பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 11, 2011

திசைகளற்ற பறவையென


சரி என்று சொன்ன ஒற்றை நொடியில்
துவங்கும் புதிதாய் ஒரு பயணத்தில்
இழக்க நேரிடுகிறது
திரும்ப இயலா சில இடங்களையும்...
இரு உயிர்களின் கலத்தலை விட
கடினமானதாகிறது
இரு மனங்களின் புரிதல்களும்
தேடல்களும்...
வேறு வழிகள் இன்றி
சமரசங்களில் நீந்தி
கரை சேர்வோம் இருவரின்
கட்டப் பட்ட கைகளுடன்...
எனக்கான கவிதைகளும்
மெல்லிய இசைகளும்
இன்று வரை
உன்னை சேரவே இல்லை...
உடலின் வெப்பத்தில்
குளிர் காய்ந்த பொழுதில்
சில நேரம் மகிழ்வும்
பல நேரம் வெறுப்புமாய்...
இருந்தும் என்ன
அன்பை பகிரவும்
என்னை நேசிக்கவும் புதிதாய்
ஒரு உயிர் உன்னைப் போல...
வரவு செலவு
கணக்குகளில்
கழிந்து கொண்டே போகும்
காலங்கள்...
சுமைகளுடன் நான் திணறிய
கணமொன்றில் நீ
தாங்கிப் பிடிக்கிறாய்
கடமைகளின் கரங்களில்...
புதிதாய் உடைகளும்
அணிகலன்களும்
வித விதமான உணவுகளுமாய்
உறவுகளின் கூடுதலுமாய்
சுகமே என் சூழல்கள்...
திசைகளற்ற பறவையென
ஒவ்வொரு முறையும்
உன் கூட்டிற்கே வருகிறேன்
தாய்ப் பறவையென மாறிய பின்...
உன் நேசமும்
பாசமும் பொய்யென
போய் விடப் போவதில்லை...
இருந்தும்
என்னை ரசிக்கும்
எனக்கான கவிதைகளை
வார்க்கும் ஒருவனை
ரகசியமாய் வளர்க்கிறேன்
உனக்கு தெரியாமல்
எனக்குள்ளே...
என் தனிமைக் கனவுகளையும்
கையிலிருக்கும் மலர்களையும்
அவனுக்கென்றே
வைத்திருக்கிறேன் எப்பொழுதும்...

புரிதல் என்பது


ஜன்னலின் ஓரங்களில்
தேங்கி நிற்கும் மழைத்துளிகளில்
புதிதாய் ஒரு கடல்
அதனுள் நான்...
எதிர்பார்ப்பதும்
ஏமாறுவதும்
என் தொழில்
அதை ஏன் எச்சரிக்கிறாய் நீ..
உன்னிடம் எதிர்பார்க்காமல்
யாரிடம்?
புரியவில்லை எனக்கு
உன் வார்த்தை சூட்சமங்கள்...
சொல்லிப் போவதிலும்
சொல்லாமல் போவதிலும்
வேறுபாடுகளே இல்லை
சொல்வதை கேட்கிறேன்
என்பதை தவிர...
காத்திருத்தல் என்னில் ஒரு
மோசமான வியாதி
காத்திருக்கிறேன்
சரியான ஒரு தவறுக்கு...
நீயாகப் புரிந்துகொள் என்பாய்
புரிதல் என்பது
நானாக கற்பனை செய்வதல்ல
உன்னிடமிருந்து
தாமதமாக தெரிந்து கொள்ளும்
உண்மை மட்டுமே...
எல்லோரிடமும் சொல்ல முடியாததை
உன்னிடம் சொல்கிறேன்
என்னிடம் சொல்ல கூடாதென
சிலவற்றை நீ எப்பொழுது
வைத்திருக்கிறாய் உன்னுள்...
நதியின் கரையில்
கட்டுண்ட பரிசலென
எப்பொழுதும்
உன் வாழ்வின் ஒரு ஓரத்தில்
மட்டுமே கட்டப் பட்டிருக்கிறேன்...
கடல் ஒன்றின்
ஓரத்தில் ஒதுங்கிய
கிழிஞ்சலென மணலில்
புதையுண்டே கிடக்கும்
என் புதைபடா நேசமும்...
ஜன்னலோரத்தில்
தேங்கும் கடல் வடிகிறது
உன்னிடம் சொல்ல
இன்னும் ஒன்று
எனக்கென நான் சிரித்து
எத்தனை நாட்கள் ஆனது?

