியே இறந்து விடவும் கூடும்...

இருள் கவிதை....

புகைப்படம்: யதேச்சையாய் தொடும் பாவனையில்
உன் விரல்களை வருடுகிறேன் 
மெல்லப் பரவுகிறது 
என் உடலின் தகிப்பு உன்னுள் 
சற்றே நெருங்கி அமர்கிறேன் 
கண்களோடு கண்கள் கலந்து விடுவதைச்
சொல்லி விழிகளோடு பேசுகிறேன் 
கரங்களைக் கோர்த்துக் கொள்கிறேன் 
விடு படும் நிலையில் நீயுமில்லை 
விட்டு விடும் நிலையில் நானுமில்லை 
அங்கே துணிகள் சிதறிக் கிடந்தன 
முன் கதவு பூட்டப் பட்டிருந்தது 
வந்துவிடாத  நிலவை 
உன் கனவுக்குள் புகுத்துகிறேன் 
சன்னலின் திரைகள் அசைகின்றன 
காற்று தழுவ கூந்தல் சரிகிறது 
நெற்றி வகிட்டில் தொடங்கிய முத்தம் 
விடியும் போதும் முடியவே இல்லை
இடையிடையே கவிதைகளைச் சொல்கிறேன் 
சிரிக்கிறாய் என்னில் சாய்ந்தபடி 
அதன் பொருள் உணர முடியவில்லை 
இது எனக்கு சாதகமான பொழுது 
பயன் படுத்திக் கொள்ள யத்தனிக்கிறேன் 
கதவு தட்டப் படும் வரை 
இருவரையும் காப்பாற்றக் கூடும் 
சுற்றிலும் விரவிக் கிடக்கும் இருள்...
யதேச்சையாய் தொடும் பாவனையில்
உன் விரல்களை வருடுகிறேன்
மெல்லப் பரவுகிறது
என் உடலின் தகிப்பு உன்னுள்
சற்றே நெருங்கி அமர்கிறேன்
கண்களோடு கண்கள் கலந்து விடுவதைச்
சொல்லி விழிகளோடு பேசுகிறேன்
கரங்களைக் கோர்த்துக் கொள்கிறேன்
விடு படும் நிலையில் நீயுமில்லை
விட்டு விடும் நிலையில் நானுமில்லை
அங்கே துணிகள் சிதறிக் கிடந்தன
முன் கதவு பூட்டப் பட்டிருந்தது
வந்துவிடாத நிலவை
உன் கனவுக்குள் புகுத்துகிறேன்
சன்னலின் திரைகள் அசைகின்றன
காற்று தழுவ கூந்தல் சரிகிறது
நெற்றி வகிட்டில் தொடங்கிய முத்தம்
விடியும் போதும் முடியவே இல்லை
இடையிடையே கவிதைகளைச் சொல்கிறேன்
சிரிக்கிறாய் என்னில் சாய்ந்தபடி
அதன் பொருள் உணர முடியவில்லை
இது எனக்கு சாதகமான பொழுது
பயன் படுத்திக் கொள்ள யத்தனிக்கிறேன்
கதவு தட்டப் படும் வரை
இருவரையும் காப்பாற்றக் கூடும்
சுற்றிலும் விரவிக் கிடக்கும் இருள்...