Sep 7, 2011

மரணமொன்று


மரணங்கள் புதிரானவை....
சில நண்பர்களின்...
முகம் மட்டுமே தெரிந்த சிலரின்...
முகம் கூட தெரியா பலரின்....
நினைவிலிருந்து கொண்டே
இருக்கிறார்கள்!!!
மருத்துவ மனையில்
இறுதி நாளில்
என்னோடு பேச ஆசைப் பட்ட
நண்பன் என்ன சொல்ல நினைத்திருப்பான்
விபத்தொன்றில்
எல்லோரையும் காப்பற்றி
வாகனத்தை ஓட்டிச் சென்றவன்
மட்டும் இறந்து போனானே ஒருவன்
அரளி விதையை அரைத்துக் குடித்த
பக்கத்து வீட்டுப் பெண்ணும்
புடவையில் குழந்தையை
கட்டிக் கொண்டு
ஊர்க் கிணற்றில் விழுந்து மிதந்த
ஒருத்தியும்
ஏன் இன்னும் நினைவை விட்டு
போகவே இல்லை
வீட்டுக் கூரையில்
தொங்கிய அண்ணனும்
கோவிலுக்கு சென்று
உடலாய் திரும்பிய அடுத்த தெருக்காரரும்
துணியில் சுற்றப்பட்டு
மருத்துவ மனையில்
கொடுக்கப் பட்ட பச்சை குழந்தையும்
இங்கே அனைவருக்குமே
மரணம் ஒன்று தானோ?
இவர்கள் மட்டும் ஏன் நினைவிலேயே
எத்தனையோ
இறந்தவர்களின் அடக்கத்தில்
நான் இருந்திருந்தும்
இவர்கள் மட்டும் இன்னமும்...
அகால மரணங்கள்
மனதை விட்டு
எளிதில் விலகுவதில்லை தான்
கும்பகோணமும்
சுனாமியும் சுமக்க முடியா
வலிகளாய்...
ஒரு மரணத்திற்கு
செல்வதை விட
மரணத்தை எதிர் நோக்கியிருக்கும்
ஒருவரை
காணச் செல்வது
கொடுமையானது...
மௌனமாய் அமர்ந்து
வார்த்தைகளின்றி
கண்களில் நீர் வழியும் நிலை
கொடூரம் தான்...
....
........
...........
எல்லாம் போகட்டும்......
உடலால் புதைந்து போனவர்களை விட
வெறும் உடலை சுமந்து
கொண்டு
புதைக்கப் பட்ட மனதினை
கொண்டிருப்பவர்களுக்காக
விழித்துக் கொண்டிருக்கிறது
என் மரணம்....

நிறைவேறா கனவொன்று...

இங்கு திருமணங்கள்
எல்லாம் சொர்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றன...
எல்லோருக்குமே வாய்ப்பதில்லை
ஆசைப் படும் வாழ்வு...
கவிதையாய்
கனவுகளாய்
ஒவ்வொரு விதைகளாய் நடப்பட்டு
ஒரு அழகிய மலர்ச் சோலை
என
அனைவரினுள்ளும் ஒரு
வாழ்க்கையின் தேடல்...
இளமைக் கனவுகள்
யதார்த்த வாழ்வில்
வெறும் கதைகளிலே மட்டுமே
சாத்தியமாகிறது ...
கவிதைகளும்
கனவுகளும்
கற்பனை கோட்டைகளும்
கலைந்து போக
படிப்பும்
பதவியும்
பண வசதியும்
எழில் தோற்றமும்
தீர்மானிக்கும் பெரும்பாலும்
நிகழ் காலத்தை....
மனதின் தேவைகளை விட
ஒப்பந்த சித்தாந்தங்களே
மணமேடையில்
அமர்கின்றன...
காலம் கரையும்
கட்டுப் பாடுகளோடு....

தெரிந்து கொள்ளும் ஆர்வங்கள்
ஆசைகளென மிளிர
ஆசைகள் விருப்பகளாய்
விருப்பங்கள் தேவைகளாய்
தேவைகள் பழக்கமென
மாறிப் போய்
பழக்கங்களின் அடிமைகளாய்
நாம்....
பாடவும்
ஆடவும்
விளையாடிக் கொண்டும்
இருந்த பெண்கள்
மஞ்சள் கயிறில்
கட்டுண்டு...
பொருளாதார தேவையும்
போட்டி உலகமுமாய்
வியாபார சிந்தனைகளோடு
சிக்குண்ட மூளையுமாய்...
தனித் தனியான
உலகங்கள் ஒரே
வீட்டில் மட்டுமல்ல
ஒரே படுக்கையறையிலும்...
கனவுகளை தொலைத்த
ஒருவனின் இரவுகள்
மதுவின் மயக்கத்தில்
விரிகின்றது
கானல் நீரென...
அனைத்தும் புதைத்த
பெண்களுக்கு
அடுப்படியும்
குழந்தைகளும்
ஆறுதலாய்...
சொந்தங்கள்
உறவுகள்
சமூக சம்பிரதாயங்கள்
தேவைகளின் தூண்டல்கள்
மட்டுமே இன்னமும்
பேச வைத்துக் கொண்டிருக்கிறது
நல்லதொரு குடும்பமென்று...
அன்றாட மன்னிப்புகளிலேயே
தினமும் படுக்கைகள்
விரிக்கப்படுகின்றன...
தெரிந்தே இருந்தாலும்
விதிவிலக்காய்
விட்டு விடுவதில்லை
எந்த பெண்ணையும் ஆணையும்
மீண்டும் ஒரு முறை
அதே கணக்குகள்
அதே இரவுகள்
அதே மன்னிப்புகள்
வேறு வேறான உலகங்கள்...

காதலாகவே
வாழும் சிலரை
விட்டு விடலாம்
அவர்கள்
நிச்சயம் யதார்த்தமென
சொல்லும் வாழ்வை
மறந்தே இருக்கட்டும்...
எனக்கும் சொல்கிறாய்
நீ
உனக்கென ஒருத்தி
வேண்டுமென்று...
கானல் நீரில்
நான் தேடுவது
கவிதைகளை மட்டும் தான்
பசிக்கான மீன்களையோ
உடல் வருடும் விரல்களையோ அல்ல...
ஆகவே
இங்கு
இன்னுமும்
ஒளித்து வைத்து
யாருக்கும் தெரியாமல்
சிந்தும் பலரின் கண்ணீர்த்
துளிகளில்
மீதமிருக்கிறது
நிறைவேறா கனவொன்று...